Monday, May 16, 2011

இருவர்

 டிஸ்கி : இருபது நாளைக்கு முன்னால் போட்டிருக்க வேண்டிய பதிவு. தாமதத்திற்கு காரணம் ,கவனம் சிதற விடாமல் பார்த்தாக வேண்டிய அரசியல் சூழல் :)  நீங்களும் அதிலிருந்து மீண்டு வந்து வேறு விஷயங்களில் பார்வையை செலுத்துங்கள். 




பாலச்சந்தருக்கு  பின்னால்  தாதா  சாஹேப்  பிறந்திருந்தால்  அவருக்கு  பாலசந்தர்  விருது  கிடைப்பது  மிக  கடினம் .ஒரு  தனி  மனிதன்  தான்  இயக்கிய  81   படங்களில்  ஏறத்தாழ  எல்லா  படங்களும் (வசூலில் 
சாதிக்கிறதோ    இல்லையோ  ) ரசிகர்கள்  மனதை  கொள்ளை அடிப்பதில் வெற்றி பெறுவது  சாதாரண  காரியம்  அல்ல ..

எப்போதும்  இவர்  படங்களின்  கதையும் , உள்விஷயமும் ரிலீஸ் ஆகும்  காலத்தை  விட  20 வருடங்கள்  முன்னால்  இருக்கும் .இவரைப்  போல்  எண்ணிலடங்கா  நடிகர்களை  , மற்ற  தொழில்நுட்ப  கலைஞர்களை அறிமுகப்படுத்தியவர் எவரும்  இல்லை . ஒரு  நடிகனைப் பிடித்து விட்டால்  அவனை  வைத்து  பல  படங்கள்  எடுப்பார் . ஆனால் பார்க்கும் நமக்கு
சலிப்பு  இம்மியும்  தெரியாதபடி பாத்திரப்  படைப்பு  மாறியிருக்கும்.

இவர் இல்லை என்றால் கமல் இந்தளவுக்கு  வந்திருக்க  முடியாது .ரஜினி வந்திருக்கவே    முடியாது .

கேபியின் சில முத்திரைகள் :

காட்சியை  புதுமைப்படுத்துவதை  தமிழுக்கு அறிமுகம் செய்தவர்  இவரே . இவர் ஒருவர் பத்து பாக்கியராஜுக்கு  சமம் .
 
இவரின் படங்களில் இசைக்கு பெரிய பங்கு  இருக்கும் . எதாவது ஒரு பாத்திரம்  இசை  பித்தராக  இருக்கும் .
 
படத்தின் சில நிகழ்வின்  விளைவுகளை  வெறும் புகைப்படங்களை வைத்தே  சொல்லும் உத்தியை  இவருக்கு  முன்னும் பின்னும் யாரும் செய்யவில்லை .
 
இவரின்  நகைச்சுவைப்படங்கள்  காலம் கடந்தும் மக்கள் மனதில் இன்னும்  நிறைந்து  நிற்கின்றன .
பாமா  விஜயம்  , பூவா  தலையா , தில்லுமுல்லு  என  இன்னும் தமிழர்கள்  வீடுகளில் இவர் படங்களின் வீடியோ  வரிசை  இருக்கிறது .
 
 நாயகனை  விட  நாயகிக்கு  முக்கியத்துவம்  இருக்கும்.பெரும்பாலும்  அவள்  பணிந்து  போகாமல்  புரட்சி  பெண்ணாக  இருப்பாள்.
கண்டிப்பாக  அவளுக்கு  எதோ  ஒரு மேனரிசம்  இருக்கும். உச் கொட்டுவது  ; கண்  சிமிட்டுவது  ; தலையாட்டுவது  என .
 
இவரின் ஒவ்வொரு படமும் வெளியாகும்போதும் அது  மக்களால்  மிக  அதிகமாக எதிர்மறையாக  விமர்சிக்கப்படும் . இவர்  அதற்கு  என்றும்  பதிலோ  மறுப்போ சொன்னதில்லை . காலம் கடந்தப் பின்  மக்களாகவே  இவரின்  காட்சிகள்  நிகழக்கூடியவைதான்  என ஒத்துக்கொள்ளும்  நிலை  வரும் .
அப்படி  ஒரு முற்போக்கு  சிந்தனையை  தன்  படங்களில் தைரியமாக  வைத்தவர்  கே பி .

இவரின்  புதுமையான  காட்சி  அமைப்புக்கு  ஒரு  உதாரணம் - 'அச்சமில்லை  அச்சமில்லை ' படத்தின்  உச்சக்கட்ட  காட்சி .
 
 

நான்கு  முறை  தேசிய  விருது  பெற்றவர் .
1969 இரு  கோடுகள்  
1975 அபூர்வ  ராகங்கள்  
1981 தண்ணீர் தண்ணீர்  
1984 அச்சமில்லை  அச்சமில்லை  

கலைமாமணி  மற்றும்  பத்மஸ்ரீ  விருதுக்கும்  சொந்தக்காரர் .இப்பொது  இந்தியாவின் உயரிய  விருதான  தாதா  சாஹேப்  விருதும்  இவரைத்  தேடி  வந்துள்ளது . இதுவும்  ஒரு காலம்  கடந்த  விருதே . 
 
இப்படி யாருக்காவது விருது கொடுக்கும்போதெல்லாம் மனதில் ஓரம் கோபமும் வலியும் மாறி மாறி வருவதை உணர முடிகிறது. காரணம் - நாகேஷ்.
 

பாலசந்தர் சாதித்ததைப் போலவே பல சாதனைகளை புரிந்தவர் . கடைசி வரை அவருக்குரிய எந்த கௌரவமும் கொடுக்கப்படாமல் காலம் கடந்து விட்டது. யாரை குற்றம் சொல்ல? 

இந்த கேள்விக்கு நாகேஷே பதில் சொல்கிறார். ஒரு விழாவில் 'வாழ்நாள் சாதனையாளர் விருதை'ப் பெற்றுக் கொண்டு பேசிய நாகேஷ் சொன்னது - 'தேசிய விருதோ அல்ல வேறு எந்த விருதோ இது வரை நீங்க என் வாங்கல சார்-னு நெறைய பேரு கேக்கறாங்க  . உண்மை என்னனா இந்த மாதிரி விருதுக்கெல்லாம் இங்க இருக்குறவங்க யாராவது சிபாரிசு பண்ணனும். எனக்கு யாரும் பண்ணல.(விரக்தி கலந்த சிரிப்போடு ) பண்ணியிருக்கலாம்.பரவால்ல..இப்போ அதனால என்ன ? அதான் நீங்க எல்லாம் இருக்கறீங்களே.. '

ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லெவிஷுடன் நாகேஷை ஒப்பிடுவார்கள். நாகேஷ் நகைச்சுவைத் தாண்டி பல விஷயங்கள் தொட்டவர்.  சரியாக ஐம்பது வருடங்கள் திரையுலகில் கோலோச்சியவர். நாயகன் சிவாஜியோ, எம்ஜீஆரோ ,யாராக வேண்டுமானாலும்  இருக்கட்டும் ... உடன் நடிப்பது நாகேஷ் என்றால் படம் மினிமம்  கேரண்டீ ஹிட் .

ஆனால் எந்த ஒரு முக வசீகரமும் இல்லாமல் , இவர் நாயகனாய்  தோன்றிய தனி படங்கள் ,இவரை உச்சிக்கு வைத்தன - நீர்க்குமிழி,சர்வர் சுந்தரம் , எதிர்நீச்சல் எல்லாம் இவரின் முத்திரைகள். ஆனால் அடுத்து வந்த கமல் இவரை நன்றாக பயன்படுத்தியது மிக புத்திசாலித்தனம். கமல் நடிக்கும் படத்தில் ஒரு அழுத்தமான பாத்திரம் கண்டிப்பாக நாகேஷுக்கு இருக்கும். பிணமாகக் கூட நடித்திருக்கிறார்
 
அதிசயப்பிறவி , மௌனம் சம்மதம் , அபூர்வ  சகோதரர்கள் ஆகிய படங்களில் வில்லன் வேடம் இவருக்கு  கச்சிதம்.
 
நெஞ்சில் ஓர் ஆலயம் வார்டுபாயையும் ,காதலிக்க நேரமில்லை செல்லப்பாவையும் நினைவில் இருந்து அகற்ற முடியாது.
அன்பே வா ராமையாவையும் ,   எங்க வீட்டு பிள்ளை உளறுவாயனையும்  , அவ்வை சண்முகி ஜோசப்பையும் இப்போது  நினைத்தாலே கண் கலங்க சிரிக்கிறோம். 
 

கமல் சொன்னது - 'நாகேஷைப் பார்த்து பொறாமைப்பட்டு அவரைத் தாண்டி நடிக்க போராடியதால்தான் இன்று நானும் ஒரு நடிகன்'
ரஜினி சொன்னது - '  நாகேஷ் முன்னாடி நீ  ஒரு தூசி .. அவன் நடிப்பைப் பார்த்து ஒழுங்காக நடி என்று என்னை கேபி எச்சரித்திருக்காவிட்டால் இன்று உங்கள் முன் ரஜினி இல்லை'
 
ஒரே ஒரு முறை சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை ஆசிஷ் வித்யார்த்தியுடன் பகிர்ந்துக் கொண்ட ஆறுதலான விஷயமே இவருக்கு கிடைத்த கௌரவம். படம் - நம்மவர்.
 
நாகேஷுக்கு ஏன் விருதுகள் மறுக்கப்பட்டன ?  ரிக்ஷாக்காரனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை எம்ஜீஆர்க்கு கொடுக்க என்ன காரணம் என்று தேர்வுகுழுவிடம் சண்டை போடுவது தவறாக இருக்கலாம்.ஆனால் வருத்தப்பட்டு  அங்கலாய்க்கும் உரிமையாவது நமக்கு உண்டு.ஒருவேளை எந்த கட்சியிலாவது இணைந்திருந்தால் ,சூழ்நிலையைப் பொருத்து, நாகேஷுக்கு விருது தேடி வந்திருக்கும்.
 

எது  எப்படியோ  இது வரை கமலுக்கு கிடைத்திருக்கும் , கிடைக்கபோகும் விருதுகள்  நாகேஷுக்கான குரு காணிக்கையாய் இருக்கும் என்பதிலும் , இப்போது பாலச்சந்தருக்கு  கிடைத்திருக்கும்  விருதில் நாகேஷுக்கு பங்கு இருக்கிறது என்பதும் நிதர்சனம். 
 
கேபிக்கு வாழ்த்துக்கள்.

4 comments:

N.H. Narasimma Prasad said...

Super post Nanba. keep it up.

Unknown said...

Excellent Words... Ovvondrum Marukka Mudiya Unmaigal...

Anonymous said...

Good post....

Kaarthik said...

//பாலச்சந்தருக்கு பின்னால் தாதா சாஹேப் பிறந்திருந்தால் அவருக்கு பாலசந்தர் விருது கிடைப்பது மிக கடினம்// - உண்மை :-)

Post a Comment