Monday, January 31, 2011

கண்டனக்குரல்

கடலன்னையின் அன்பளிப்புகளை யாரும் வெறுமனே சென்று கவர்ந்து வருவதில்லை . உயிரை ஒரு கையிலும் துடுப்பை மறு கையிலும் பிடித்துக்கொண்டு  மீன்பிடிக்க செல்லும்போது எந்த ஒரு மீனவனும் ஒருமுறையாவது  கரையை திரும்பிப்பார்க்காமல் கடல் புகுவதில்லை. மீனவ வீடுகளில்  மனைவிமார்கள் தங்கள் தாலியும் வலையும் சேர்ந்தே பின்னப்பட்டுள்ளது என்பதை ஒவ்வொரு  வினாடியும் சிந்திக்காமல் இருப்பதில்லை.

எல்லா வேலைகளிலும் ஆபத்து உண்டு. ஆனால் கடல் சார்ந்த வேலையில் ஆபத்து மட்டுமே உண்டு. இயற்கை  எப்படி சீறினாலும் முதல் பலி , மீனவ சமுதாயத்தில் இருந்தே என்பது நிதர்சனம். ஒரு புயலோ மழையோ அல்லது சுனாமியோ அவர்கள் உயிரை கொள்ளை கொண்டு போகும்போது ,நாம் வருத்தமும் கண்ணீரும் சிந்தி நம் உச்சக்கட்ட வேதனையை காட்டுவோம். அதுவே நம்மால் இயன்றது. The Maximum we can do.

ஆனால் இது வேறு விஷயம் . ஒரு அநியாயம் பலமுறை அரங்கேறுகிறது . ஒருமுறை கூட யாரும் (உண்மையாக) எதிர்க்குரல் கொடுக்க வில்லை.  அங்கே இருந்து வரும் ஒவ்வொரு உடலும் இங்கு புதைக்கப்படும்போது கூடவே நம் தன்மானமும் , சகோதரப்பற்றும் சேர்ந்தே புதைக்கப்படுகிறது. 

சிங்களம் சீறி அடிப்பதில்லை ; சிரித்துக்கொண்டே அடிக்கிறது ; எதிர்ப்பு எதுவும் இல்லையென்பதால் , எதிர்ப்படும் அப்பாவி மீனவனுக்கு துப்பாக்கி குண்டுகளை அள்ளித் தெறிக்கிறது.கை அளவு இருக்கும் இலங்கைப்படைக்கு  தன் கடல் பகுதியை பாதுகாக்க மட்டுமன்றி இப்படி அட்டுழியம் செய்யவும் பலம் இருக்கும் என்றால் எண்ணிக்கை மிகுந்த இந்தியப்படைக்கு  என்ன இல்லை எதிர்க்க ?. இப்படி ஆரம்பித்தால் பல கேள்விகள் முளைக்கும் ; ஆனால் பதில் என்று கிடைக்கும்?

 சரி.. மத்திய அரசு   என்ன செய்தது ; மாநில அரசு என்ன செய்தது என்று கேட்பதை நிறுத்தி நாம் என்ன செய்யலாம் என்பதை மட்டும் சிந்திக்கலாம். முதல் கட்டமாக நம் தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசை எதிர்த்தும், தமிழ் நாட்டு மீனவர்களை காக்கவும், அரசிடம் நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்த கையெழுத்து மடலில் உங்கள் கையெழுத்தை இட இங்கே சொடுக்கவும்.

இது காந்திய வழி. நம்மால் ஆன முதல் எளிய நடவடிக்கை. அடுத்த போராட்டங்களுக்கு பிறகு இணைந்து  கை கொடுப்போம். அதுவரை எங்கள் மீனவ உயிர்களை கடவுளோ இயற்கையோ காப்பாற்றட்டும்.

Sunday, January 30, 2011

பெயர்க்காரணம்


அது தூர்தர்ஷனில் மகாபாரதம்  ஓடிக்கொண்டிருந்த காலம்.
'இல்லப்பா ,அர்ஜுனன் எப்போ பாத்தாலும் கிருஷ்ணனோட இருந்துகிட்டு ரெம்ப பாதுகாப்பா சண்டை போடுறாரு! அபிமன்யுவ பாருங்களேன் , ஒரே ஆளா உள்ள போயி எல்லா பெரிய ஆளுகளையும் ஒரு கை பாத்துட்டான்.. அவன்தான் உண்மையான ஹீரோ'.
பாரதம் பற்றி எந்த ஒரு புத்தகத்தையும் உரையும் அதன் பின்புலமும் தெரியாத காலத்திலயே என்ன பாதித்த கதாபாத்திரம் அபிமன்யு .அவன் சூழ்ச்சியால் கொல்லப்படும்போது எதோ என்னையே கொன்றது போல் ஒரு வலி.

எல்லாருக்கும் இந்த அனுபவம் வாய்க்கும் . சிறு வயதில் யாரையோ ஒருவரை மனதில் நாயகனாக வரித்து அவனைப்போலவே செயல்படும் ஒரு அபூர்வமான ஆனந்தமான வெகுகுறுகிய காலம்.அது  நமக்கு வருடம் பல கடந்தாலும் மனதில் நிற்கும். எனக்கு அப்படி வாய்த்தவன் அபிமன்யு!

எதோ ஆட்டோக்ராப் கதை மாதிரி ரெம்ப சென்டிமென்டல போகுதுன்னு பீல் பண்ணாதீங்க .. அதுக்கப்புறம் எங்க தெருவுல என்னால நடந்த அட்டுழியம் இன்னும் எத்தனை காலமானாலும் அப்படியே இருக்கும் . இப்போவும் நான் ஊருக்கு போனா , எனக்கு ஞாபகமே இல்லாத யாராவது வந்து  என்ன பாத்து , வடிவேலு ஸ்டைலேல  ' அவனா நீ?'னு கேக்குற அளவுக்கு நான் பேமஸ்!

அது என்னமோ தெரியல , சின்ன வயசுல எனக்கு வில் அம்பு மேல அப்படி ஒரு ஈர்ப்பு. அது அபிமன்யுவ புடிச்சதுனாலையா இல்ல வேற எதாவது பூர்வ ஜென்ம தொடரலோ தெரியல ..ஆனா எனக்கு வில் அம்பு புடிக்க ஆரம்பிச்ச  நேரம் எங்க பக்கத்துக்கு வீட்டுக்காரங்களுக்கு தொல்லை ஆரம்பிச்ச நேரம்!

 அப்பவும் சரி இப்பவும் சரி வில் அம்புனா ஏதோ சாதாரணமா கெடைக்கற விஷயம் இல்ல ! 'தேடினாலும் கெடைக்காது'ங்கற இப்போதைய  விளம்பரத்துக்கு வில் அம்பு சரியான உதாரணம். அப்பாகிட்ட அடம்புடிச்சு அழுக , அவர் வேலைய விட்டுட்டு 3 நாள் தேடி கோயம்புத்தூர்ல இருந்து ஒரு வில் அம்பு வாங்கிட்டு வந்து 'கண்டேன் வில்லை'னு வியர்க்க விறுவிறுக்க என் கைல கொடுத்தார் !

 பையன் சந்தோசமா வாங்கிட்டு போய் விளையாடுவானு ரெம்ப எதிர்பார்ப்பா பார்த்தவர் முன்னாடி  நான் வில்ல அப்படியும் இப்படியும் வளைச்சு பாத்துட்டு , கடுங்கோபம் கொண்டு 'என்ன குற்றம் செய்தாய் மானிடா.. பிழையான ஒரு தனுவை கொண்டு வந்து என்னை அவமதிக்கிறாயா ? ' னு ஏதோ தருமியிடம் சினந்த  நக்கீரன் மாதிரி முறைக்க , அவர் ஏதோ கடவுள் நேரா வந்து பிள்ளைக்கறி கேட்டு demand செய்த மாதிரி செய்வதறியாது திகைத்து நிற்க, பின்னாடி வந்து நின்ன என் அம்மாதான் என் முதுகுல ரெண்டு தட்டு தட்டி 'இதுக்கு மேல நல்லதா வேணும்னா நீயே செஞ்சுக்கோ. போடா..'னு அப்பாவ எங்கிட்ட இருந்து காப்பாத்தினாங்க..

ஆகா ..முதல் முறையாக நான் கேட்டது கிடைக்கவில்லை. வில்வித்தைக்கு  பேர் போன சேரநாட்டில் ஒரு வில்லுக்கு பஞ்சமா ? இனி பொறுப்பதில்லை.. நாமே களம் இறங்க வேண்டியதுதான் என்று முடிவு செய்து , எந்த ஒரு குருவும் இல்லாமல் தானாக ஞானம் தேடுவது போல் , நானாக வில் தேட புறப்பட்டேன் - 'உனக்கு நீயே ஒளியாவாய்'  என்று!

இந்த இடத்துலதான் அபிமன்யுவுக்கும் எனக்கும் இருந்த ஒரு ஒற்றுமை புலப்பட்டது ! அவன் எப்படி தானாகவே பத்ம வியுகத்தை  உடைக்க கற்றுக்கொண்டானோ அதே போல் நானும்  தரமான வில் செய்வது எப்படி என்று துரோணர் இல்லாத ஏகலைவனாக கற்றுக்கொண்டேன்.

வில் செய்யும் வழிமுறைகள் :
வில்லின் தரம்  என்பது 70%  , அதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மரக்கிளை மூலமே நிர்ணயம் செய்யபடுகிறது. பச்சை மரக்கிளையில் எப்போதும் வில் செய்யக்கூடாது! கிளை காய்ந்த பின் வில்லின் நாண் தொய்ந்து விடும் அவலமோ அல்ல வில் முறிந்து விடும் அபாயமோ உள்ளது . ஆகவே நான் மூன்று கிலோமீட்டர் நடந்து சென்று கொய்யா மரத்தை தேடி அதன் கிளையை யாருக்கும் தெரியாமல் உடைத்து வந்தேன் ..

அடுத்தது நாண்.சாதாரண நூலா / சனல் கயிறா ??  செல்லாது செல்லாது .. அம்பின் வேகத்தை நிர்ணயப்பது வில்லின் நாண். அது பலமாகவும் எளிதில் அறுந்து விடாததாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சிறந்த நாண் எங்கு கெடைக்கும் ? அட . இருக்கவே இருக்கு நம்ம செட்டியார் கடையில் , தூண்டில் செய்ய விற்கப்படும் நரம்பு .. go for it immediately ..

இந்த ரெண்டுதாங்க ஒரு வில் செய்ய வேண்டிய அடிப்படை பண்டகங்கள்..அப்புறம்தான் மிக முக்கியமான ,கடினமான வேலை மிச்சமிருக்கு . அதுதான் வில்லை வளைத்து நாண் ஏற்றுவது .. இங்குதான் இறைவன் எனக்கு ஒரு Assistant  மிக அதிமுக்கிய தேவை என்பதை உணர்த்தினான் .. ஏன்னா என் பலத்துக்கு ஈர்குச்சிய வளைக்கும் பக்குவம் மட்டுமே  உள்ளதுங்கறது எந்த ஒரு ஜாம்பவானும் சொல்லாமல் நானே அறிந்த உண்மை.  சரி அப்படி ஒரு அப்பாவி எங்க கிடைப்பான் ? .. இருக்கவே இருக்கான் நம்ம ஆனந்து.. பக்கத்துக்கு வீட்டு பையன்.. என்ன விட நாலு வருஷம்  சின்னவன். எப்போ திருடன் போலீஸ் விளையாண்டாலும் திருடனாகவே இருந்து என்னிடம் அடி வாங்கும் புத்திசாலி ..
 அவனை கூப்பிட்டு உனக்கும் இதே மாதிரி ஒண்ணு செஞ்சு கொடுக்கறேன்னு சத்தியம் பண்ணி , எப்படியோ  கிளையை வளைச்சு நாண் ஏற்றி (சரியா வரல , மறுபடியும் ,சரியா வரல , மறுபடியும் . அண்ணா கை வலிக்குது , இன்னும் ஒரே தடவைடா  ... ஓகே ஓகே போதும் ) ஒரு வழியாய் சரித்திர புகழ் பெற்ற வில் தயாராகி விட்டது ..

அடுத்து இப்படி சிறந்த ஒரு வில்லுக்கு ஏற்ற அம்பு எப்படி தயாரிப்பது ?  மீண்டும் விழித்து பதில் சொன்னது  என் பிறவி ஞானம்.. அப்போது  தீபாவளி முடிஞ்சா சமயம் .. எல்லாரும் ராக்கெட் உட்பட பல விதமான பட்டாசுகள்  வெடிச்சுட்டு அயர்ந்து போய் இருந்த நேரம்.. எங்கள் அம்பு வேட்டை ஆரம்பமானது..
'வானத்துக்கு போன ராக்கெட் வெடிச்ச பிறகு அதோட குச்சி கீழ விழும் தெரியுமாடா ..? ஏன்னா gravitational force அத கீழ இழுக்கும்' 
'அப்படியாண்ணா? எங்க சிலபஸ்ல அது எல்லாம் இன்னும் இல்லைண்ணா '
'பரவாயில்ல ..என்னை மாதிரி பெரிய கிளாஸ் வரும்போது உனக்கு தெரிய வரும் .நானே போன வருஷம் ஏழாம் கிளாஸ் பாஸ் பண்ண எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா ? நீ இன்னும் நெறைய படிக்கணும். சரி அத விடு .. நமக்கு இப்போ தேவை அந்த குச்சிதான் .. எவ்ளோ கெடைச்சாலும் விடாத.. '

ஏறக்குறைய 200 குச்சிகளுக்கு மேல சேர்த்தாச்சு .. ஆனா கூர்மைக்கு என்ன பண்றது .. ?மொத்தமா வாங்குடா குண்டூசிய .. ஒரு அம்புக்கு நாலுன்னு செலப்பின் டேப் போட்டு ஒட்டு ..

இதோ முடிந்து விட்டது வில் அம்பு தயாரிக்கும் பணி. காப்புரிமை , மாடல் உரிமை அனைத்தும் எனக்கே எனக்கு மட்டும்.வில்லை கையில் எடுத்த உடன் ஏதோ இந்திரனிடம் காண்டீபம் வாங்கிய பார்த்திபனைப்  போல  புளகாகிதம் அடைந்தேன் .
ஒரு அம்பை எடுத்து வில்லில் நாண் ஏற்றி குறி பார்த்து விட , சரியாக (சற்றே ஒரு 3  அடி தள்ளி ) இலக்கை அடைந்தது பாணம்.
அன்றிலிருந்து பல மாதங்கள் நானும் என் வில்லும் செய்த வீரதீர  சாகசங்கள் இன்று வரை பேர் பெற்று நிலைக்கிறது. அம்பு விடுவது மட்டும்தான் என் வேலை.. அது எவ்வளவு தூரம் போனாலும் அங்கு சென்று அதை எடுத்து , முனை முறிந்திருந்தால் அதை மீண்டும் சரிபடுத்தி திருப்பி தர வேண்டியது ஆனந்தின் கடமை. இப்படியே போனது பல நாட்கள்.

ஓரிரு மாதம் கழித்து , எதிர் வீட்டில் புதிதாய் பந்தல் போட, நான் என் வீட்டு மொட்டை மாடியில் இருந்து அம்பு மழை பொழிந்து பந்தலை கந்தல் ஆக்கியதால் வெளி உலகத்துக்கு என் வில்லின் மேல் வெறுப்பும் , அந்த பந்தலை சரி செய்ய பணம் கொடுத்தால் என் அப்பாவுக்கு அதன் மேல் பயமும் கூடியது. எங்கள் அட்டுழியம் எல்லை மீறி போக , ஆனந்தின் அம்மா அவனை அடித்து இழுத்து சென்றது இன்று வரை கண்ணீருடன் நினைவில் இருக்கும் ஒரு நிகழ்வு. அதுவும் அவன் ' அம்மா , அந்த அண்ணன் இனி மேலதான்மா எனக்கு வில் அம்பு செஞ்சு தருவாரு.. அத வாங்கிட்டு வந்துடுறேன்மா..இன்னைக்கு மட்டும் 15 தடவ அம்பு எடுக்க நடந்துருக்கேன்மா 'னு கதறியதை அவன் அம்மாவும் சரி ,நானும் சரி கேட்காதது போலவே கவனிக்காமல் விட்டது இன்று வரை அவனை பார்க்கும் மன தைரியத்தை எனக்கு குறைத்து விட்டது.. (இப்போ ஏழு அடி உயரமும் தொன்ண்ணூறு கிலோ உடம்போடும் விஷாலுக்கு அண்ணன் மாதிரி இருக்கான் .. பாத்து பேசலாம்னு ஆசைதான் ..எங்க பழசை ஞாபகம் வெச்சுகிட்டு  பட்டுன்னு கைய வெச்சுருவானோனு  ஒரு பயம்).  

அடுத்த முறை என் இலக்கு மின்சார கம்பம் மீது பாய்ந்து ஏதோ ஒரு wire கருகி  ,மின்விசிறியும் வெளிச்சமும் இல்லாத ஒரு வெப்பம் மிகுந்த நீண்ட  இரவு தெரு முழுக்க வியாபித்தது .
அடுத்த நாள் ஏரியா Association  மீட்டிங் - என் வில்லாள திறமை கடுமையாக பேசப்பட்டது .  என் அப்பா கிரீடம் படத்துல வரும்  ராஜ்கிரண் மாதிரி தலை தாழ்த்தி வீட்டுக்கு வந்தார் .

அதன் பிறகு ஒரு நாள் காலை  என் பாசத்திற்குரிய, காதலுக்குரிய வில் எங்கோ மறைக்கப்பட்டு விட்டது . அபிமன்யு இறுதியாக போராட ஒரு சிறு அம்பையாவது  கௌரவர்களிடம் கேட்டு கிடைக்காமல் போனது போல் நான் எவ்வளவோ கேட்டும் என் வில் இறுதிவரை எனக்கு மறுக்கப்பட்டது . மிக விவரமாக யாரும் என் அம்புகளை தொடாமல் ' இத மட்டும் வெச்சு அவன் என்ன பண்ணுவான்  பாப்போம் ?' என்று  விட்டு வைத்திருந்தனர்.
 அதற்கப்புறம் தாடி வளராத  அந்த பருவத்தில் , என் தோல்வியை வெளியே காண்பிக்க தெரியாமல் , தனியே சுற்றிகொண்டிருந்து , நாட்கள் வருடங்களாகி காலம் ஓடி விட்டது .அடுத்த தலைமுறை  துப்பாக்கியோ , வீடியோ கேம்சோ என்னை flirt செய்ய போராடி தோற்றன.

 இப்போது வரை வில் அம்பு மீதும் அபிமன்யுவின் மீதும் மாறா பக்தியும் நேசமும் எனக்கு குறையாமல் கூடிக்கொண்டிருக்கிறது.
யாருக்கு தெரியும்.. நாளைக்கு என் பையனுக்கு ஒரு வில் செய்து கொடுத்து என் காதலின் ரெண்டாவது அத்தியாயத்தை தொடங்கினாலும் ஆச்சர்யம் இல்லை. ஆனால் இந்த காலகட்டத்தில் அவனுக்கு வில் அம்பு மேல் மோகம் வருமா என்பது கேள்விக்குறிதான்.





Friday, January 21, 2011

விமர்சனம் : விமர்சகர்களுக்கு

முரண்பாடுங்கறது நல்ல விஷயம் . முரண்படுதல் என்பது அனைவருக்கும் பொதுவான அவரவர் சுதந்திரம். ஆனா அதுக்கும் ஒரு நியாயம் இருக்கனும் .  'நான் அக்பரை நேசிக்கிறேன் ஆனால் அவர் புலால் உண்பதில் எனக்கு உடன்பாடு இல்லை ' ன்னு சொன்னா அது  முரண்பாடு இல்ல  ; முட்டாள்தனம். ஏனா அது காந்திகிட்ட எதிர்பார்க்க  வேண்டியது. இந்த நாலு கேள்விக்கு பதில் சொல்லுங்க பாப்போம்.
  • முனியாண்டி விலாஸில மதியான சாப்பட்டுக்கு போய்ட்டு வெண் பொங்கல் , கிச்சடி ஏன் இல்லைன்னு சண்டை போடறது சரியா? தப்பா ?
  • திருப்பதி கோவில்ல சாமி கும்பிட்டுட்டு , பஞ்சாமிருதம் கொடுக்கல , லட்டு மட்டும் தான் கொடுத்தானுகனு  வருத்தப்படுறது  சரியா? தப்பா ?
  • சாண்டில்யன் கன்னி மாடம் புத்தகத்த தேடி வாங்கிட்டு , என்னடா கதை  இது , ஏழு பக்கத்துக்கு வர்ணனையே போகுது , கல்கி மாதிரி வருமான்னு கேக்கறது சரியா? தப்பா ?
  • கண் டாக்டர்கிட்ட போயி ' என்னையா டாக்டர் நீ ? பல் வலி ஆள கொல்லுது  ; சீக்கிரம் பாருன்னா நான் அதுக்கு படிக்கலேனு சொல்ற?'னு கத்தறது சரியா? தப்பா ?
இதுல்ல எதாவது ஒன்னு சரின்னு சொன்னா தொடர்ந்து படிக்கறத  நிறுத்திட்டு எதாவது வாழும் கலை பயிற்சியோ , இயேசு அழைக்கிறாரோ போயி உங்கள காப்பத்திகோங்க.. தப்புன்னு கைய தூக்கறவங்க , கைய கீழ இறக்கிட்டு மறுபடியும் அடுத்து மூணு கேள்விய பாருங்க :
  • ரஜினியோட பாபா பாத்துட்டு ரஜினி கதைல கோட்டை விட்டுடாரேனு புலம்பனவரா?
  • கமலோட மும்பை எக்ஸ்பிரஸ் பாத்துட்டு , கமல் இப்படி காமெடில சொதப்பிட்டாரேனு பீல் பன்னுனவரா ?
  • வாரணம் ஆயிரம் பாத்துட்டு, கௌதம் இப்படி கடுப்பேத்துவாருனு  நெனைகலையேன்னு நொந்து போனவரா ?
நீங்கள் எல்லாம் வணக்கத்துக்குரியவர்கள். எந்த எடத்துல எது கெடைக்குமோ அந்த எடத்துக்கு போயி அது கெடைக்காம ஏமாந்தவர்கள். பிடி சாபம்னு நீங்க சொன்னா பலிக்கும் . அப்படியே  இருங்க . மாறிடாதீங்க ..

அடுத்து நாம பாக்க போறது , எந்த ஒரு இலக்குமே இல்லாம எதோ ஒரு படத்துக்கு போயிட்டு , அது தனக்கு புடிக்கலேன்னு அடுத்த நாளு பக்கத்துக்கு பக்கம்  விமர்சனம் எழுதற ( வெகு சில) நண்பர்களை.

சாமி.. நான் விமர்சனத்துக்கு எதிரி இல்ல ; நல்லா எழுதுங்க .. ஆனா அதுக்கு முன்னாடி விமர்சனதுக்குனு ஒரு நியாயம் இருக்கு .. அத புரிஞ்சிட்டு எழுதுங்க ..
  • பேரரசு படத்துக்கு போயிட்டு வந்து கிளிமேக்ஸ்ல லாஜிக் இல்லன்னு நக்கீரன் மாதிரி  சொல்லகூடாது .. அது வேணும்னா நீ பாலசந்தர் படத்துக்கோ மகேந்திரன் படத்துக்கோ போயிருக்கனும்.
  • நந்தலாலா படம் பாத்தேன் ; ஒரே அழுகை ; நம்மளே வீடு கஷ்டத்த  மறக்கறதுக்கு படத்துக்கு போனா இவனுக  அவனுக கஷ்டத்த சொல்லி கொடுமை படுத்தராணுக;   'நந்தலாலா - வெந்தலாலா'னு எதுகை மோனையா எழுத கூடாது .. சந்தோசமா படம் பாக்கணும்னா கே.எஸ்.ரவிகுமாரோ சுந்தர்.சியோ எடுத்த படத்துக்கு போயிருக்கனும் ..
  • மச்சான் .. ஷங்கருக்கு கதை ரெடி  பண்ண தெரியல  அதுனால எல்லாம் செட்டிங்கா போட்டு படத்த ஒட்டிடாரு..எதார்த்தமே படத்துல  இல்லடான்னு டயலாக் பேச கூடாது .. உனக்கு எதார்த்தம் வேணும்னா ஷங்கர் டைரக்ட் பண்ற படத்துக்கு ஏன் போற? அவர் தயாரிக்கிற காதல் , வெயில் படங்களுக்கு போ ..
  • இந்த படம் எடுத்தவருக்கு சமூக அக்கறையே கெடயாது .. படம் முழுக்க அருவா , கத்திகுத்துனு வன்முறை ; நம் வீட்டு குழந்தைகள் இத பாத்தா கெட்டுப்போக  மாடங்கலானு பெற்றோர்கள் சார்பில் கொடி தூக்குபவர்கள் நேரா அவங்க செல்லங்கள கூட்டிட்டு இம்சை அரசன் 23ஆம் புலிகேசி போயிருக்கனும் ..
  • அட நமக்குதான் அந்த அளவுக்கு ஞானம் இல்லையே .. எதுக்கு 'ஹே ராம் ' போகணும் , என்னடா இது ஒரு மண்ணும் புரியல ? கதைய கமல் சொதபிட்டாருனு சொல்லணும் ..கொஞ்சம் பொறுத்திருந்து அடுத்த படம் 'தெனாலி' போக வேண்டியதுதான?
ஆக கூடி அட்வைஸ் என்னன்னா , ஒன்னு உன் ரசனைக்கு ஏத்த மாதிரி எனன படம் வருதோ அதுக்கு போ ,இல்லேன்னா எந்த படத்துக்கு போறியோ அத பாக்கும்போது உன் ரசனை கண்ணாடிய கழட்டி வெச்சுட்டு பாத்துட்டு வா .. வந்து விமர்சனம் எழுதறதோ இல்ல ப்ரீ smsல 'movie not good ' னு 'send  to  all  ' தட்டி விடுறதோ  stop it i  say ..

விமர்சகர்களே ,
தாராளமா விமர்சனம் பண்ணுங்க ..அதுக்கு முன்னாடி நாம பண்ற விமர்சனம் சரியான ஆள்கிட்ட சரியான விஷயம் கிடைக்கலங்கற காரணதுக்குதான்னு உறுதி படுத்திட்டு  proceed  your  honour ..

அத விட்டுட்டு வேண்டாவெறுப்பா புள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பேரு வைக்கற வேலைய நிப்பாடுங்க ..

நான் யாருன்னா,,,

டிஸ்கி:
முதல் தடவை உங்களுடன் அறிமுகம் ஆவதற்கு இந்த சுய தம்பட்டம் தவிர்க்க முடியாதது .. மன்னிக்க!


பள்ளி நாட்கள் :
மிகுந்த தமிழ் ஆர்வம் .எப்பவும் 95க்கு  மேல்தான்  தமிழில் மதிப்பெண். வருடந்தோறும் கவிதை , பேச்சு போட்டியில் உள்ளூர் , வெளியூர் கோவை மாவட்டம் பக்கம் நிறைய முதல் பரிசுகள். இரண்டாம் பரிசு கொடுத்தால் வாங்கச்  செல்லாமல் ஒதுக்கும் ஆணவம் ,அகம்பாவம் . சொல்லிகொள்ளும் அளவுக்கு நாடக அனுபவம் .

கல்லூரி  நாட்கள் : 2001  திண்டுக்கல் கல்லூரிகளுக்கு இடையே முதல் பரிசு - கவிதை .  2003 மாநில அளவில் கவிதை முதல் பரிசு : வைரமுத்துவிடம் இருந்து.2004 மாநில அளவில் கவிதை முதல் பரிசு : பேராசிரியர் கு. ஞானசம்பந்தனிடமிருந்து.

அகிலன் , சாண்டில்யன்,கல்கி,கண்ணதாசன்  தொடங்கி சுஜாதா , மதன் ,ஞானி, ரா.கி.ர  என புத்தகங்கள் நிறைய படித்த/படிக்கிற அனுபவம் . இவை எல்லாம் இருந்தும் கணினித்துறையில் வேலை கிடைத்ததும் கடிவாளம் போடப்பட்டதை உணர்ந்து ஒதுங்கினேன். பதிவுலகம்  பற்றி அறிந்தும் அறியாதது போல் விலகினேன் . என்னை பதிவெழுத அன்பு தொல்லை கொடுத்த நண்பர்களுக்கு எல்லாம் நான் சொன்ன பதில் : ' எத்தனையோ பதிவர்கள் நடுவுல நானும் பத்தோட பதினொன்னா இருக்க விரும்பல; நான் தனி.. ' . திரும்பவும் ஆணவமான/அபத்தமான  பேச்சு .

ஆனால் உண்மை என்னவோ முற்றும் மாறுதல் :

  • என் கவிதைகளை தொகுப்பாக வெளியிடும்   பேராசையான எண்ணம் இருந்தது/இருக்கிறது . எங்கே வலையில்  விட்டால் உரிமை போய் விடுமோ என்னும் ஒரு காரணம்.
  • எல்லாரும் கோலோச்சும் பதிவுலகத்தில் இனி மேல் நான் சென்று என்னை நிலைபடுத்தி , பேர் வாங்குவது .. இப்போதான் வாழ்க்கைல போராடி ஒரு நிதானத்துக்கு வந்துருக்கேன் .. அதுக்குள்ள இன்னோனா ? அட போங்கடா ? என்னும் ஒரு சலிப்பு.
  • 'நம்ம எதாவது எழுதி அத நாலு பேரு நிராகரிச்சுட்டா ; அவமானபடுத்திட்டா?  ' என்னும் ஒரு பயம் .
  • 'தமிழுல டைப் செய்ய நேரமும் பொறுமையும் இல்லையே ' என்னும் ( ஓரளவுக்கு உண்மையான ) சாக்கு .
  • 'நமக்கு அந்த அளவுக்கு சரக்கு இருக்கா ?'  என்னும் சந்தேகம்.
  • 'வலையுலகம் இரு பிரிவு . ஒன்று நல்லா திறம்பட எழுதும் பதிவர்களுடயது . மற்றது தங்களை மட்டுமே உயர்வு என்று   நினைத்து தங்கள் கருத்துகளை திணித்து மற்றவர்களை புண்படுத்தும் வலையுலக குப்பைகளுடயது .. இதில் என்னை எதில் சேர்பார்களோ ??' என்னும் ஐயம்.
இப்படி நினைத்து , மற்றவர்களின் பதிவுகளை மட்டும் படித்து வந்தவன் கண்களில் போன வாரம் சில பதிவர்களின்(?!!?) வலைப்பக்கம் கண்ணில் பட்டது.. யாரை பற்றியும் அக்கறை இல்லாமல் , மற்றவர்கள் நினைப்பதை பொருட்படுத்தாமல் தங்களுக்கு தோன்றியதை எழுதி இருந்த களங்கள் அது.  சரக்கும் இல்லை , சொல்வதில் சுவையும் இல்லை ; அங்கு இருந்தவை வெறும் வார்த்தைகளின் கோர்வைகளும் , வரட்டுதன்மையுமான எண்ணங்கள் மட்டுமே.

ஆக நான் தூங்கி கொண்டே எழுதினாலும் இந்த அளவுக்கு கேவலமாக எழுத முடியாது என்ற நம்பிக்கை துளிர்த்தது ; விளைவு உங்களுக்கு இந்த துன்பகரமான செய்தி : நானும் பதிவு எழுத தொடங்கி விட்டேன் . ( என்னோட பக்கத்த பார்த்து இனி எவ்ளோ பேரு இதே காரணத்தோட எழுத தொடங்குவானுகளோ ? ! அதுக்கு நான் பொறுப்பில்லை. )

செய்ய போகும் சில குற்றங்களுக்கான முன்ஜாமின்கள் :
  • எனக்கு இலக்கணம் சரியாக வராது . ஒற்று பிழை அதிகம் இருக்கும்; பொறுத்துக்கோங்க
  • எழுத்துப்பிழை இருந்தால் மொழி பெயர்க்கும் பட்டை 90 சதவீதமும்  நான் 10  சதவீதமும் பொறுப்பு.(இப்போதான் தமிழ்ல டைப் பண்ண பழகிருக்கேன்.. ஷப்ப்ப்பா முடியல ..)
  • நான் சீரியசான விசயத்த எப்போவாவதுதான் தொடுவேன் . சும்மா 'அங்க அப்படி கொடுமை நடக்குது' , 'இங்க இப்படி அநியாயம் நடக்குது' நீ ஏன் இத பத்தி எழுதலன்னு கேக்காதீங்க .. எனக்கு எப்போ அத பத்தி எல்லாம் அலசி ஆராய்ஞ்சு தீர்ப்பு வழங்க பக்குவம் வருதோ அப்போ எழுதுவேன் .. ( அது எல்லாம் வராதுங்க.. தைரியமா இருங்க.. )
  • கூடிய வரைக்கும் தமிழ்ல எழுதுவேன் .. இல்லேன்னா தங்க்லீஷ்தான் .. அட்ஜஸ்ட் கரோ ..
  • என்னைக்காவது எதாவது தப்பா எழுதுனா எனக்கு தப்புன்னு பட்டாதான் மன்னிப்பு , மரக்கட்டை எல்லாம் .. சும்மா சும்மா 'நீ செய்தது குற்றம் குற்றமே'னு சொல்லிக்கிட்டு இருந்தா எனக்கு காது கேக்காது .
  • முக்கியமான ஒன்னு : யாரும் உங்களுக்கு புடிச்ச பதிவர் / பதிவு யாருன்னு கேக்காதீங்க .. ஏற்கனவே நான் ஒருத்தர் ரெண்டு பேர சொல்லி அத படிச்சுட்டு எதோ நான் எழுதுன மாதிரி என்னை திட்டுன  அனுபவம் இருக்கு.. ஆக இந்த கேள்விக்கு தடா ..

சரி மக்களே , எதோ பெரிய அறிஞர் எழுத வந்துட்டாருன்னு நெனச்சாலும் சரி ; புதுசா ஒரு லூசு வந்துருக்குனு நெனச்சாலும் சரி    - வந்துட்டேன் ..இனி நீங்களும் நானும் ஒன்னும் பண்ண முடியாது .. பதிவ படிச்சிட்டு திட்டுனாலும் சரி  நேர்ல  வந்து தட்டுனாலும்  சரி என்னோட பாலிசி ' கொள்வோர் கொள்க ; குரைப்போர் குரைக்க ; உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது'ங்கறது தான்.

வந்தாரை வாழ வைக்கும் வலையுலகத்துக்கும்  , வந்து என் வலைல  சிக்க போற வாசகர்களுக்கும் வந்தணம்..