Sunday, January 27, 2013

விஸ்வரூபம்

ராஜபார்வை - வணிகரீதியாக உலக நாயகனுக்கு விழுந்த முதல் பெரிய அடி. அதனால் எந்த தளர்வும் இல்லாமல் , தன்னை வளர்த்து விடும் கலையுலகத்திற்கு தொடர்ந்து நல்ல படங்களை கொடுப்பது மட்டுமல்லாமல் , உலகத்தின் ஏதோ ஒரு கோடியில் எங்கோ ஒரு புது தொழில்நுட்பம் கண்ணில் பட்டாலும் அதை தமிழுக்கு கொண்டு வந்து சேர்ப்பதில் தன் கஷ்டங்களை பார்த்ததில்லை கமல்.

' எத்தனை தோல்விகள் வந்தாலும் , எனக்கு சினிமா தவிர வேறு எதுவும் தெரியாது' என்று பிரகடனப்படுத்தி , அரை நூற்றாண்டு காலமாக தன் கடமையை இம்மியளவும் தொய்வில்லாமல் செய்யும் கலைஞனை , அவன் பாதையில் கல்லையும் முள்ளையும் வாரியிறைக்கும் ஒரு சாரார் ஆரம்பத்திலிருந்தே தொல்லை கொடுத்து வந்தது உலகறியும்.

முதன்முதலில் தன் ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றமாக மாற்றிய நடிகர் , தன் உடலுறுப்புகளை தானம் செய்து ,அதன் விழிப்புணர்வை வெகுஜன மக்களுக்கு கொண்டு சென்றவர் என்ற பல நன்மைகளை செய்தாலும் , அவரை குற்றம் சாட்டியே கொடுமை படுத்திய கூட்டம் எப்போதும் உண்டு.

'அவ்வை சண்முகி , பிராமணர்களை குறி வைத்து கேவலப்படுத்துகிறது'

'ஹே ராம் படத்தை நிறுத்து . காந்தியை கேலி செய்கிறாயா?'

'சண்டியர்' பெயரை மாற்று. சாதிய வன்மத்தை தூண்டாதே.'

அது என்ன வசூல்ராஜா ? மருத்துவர்களை அவமதிக்காதே '

'தசாவதாரத்தை தடை செய். கடவுள் மறுப்பை திணிக்காதே '

இப்படி ஏறக்குறைய தனது எல்லா படத்திற்கும் போர் தொடுக்கும் எதிரிகளுக்கு   - பொறுமை இழக்காமல் , நிமிர்ந்து நின்று கமல் எடுத்து காட்டிய 'விஸ்வரூபம்' தான் இந்த படம்   .



எப்போதும் போல கமலின் இந்த படத்தையும் ,கண்டிப்பாக நமது அடுத்த தலைமுறை 'அப்போவே எப்படியா இந்தாளு இப்படி படம் எடுத்துருக்காரு ?' என்று சிலாகித்து பேசும் அளவுக்கு புதிய தொழில்நுட்பம் தொடங்கி , தீவிரவாதியம் சார்ந்த கதை களன் , முதிர்ந்த கூர்மையான வசனங்கள் , தேர்ந்த பாத்திர படைப்பு என்று எந்த விஷயத்திலும் கமல் - 'Exceeds the Expectation'

ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ், 'எலிசபெத்' இயக்குனர் சேகர் கபூர் என அனைவரின் நடிப்பும் துல்லியம்.

படம் ஆரம்பமே டாக்டரிடம் கவுன்சலிங் செய்யும் பூஜா ,'அவர் நார்மல் ஆனவர் இல்ல' என்று கமலை பற்றி சொல்லி Intro கொடுக்க ,அடுத்த
நொடி  கமல் நடனமாடியபடியே வரும் காட்சிக்கு  கைதட்டல் அள்ளுகிறது. நடனமும் , சகல வித பாவனைகளும் காட்ட  , பரதத்தை முறைப்படி கற்ற கமலுக்கு சொல்லிதர தேவையில்லை ; எனவே ஆச்சரியப்பட ஏதுமில்லை.

பாடல்  முடிந்ததுமே பிராமண பாஷை பேசும் கமலின் முதல் டயலாக்கிலிருந்தே சர்ச்சைக்கு விஷயம் கிடைக்கிறது.என்னவென்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

கமல் முஸ்லிம் என்று தெரிவதிலிருந்து தொடங்கும் சுவாரசியம் , அவர் அடி மேல் அடி வாங்கி , சாவதற்கு முன் தொழுகை செய்ய கைகட்டை அவிழ்க்க சொல்லி , பிறகு அதிரடியாக தன் விஸ்வரூபத்தை காட்ட ஆரம்பிக்க , ஜெட் வேகத்தில் ஏறுகிறது. அந்த ஒரு காட்சியை முதலில் சண்டைக்கும் , பிறகு 'யார் என்று தெரிகிறதா ?' என்ற பாடலுக்கு சேர்த்து மறுமுறையும் வேறு கோணத்தில்  காட்டியிருப்பதில்
கமலின் இயக்கம் கை தட்ட வைக்கிறது.




ஷங்கர் - இசான்-லாய் மூவரின் இசை - துப்பாக்கி சத்தங்களுக்கு ஏற்ற தாளங்கள் , காட்சிகளின் விறுவிறுப்புகேற்ற பின்னணி இசை என பாராட்ட வைக்கிறது.குறிப்பாக கடைசி இருபது நிமிட  காட்சிகளில்.

நான் லீனியராக நகரும்  கதையை , தெளிவாக, பார்ப்பவருக்கு புரிய வைக்க மிகவும் மெனக்கெட்டிருக்கிறார் கமல்.உபயம் - முந்தைய ஆளவந்தானிலும் , ஹே ராமிலும் தமிழை அதிகம் பயன்படுத்தாமல் அடி வாங்கிய அனுபவம். ஹ்ம்ம் ..கமலுக்கும் அடி சறுக்கும். நல்ல வேளை ,இந்த படத்தில் அந்த தவறை செய்யவில்லை.

சேகர் கபூர் நல்ல தேர்வு. பூஜாவை ஒப்பிட்டுப் பார்க்கும் போது  ஆன்ட்ரியாவுக்கு வேலை அதிகம் இல்லை.
வெடிகுண்டை தடுக்கும் ஹீரோ என்ற அரத பழசான ஒற்றை நாடி கதைக்கு , கமலின் புது ட்ரீட்மென்ட் ஒன்றே எல்லாரையும் திரையை விட்டு கண்ணை நீக்காமல் இருக்க செய்கிறது.  ஆப்கானில் நடைபெறும் நிகழ்ச்சிகளாக காட்டும் இடங்களில்  , ஒளிப்பதிவு அட்டகாசம். நடிப்பு தொடங்கி Location முதல் எதிலேயுமே Compromise ஆகாமல் படம் கொடுக்க வேண்டும் என்று கமல் முடிவு செய்திருந்த போது  இத்தனை கோடி செலவு ஏன் ஆகாது? .

விருமாண்டி ஒலி நாடா வெளியீட்டின் போது இயக்குனர் இமயம் பாலச்சந்தர் , ஆளவந்தான் படத்தை பற்றி பேசும் போது 'உன்னை போல நடிகனும் யாரும் இல்லை. உன்னை போல இயக்குனரும் யாரும் இல்லை ' என்று சொன்ன வார்த்தைகள் ,ஒரு குருவின் உணர்ச்சி மிகுதலால் கொடுக்க பட்ட மிகைபடுத்திய பாராட்டோ ? என்ற ஐயத்தை சிலருக்கு கொடுத்திருக்கும்.இந்த படத்தை பார்த்த பின் அந்த சந்தேகமும் அவர்களுக்கு இல்லாதிருக்கும். இயக்கம் கனகட்சிதம்.



மொத்தத்தில் , ஒரு சிறந்த கலைஞனின் சீரிய படைப்பு. கமலுக்கு இருக்கும் ,எல்லாரையும் எதிர்க்கும் தைரியம் , ரசிகர்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக அவர் ஆணித்தரமாக நம்புவதால் மட்டுமே. இது போன்ற தரமான படங்கள் கொடுக்கும் வரை அந்த நம்பிக்கை கண்டிப்பாக வீண் போகாது.

இங்கே இந்த படத்தை எதிர்க்கும் சினிமா அதிபுத்திசாலிகள் , இதே படத்தை ஹாலிவுட் இயக்குனர்கள் ,
அப்படி இப்படி மாற்றி எடுத்திருந்தால் உற்சாகமாக பாராட்டி எழுதிவிட்டு IMDB-இல் பத்துக்கு 8.1 ரேட்டிங் கொடுத்திருப்பார்கள். பிறகு அதே இயக்குனர்கள் ,தன் படம் எடுக்க 'விஸ்வரூபம்' படமே ஒரு உந்துதலாக இருந்தது என்று அறிவித்தால் ,
நம் மரியாதைக்குரிய புத்திசாலிகள் வெட்கமில்லாமல் ஒளிந்து கொள்வார்கள்.

இதை எதிர்ப்பவர்களுக்கு ஒரு கேள்வி ? - தீவிரவாதத்தைப் பற்றிய படத்தை , தீவிரவாதிகளை காட்டாமல் எப்படி எடுப்பது என்று யாராவது தெளிவாக சொல்லுங்களேன்?

இந்த படம் உணர்த்தும் கருத்தை விட - எந்த களமாக இருந்தாலும் சரி , தான் செய்யும் தொழிலில் திறமையும் ,தான் எடுத்த முடிவில் நம்பிக்கையும் வைத்திருப்பவன் எவனுக்கும் அடிபணிய தேவையில்லை என்ற உண்மையை உணர்த்தியிருக்கிறது அது வெளியான விதம்.

விஸ்வரூபம் - 'தீ என்று தெரிந்திருக்கும்.இவர் யார் என்று புரிந்திருக்கும்.'



பேஸ்புக்கில் தொடர , வலது பக்க மேல் ஓரத்தில் உள்ள 'Find us on Facebook'ல்  Like பட்டனை அழுத்தவும்.