Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Thursday, March 17, 2016

உடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்


எல்லா ஊரிலும் நல்லதும் கெட்டதும் எல்லா காலங்களிலும்  உண்டு.

சாதியைக் காரணமாக்கி நடக்கும் அக்கிரமங்கள் புதிதல்ல..
காதலை எதிர்த்து , காதலரை அழிக்கும் கோபத்தின் கொடூரமும் புதிதல்ல..
பகை முற்றி பழி  தீர்ப்பதும் புத்தம் புதியதல்ல ..
நடுத்தெருக்களில் , சுற்றியிருக்கும் மக்கள் நடுங்க , கொலைகள் நடப்பதும் கண்டிப்பாக புதியதல்ல..

ஆனால் இந்த கொடுமைகளின்  நிழல் கூட உடுமலை ஊர் எல்லையை நெருங்கியதில்லை.
இன்றோ எங்கள் இதயத்தின் மையப்புள்ளியில் , கோரத்தின் நிஜம் , அதன் கூரிய நகத்தினால் கொத்திக் கிழித்திருக்கிறது .

அமைதியான ஊர்; மக்களும் சரி ,  ஊரில் அடிக்கும் வெயிலுக்கும் மழைக்கும் சரி : ஒரே குணம் - நிதானம்.

சேர நாட்டு வாசல் அருகில் என்பதால் , தெருவுக்கு ஒருவராவது கேரளத்து  பூர்விகம் ; கடவுளின் சொந்த நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு , உடுமலையில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.  சொந்தத்தில் கல்யாணம் செய்த பெண்ணுக்கு புகுந்த வீடு முன்னமே  பழக்கப்பட்டது போல  , சேட்டன்களுக்கும் சேச்சிகளுக்கும் எங்கள் ஊர் சொந்த ஊரானது.



சுந்தரத் தெலுங்கும்  , கொங்குத்தமிழும் சரிசமமாய் புரளும். மனதில் எந்த பாரம் இருந்தாலும் , பக்கத்துக்கு வீட்டு குடும்பத்தோடு பேசும் பேச்சு மயிலறகு.

அடுத்த வீட்டில் என்றைக்கும் சாரோ மேடமோ எங்களுக்கு இருந்ததில்லை. நடுத்தர வயதிருந்தால் அக்கா மாமா ; அதற்கும் மேலிருந்தால் அப்பா அம்மா.

எல்லாருடைய நிலங்களையும் மனங்களையும் குளிர வைத்து ஊர் சுற்றி ஓடும் வாய்க்கால்  நீருக்கும்  , எங்கள் ஊருக்கும்  - சாதி மதம்  என்பது சத்தியமாய்,  ஒதுக்கி ஓரமாய் புறந்தள்ளும் குப்பைதான்.

கடந்த நூறு வருடங்களை சற்று புரட்டி பார்த்தால் , உடுமலை  அமைதியின் அரவணைப்பில் திளைத்து வளர்ந்த குழந்தை என்பது தெரியும். அதனால்தான் அறிவுதிருக்கோவிலும் , அதன் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது.

வருடந்தோறும் ஊர் குட்டையில் நடக்கும் மாரியம்மன் திருவிழாவில் , மதமோ சாதியோ நிறமோ , இப்படி எந்த ரேகையும் தென்படாமல் , பாசமான உள்ளூர்வாசிகளின் உற்சாகத்தை பார்க்கலாம்.



தலைசிறந்த பள்ளிகளை கொண்ட ஊரில் , எங்கள் உச்சகட்ட பிரிவினையே - 'நல்லா படிக்கிற பிள்ளை  ; சுமாரா படிக்கிற பிள்ளை ' ; இந்த இரண்டே ரகம்தான். பக்கத்துக்கு கிராமத்து குழந்தைகள் , ஊருக்குள் பள்ளித்தோழனின்  வீட்டில் தங்கியிருந்து படிப்பதும் , குடும்பத்தில் இன்னொரு பிள்ளையாய் இருப்பதும் வெகு சாதாரண நிகழ்வு.

அருகிலிருக்கும் திருப்பூருக்கும் , கோவைக்கும் , பொள்ளாச்சிக்கும் பீடித்து வரும் சுற்றுசூழல் மாசுக்கு இன்னும் பலியாகாமல் பசுமையின் ஆரோக்கியத்தை காத்து கம்பீரமாய் நிற்கிறது , ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் உடுமலைப்பேட்டை.

இப்படி எல்லா புகழும் இருக்கும் ஊர் பெயர்தான் இப்போது முகநூலிலும் , வாட்ஸப்பிலும் , எல்லார் வாய்க்கும் கிடைத்த அவலாக பரிதாபப்பட்டு மாட்டியிருக்கிறது.

ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் பகைக்கு , ஒரு உயிர் மட்டும் அல்ல ; ஒரு ஊரின் பெயரும் பலியாகியிருக்கிறது.
'வேறு எங்கோ போய் கொலை செய்வதுதானே?' என்று உணர்ச்சி மேலிட கேட்கும் அளவுக்கு நாங்கள் சுயநலக்காரர்கள் அல்ல . எந்த ஊரிலும் இது போல தவறு நிகழக்கூடாது.எங்கும் அது மன்னிக்கமுடியாத குற்றமே.

ஆனால் , இது எங்கள் ஊர் . எல்லா சாதியினரும் எந்த பேதமும் இல்லாமல் வாழும்  ஊர்.எங்கள் ஊர் பெயரில் , சாதிச்சாயமோ , கலவரக்கீற்றோ உள்ளே வர நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

ஊடகங்கள் என்ற பெயரில் ஊர் பெயரைக்  கெடுக்க ஓராயிரம் வண்டிகள் வந்தாலும் , உண்மை என்பது மிகத் தெளிவு ; உடுமலை களங்கமற்றது.

நடந்தது கௌரவக் கொலையோ பகையின் மிச்சமோ; அதன் முடிவின் களம் எங்கள் ஊராய் அமைந்ததற்கு , நாங்கள் படுவது நரக வேதனை.  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மட்டுமல்ல , ஊருக்கும் இப்போது தேவை அனுதாபம்.



ஊர் மொத்தமும் ஒன்றாய் கைக்கோர்த்து , உரக்க முழக்கமிடுகிறோம் - சாதிகளுக்கோ , பிரிவினைக்கோ ஊருக்குள் இடமில்லை. அதை வளர்ப்பவருக்கும் இங்கே வேலையில்லை.

நினைவிருக்கட்டும் - இந்த ஒரு கொடிய நிகழ்வால்  , தன்  தவறு ஏதுமின்றி ,  ஒரு ஊர் களங்கமில்லாத தன் சரித்திரத்தில்  , கருப்பு புள்ளியை ஒரு  பக்கத்தில் தெளிக்க நேர்ந்துள்ளது. நாளை  உங்கள் ஊருக்கும் இதே நடக்கலாம்.

சாதியின் பசிக்கு இன்னும் எத்தனை காலம் , எத்தனை  ஊர்களும் நகரங்களும் தங்கள் முகவரியின் புனிதத்தைக்  காவு கொடுப்பது?

இப்படியா நம் மண்ணின் பெருமை உலகத்திற்கு அறியப்படுவது ?


-
அசோக் மூர்த்தி

Saturday, November 10, 2012

தீபாவளி

டிஸ்கி - கொஞ்சம் பெரிய பதிவு.

என் பள்ளி நாட்கள் வரை தீபாவளி என்பது வருடத்துக்கு ஒரு முறை
மலரும் ஒரு தெய்வீக காதல் போல். ஒரு மாதம் முன்பிலிருந்தே ஒன்றிலிருந்து முப்பது வரை ஒரு பேப்பரில் எழுதி ஒவ்வொரு நாளாக அடித்துவிட்டு 'இன்னும் 24 நாள் இருக்கு ' 'இன்னும் 17 நாள் இருக்கு ' என்று காலையில் தொடங்கும் என் நாட்கள் , பண்டிகைக்கு பத்து நாள் முதலிருந்து அடுத்த கட்ட விறுவிறுப்புக்கு போகும்.காரணம் - பட்டாசு.
எதிர் வீட்டு பிரபு அண்ணன்,பக்கத்துக்கு வீட்டு ஆனந்த் , அதற்கடுத்த வீட்டு ரவி,ராஜா சகோதரர்கள் என்ற பட்டாளம் நட்பை மறந்து ஒரு போட்டி மனப்பான்மையோடு முறைத்துக் கொண்டு அலையும் நாட்கள் அவை.காரணம் - பட்டாசு.

சிந்தாமணியில் போய் முதல் கட்ட பரிவர்த்தனையை ஆரம்பித்து வைத்தால் ,தீபாவளிக்கு மூன்று நாள் முன்னரே அனைத்தையும் வெடித்து தீர்த்து விடும் அபாயம் உண்டு என்பதால் அப்பா வேறு ஒரு யோசனையை , நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது செய்ய ஆரம்பித்தார்.

கூட வேலை பார்க்கும் அனைவரிடமும் என்ன விதமான பட்டாசுகள் தேவை என கேட்டு , சிவகாசிக்கு ஆள் அனுப்பி மொத்தமாக வரவழைத்து வீட்டில் வைப்பார்.சரியாக பண்டிகைக்கு ஐந்து நாள் முன்னாடிதான் அந்த பெரிய 'மங்காத்தா' பணப்பெட்டி அளவுக்கு பெரியதாய் இருக்கும் பட்டாசு பெட்டியை பிரிக்க ஆரம்பிப்பார். கூட உதவிக்கு மூன்று பேர். இம்சைக்கு நான்.

எல்லாரும் கொடுத்திருக்கும் லிஸ்டை எடுத்து ஒவ்வொன்றாக படித்து , அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பெட்டியில் பட்டாசுகளை நிரப்ப வேண்டும்.
உதவிக்கு என வந்தாலும் எல்லாரும் அமர்ந்துகொண்டு 'அதுல ஒன்னு எடுத்து அவங்க பாக்ஸ்ல போடு ; இந்த பாக்ஸ்ல ரெண்டு கலர் மத்தாப்பு' என என்னை வேலை வாங்கினாலும் எனக்கு அது அலுப்பாகவே இருக்காது.

எல்லாருக்கும் ஒரு பெட்டி என்றால் எங்கள் வீட்டுக்கு மட்டும் இரண்டு பெட்டி. எனக்கொன்று ; என் அக்காவுக்கு ஒன்று.காரணம் எனது முந்தைய தீபாவளி காலத்தில் நடந்த ஊழல்கள்தான். மொத்தமாக வாங்கி இதில் பாதி உனக்கு ;பாதி எனக்கு என்று மிக நியாயமாக தொகுதி பங்கீடு செய்தாலும் , கூட்டணி தர்மத்தை
துச்சமென மதித்து , அக்கா வீட்டில் இல்லாத
போது கொஞ்சத்தை எடுத்து ,ஓரிரு நாளில் ஏறக்குறைய முழுதும்
என் பொக்கிஷ குவியலில் இருக்கும்.
ஆகவே என் வீட்டுக்கு இரண்டு பெட்டி பட்டாசுகள் என்பது எழுதபடாத விதியாய் இருந்தது.

ஆனாலும் தீபாவளி அன்று மாஸ்டர் பிளான் செய்து , அக்கா நான்கைந்து வெடி வெடித்ததும் , பக்கத்தில் அலறும்படி ஒரு வெடியை தூக்கிப் போட்டால் ,பயந்து போய் ' எல்லாத்தையும் நீயே வெடிச்சு தொலைடா' என உள்ளே ஓடி விடுவாள்.திரியைக் கிள்ளி தரும் பொறுப்பு அப்பாவுக்கு.



எல்லா வருடமும் என் லிஸ்ட்தான் பெரியதாய் இருக்கும் என்றாலும் , எந்த பெட்டியைப் பார்த்தாலும் பொறாமையாகவும் , இந்த பெட்டி என்னுடையதை விட பெரிதாக இருக்கிறதே என்ற அவநம்பிக்கையும் இருக்கும். ஆனால் அப்பா கூட வேலை பார்க்கும் எல்லாருக்கும் வீட்டில் பெண் குழந்தைகள்தான் என்பதனால் வெறும் சங்கு சக்கரம்,பூவாணம் , மத்தாப்பு போன்ற காந்தியவாதி பட்டாசுகளாக இருக்கும். அதையெல்லாம் பார்த்து ஏதோ சோலே பட அம்ஜத்கான் போல ஒரு ஏளன சிரிப்பு என்னிடம் பிறக்கும்.

எனக்கெல்லாம் பச்சை
கயிறு இறுக்கி கட்டிய நைட்ரஜன் பாம் , செவென் ஷாட் எனப்படும் எங்கெங்கோ அலைபாய்ந்து வெடிக்கும் இன்னொரு தீவிரவாத வெடி , சரவெடி , லட்சுமி வெடி , நேதாஜி வெடி , இது எல்லாம் போக , என் சொந்த ஊரிலிருந்து சித்தப்பா கொண்டு வந்த ஓலை வெடி , நானும் வீரன்தான் என காண்பிக்க கையில் பற்ற வைத்து தூக்கி போடும் ஊசி வெடி என ஒரு படுபயங்கர வெடிபொருட்கள் லிஸ்டில் இருக்கும்.

பிள்ளையார் சுழி போடுவது ரோல் கேப் மூலம்தான்.அதிலும் ரோல் கேப் துப்பாக்கி எதுவும் ஒரு நாளைக்கு மேல் வராது. பத்து முறை லோட் செய்தால் பதினோராவது தடவை பயன்படாது. அதிகபட்சமாக ஒரு முறை நான்கு துப்பாக்கி வாங்கியிருக்கிறேன். பிறகு எனக்கே மனம் பொறுக்காமல் மீதி கேப்பை சுவற்றில் தேய்த்தும் , வெடிகளுக்கு சுற்றும் டெட்டனேட்டராக பயன்படுத்துவேன்.


வெங்காய வெடி என்கிற மாப்பிளை வெடி அப்போதே தடை செய்யபட்டிருந்தாலும் , எங்களுக்கு எப்படியாவது கிடைக்கும்படி தேவராஜன் கடை அண்ணாச்சி ஏற்பாடு பண்ணியிருப்பார். இப்போதெல்லாம் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. சரியான ரவுடி வெடி.

இது மட்டும் வைத்து சமர்த்தாக வெடிக்கும் ரகம் அல்ல எங்கள் கோஷ்டி. பாம் என்றால் அது எவ்வளவு சத்தமாக, விதவிதமாக வெடிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய தயாராய் இருக்கும் தன்மானபடை. வெயிட்டான பொருள் எது சிக்கினாலும் , அதற்கு அடியில் வெடி வைப்பது , பத்தியை அழகாக வெட்டி , வெடியுடன் சேர்த்து பற்ற வைத்து ஏறக்குறைய நாட்டு வெடிகுண்டை டைம்பாம் போல ஆக்கி வெடிக்க வைப்பது என பலவிதங்கள்.

இதில் நாங்கள் எல்லை மீறியது எதிலென்றால் , தீபாவளி சமயத்தில் மழை பெய்து தேங்கியிருக்கும் தண்ணீரில் , வெகு பக்குவமாக எதாவது ஒரு காய்ந்த இலையை மிதக்க வைத்து ,அதில் பாம் வைப்பது.
பற்ற வைக்கும்போது கொஞ்சம் அதிர்ந்தாலும் வெடி தண்ணீரில் மூழ்கி செயலிழந்து விடும் அபாயம் இருப்பதால் , எந்த யோகாவும் , ப்ராணயாமாவும் கற்றுகொள்ளாமலேயே மூச்சை முறைபடுத்தி ஒரு பட்டாம்பூச்சி அமர்வது போல் பற்ற வைத்து ஓடி வருவோம்.

இந்த சின்ன வயதில் , இந்த செயற்கரிய செயலை பாராட்டாமல், பெருசுகள் எதோ அந்த பக்கம் சரியாக வெடி வெடிக்கும்போது வந்து சட்டையை சேறாக்கி கொண்டு , எதோ நாங்கள்தான் தப்பு செய்த மாதிரி
' உங்க பையன் என் தீபாளி சட்டைய என்ன பண்ணிருக்கானு பாருங்க ' என வீட்டில் பற்ற வைத்து விடுவார்கள். பிறகு பண்டிகை நாளில் என் முதுகில் வெடி வெடிக்கும்.

ஒரு வழியாக எல்லா பட்டாசையும் வெடித்து , பிறகு இரவானதும் , ராக்கெட் , பூவாணம் , சங்கு சக்கரம் என ஒரு ரவுண்ட் வந்து அதையும் முடித்து , பாம்பு பட்டாசு புகையை முடித்து கொண்டு , எல்லா பசங்களும் ஆயுதம் தீந்த போர்வீரர்கள் மாதிரி நிராயுதபாணி ஆக நிற்போம். (நிற்க;கார்த்திகை பட்டாசு கோட்டா தனி.)

பிறகு வெடித்த எல்லா பட்டாசையும் மொத்தமாக ஓரிடத்தில் கொட்டி , நெருப்பு மூட்டி அதில் வரும் வண்ண வண்ண புகைகளை ரசித்த பிறகே எங்கள் போர் குணம் தணியும். இருந்தாலும் எங்கள் தினவெடுத்த தோள்களுக்கு இன்னும் வெடி தேவை என்று பரிதாபமாக யாரை பார்த்தாலும் , எல்லாரிடமும் சொல்லி வைத்ததுபோல் ஒரு ஏளன புன்னகை தோன்றும் ' கொஞ்சமாடா ஆடுனீங்க..இனி என்னடா பண்ணுவீங்க ? ' என்பதுபோல்.

அடுத்த நாள் எந்த வீட்டுக்கு முன்னால் பட்டாசு குப்பை அதிகமாக இருக்கிறதோ அங்கு எதாவது ஒரு வாண்டு இருக்கிறது என்று அர்த்தம்.

கால மாற்றத்தில் எது மாறினாலும் , தீபாவளி நாளின் பரபரப்பு மட்டும் மாறாமல் இருக்கிறது. இப்போதும் ஊருக்கு சென்று எங்கள் வீதியை பார்த்தால் புதிய கோஷ்டி ஒன்று நாங்கள் செய்த அதையே திரும்ப அனுபவித்து செய்து கொண்டிருப்பது தெரிகிறது.ஆனால் எனக்கு இப்போதெல்லாம் வெடி வெடிக்க பயம் ஏற்பட்டுள்ளதை ஒத்துக்கொள்ள வேண்டும். அக்கா பையன் ரோல்கேப் வெடித்தாலே கண்ணை முடிகொள்ளும் பய உணர்ச்சி வந்து விட்டது. என்ன காரணமோ?

ஆனாலும் குடும்பத்துடன் ஒன்றாய் இருப்பது , மகிழ்ச்சியாய் கொண்டாடுவது என தீபாவளியின் தனிச்சிறப்பு மாறவில்லை.டிவி சேனல்களின் பிடிகளில் சிக்காமல் அந்த நல்ல நாளை காப்பாற்றுவது நம் பொறுப்பு.
அன்றைக்கு ரிலீஸ் ஆகும் படத்தை கூட வேறொரு நாள் பார்த்துக்கொள்ளலாம். குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடும் சந்தோசம் வேறு நாள் கிடைக்காது.

வேலையில் மூழ்கி, பொறுப்புகளில் சிக்கிக்கொண்டு ,எப்போதும் முகத்தில் ஒரு கண்டிப்பை போலியாய் காட்டிகொண்டு , கண்டம் தாண்டி வாழ்ந்து வரும் இந்த சமயத்தில் , எல்லாரும் ஊரில் தீபாவளி கொண்டாடி அதை படம் எடுத்து அனுப்புகிறோம் என்று சொன்னாலும் ,அது முழு சந்தோசத்தை கொடுக்காது என்பது நிதர்சனம்.

எப்போதும் தீபாவளி பின்னிரவில் ,அப்பாவை கட்டிக்கொண்டு ஏக்கமாய் கேட்கும் கேள்வி ஞாபகத்துக்கு வருகிறது - 'அடுத்த தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்குப்பா?' .

அதிக நாள் ஆகும் என்று தெரிந்திருந்தாலும் , அவர் அன்பாக அணைத்துக்கொண்டு , 'சீக்கிரமா வந்திரும்ப்பா ' என்று சொல்லும் ஆறுதலுக்கு மயங்கும் அந்த கணம் கவிதை.

ஹ்ம்ம் ..குழந்தையாகவே இருந்திருக்கலாமோ?

Wednesday, October 26, 2011

தீபாவளி

டிஸ்கி - கொஞ்சம் பெரிய பதிவு.  

என் பள்ளி நாட்கள் வரை தீபாவளி என்பது வருடத்துக்கு ஒரு முறை
மலரும்  ஒரு தெய்வீக காதல் போல். ஒரு மாதம் முன்பிலிருந்தே ஒன்றிலிருந்து முப்பது வரை ஒரு பேப்பரில் எழுதி ஒவ்வொரு நாளாக அடித்துவிட்டு 'இன்னும் 24  நாள் இருக்கு ' 'இன்னும் 17  நாள் இருக்கு ' என்று காலையில்   தொடங்கும் என் நாட்கள் , பண்டிகைக்கு பத்து நாள் முதலிருந்து அடுத்த கட்ட விறுவிறுப்புக்கு போகும்.காரணம் - பட்டாசு.
 
 
எதிர் வீட்டு பிரபு அண்ணன்,பக்கத்துக்கு வீட்டு ஆனந்த் , அதற்கடுத்த வீட்டு ரவி,ராஜா  சகோதரர்கள்  என்ற பட்டாளம் நட்பை மறந்து ஒரு போட்டி மனப்பான்மையோடு  முறைத்துக் கொண்டு அலையும் நாட்கள் அவை.காரணம் - பட்டாசு.

சிந்தாமணியில் போய் முதல் கட்ட பரிவர்த்தனையை ஆரம்பித்து வைத்தால்  ,தீபாவளிக்கு மூன்று நாள் முன்னரே அனைத்தையும் வெடித்து  தீர்த்து விடும்  அபாயம் உண்டு என்பதால் அப்பா  வேறு ஒரு யோசனையை , நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது செய்ய ஆரம்பித்தார்.

 கூட வேலை பார்க்கும் அனைவரிடமும் என்ன விதமான பட்டாசுகள் தேவை என கேட்டு , சிவகாசிக்கு ஆள் அனுப்பி மொத்தமாக வரவழைத்து வீட்டில் வைப்பார்.சரியாக பண்டிகைக்கு ஐந்து நாள் முன்னாடிதான் அந்த பெரிய 'மங்காத்தா' பணப்பெட்டி அளவுக்கு பெரியதாய் இருக்கும் பட்டாசு பெட்டியை பிரிக்க ஆரம்பிப்பார். கூட உதவிக்கு மூன்று பேர். இம்சைக்கு  நான்.

எல்லாரும் கொடுத்திருக்கும் லிஸ்டை எடுத்து ஒவ்வொன்றாக படித்து , அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பெட்டியில் பட்டாசுகளை நிரப்ப வேண்டும்.
உதவிக்கு என வந்தாலும் எல்லாரும் அமர்ந்துகொண்டு 'அதுல ஒன்னு எடுத்து அவங்க பாக்ஸ்ல போடு ; இந்த பாக்ஸ்ல ரெண்டு கலர் மத்தாப்பு' என என்னை வேலை வாங்கினாலும் எனக்கு அது அலுப்பாகவே  இருக்காது.

எல்லாருக்கும் ஒரு பெட்டி என்றால் எங்கள் வீட்டுக்கு மட்டும் இரண்டு பெட்டி. எனக்கொன்று ; என் அக்காவுக்கு ஒன்று.காரணம் எனது முந்தைய தீபாவளி காலத்தில் நடந்த ஊழல்கள்தான். மொத்தமாக வாங்கி இதில் பாதி உனக்கு ;பாதி எனக்கு என்று மிக நியாயமாக தொகுதி பங்கீடு செய்தாலும் , கூட்டணி தர்மத்தை 
துச்சமென  மதித்து , அக்கா வீட்டில் இல்லாத
போது கொஞ்சத்தை எடுத்து ,ஓரிரு நாளில்  ஏறக்குறைய முழுதும்
என் பொக்கிஷ குவியலில் இருக்கும்.
ஆகவே என் வீட்டுக்கு இரண்டு பெட்டி பட்டாசுகள் என்பது எழுதபடாத விதியாய் இருந்தது.

ஆனாலும் தீபாவளி அன்று மாஸ்டர் பிளான்  செய்து , அக்கா நான்கைந்து வெடி வெடித்ததும் , பக்கத்தில் அலறும்படி ஒரு வெடியை தூக்கிப் போட்டால் ,பயந்து போய் ' எல்லாத்தையும் நீயே வெடிச்சு தொலைடா'  என  உள்ளே ஓடி விடுவாள்.திரியைக் கிள்ளி தரும் பொறுப்பு அப்பாவுக்கு.



எல்லா வருடமும் என் லிஸ்ட்தான் பெரியதாய் இருக்கும் என்றாலும் , எந்த பெட்டியைப் பார்த்தாலும் பொறாமையாகவும் , இந்த பெட்டி  என்னுடையதை விட பெரிதாக இருக்கிறதே என்ற அவநம்பிக்கையும் இருக்கும். ஆனால் அப்பா கூட வேலை பார்க்கும் எல்லாருக்கும் வீட்டில் பெண் குழந்தைகள்தான் என்பதனால் வெறும் சங்கு சக்கரம்,பூவாணம் , மத்தாப்பு போன்ற காந்தியவாதி பட்டாசுகளாக இருக்கும். அதையெல்லாம் பார்த்து ஏதோ சோலே பட அம்ஜத்கான் போல ஒரு ஏளன சிரிப்பு என்னிடம் பிறக்கும்.

எனக்கெல்லாம் பச்சை
கயிறு  இறுக்கி கட்டிய நைட்ரஜன் பாம் , செவென் ஷாட் எனப்படும் எங்கெங்கோ அலைபாய்ந்து வெடிக்கும் இன்னொரு தீவிரவாத வெடி , சரவெடி , லட்சுமி வெடி , நேதாஜி வெடி , இது எல்லாம் போக , என் சொந்த ஊரிலிருந்து சித்தப்பா கொண்டு வந்த ஓலை வெடி , நானும் வீரன்தான் என காண்பிக்க கையில் பற்ற வைத்து தூக்கி போடும் ஊசி வெடி என ஒரு படுபயங்கர வெடிபொருட்கள் லிஸ்டில் இருக்கும்.

பிள்ளையார் சுழி போடுவது ரோல் கேப் மூலம்தான்.அதிலும் ரோல் கேப் துப்பாக்கி எதுவும் ஒரு நாளைக்கு மேல் வராது. பத்து முறை லோட் செய்தால் பதினோராவது தடவை பயன்படாது. அதிகபட்சமாக ஒரு முறை  நான்கு துப்பாக்கி வாங்கியிருக்கிறேன். பிறகு எனக்கே மனம் பொறுக்காமல் மீதி கேப்பை   சுவற்றில் தேய்த்தும் , வெடிகளுக்கு சுற்றும் டெட்டனேட்டராக பயன்படுத்துவேன்.


வெங்காய வெடி என்கிற மாப்பிளை  வெடி அப்போதே தடை  செய்யபட்டிருந்தாலும் , எங்களுக்கு எப்படியாவது கிடைக்கும்படி தேவராஜன் கடை அண்ணாச்சி ஏற்பாடு பண்ணியிருப்பார். இப்போதெல்லாம்  கிடைக்கிறதா  என்று தெரியவில்லை.  சரியான ரவுடி வெடி.

இது மட்டும் வைத்து சமர்த்தாக வெடிக்கும் ரகம் அல்ல எங்கள் கோஷ்டி. பாம் என்றால் அது எவ்வளவு சத்தமாக, விதவிதமாக  வெடிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய தயாராய் இருக்கும்  தன்மானபடை.  வெயிட்டான பொருள் எது சிக்கினாலும் , அதற்கு அடியில் வெடி வைப்பது , பத்தியை அழகாக வெட்டி , வெடியுடன் சேர்த்து பற்ற வைத்து ஏறக்குறைய நாட்டு வெடிகுண்டை டைம்பாம் போல ஆக்கி வெடிக்க வைப்பது என பலவிதங்கள்.

இதில் நாங்கள் எல்லை மீறியது எதிலென்றால் , தீபாவளி சமயத்தில் மழை பெய்து தேங்கியிருக்கும் தண்ணீரில் , வெகு பக்குவமாக எதாவது ஒரு காய்ந்த இலையை மிதக்க வைத்து ,அதில் பாம் வைப்பது.
பற்ற வைக்கும்போது கொஞ்சம் அதிர்ந்தாலும் வெடி தண்ணீரில் மூழ்கி செயலிழந்து விடும் அபாயம் இருப்பதால் , எந்த யோகாவும் , ப்ராணயாமாவும் கற்றுகொள்ளாமலேயே மூச்சை முறைபடுத்தி ஒரு  பட்டாம்பூச்சி  அமர்வது போல்  பற்ற வைத்து ஓடி வருவோம்.

இந்த சின்ன வயதில் , இந்த செயற்கரிய செயலை பாராட்டாமல், பெருசுகள் எதோ அந்த பக்கம் சரியாக வெடி வெடிக்கும்போது வந்து சட்டையை சேறாக்கி கொண்டு , எதோ நாங்கள்தான் தப்பு செய்த மாதிரி 
' உங்க பையன் என் தீபாளி சட்டைய என்ன பண்ணிருக்கானு பாருங்க ' என வீட்டில் பற்ற வைத்து விடுவார்கள். பிறகு பண்டிகை நாளில் என் முதுகில் வெடி வெடிக்கும்.

ஒரு வழியாக எல்லா பட்டாசையும் வெடித்து , பிறகு இரவானதும் , ராக்கெட் , பூவாணம் , சங்கு சக்கரம் என ஒரு ரவுண்ட் வந்து அதையும் முடித்து , பாம்பு பட்டாசு புகையை முடித்து கொண்டு , எல்லா பசங்களும் ஆயுதம் தீந்த போர்வீரர்கள் மாதிரி நிராயுதபாணி ஆக நிற்போம். (நிற்க;கார்த்திகை  பட்டாசு கோட்டா தனி.)

பிறகு வெடித்த எல்லா பட்டாசையும் மொத்தமாக ஓரிடத்தில் கொட்டி , நெருப்பு மூட்டி அதில் வரும் வண்ண வண்ண புகைகளை ரசித்த பிறகே எங்கள் போர் குணம் தணியும். இருந்தாலும் எங்கள் தினவெடுத்த தோள்களுக்கு இன்னும் வெடி தேவை என்று பரிதாபமாக யாரை பார்த்தாலும் , எல்லாரிடமும் சொல்லி வைத்ததுபோல் ஒரு ஏளன புன்னகை தோன்றும் ' கொஞ்சமாடா ஆடுனீங்க..இனி என்னடா பண்ணுவீங்க ? ' என்பதுபோல்.

அடுத்த நாள் எந்த வீட்டுக்கு முன்னால் பட்டாசு குப்பை அதிகமாக இருக்கிறதோ அங்கு எதாவது ஒரு வாண்டு இருக்கிறது என்று அர்த்தம்.

கால மாற்றத்தில் எது மாறினாலும் , தீபாவளி நாளின் பரபரப்பு மட்டும் மாறாமல் இருக்கிறது. இப்போதும் ஊருக்கு சென்று எங்கள் வீதியை பார்த்தால் புதிய கோஷ்டி ஒன்று நாங்கள் செய்த அதையே திரும்ப அனுபவித்து செய்து கொண்டிருப்பது தெரிகிறது.ஆனால் எனக்கு இப்போதெல்லாம் வெடி வெடிக்க பயம் ஏற்பட்டுள்ளதை ஒத்துக்கொள்ள வேண்டும். அக்கா பையன் ரோல்கேப் வெடித்தாலே கண்ணை முடிகொள்ளும் பய உணர்ச்சி வந்து விட்டது. என்ன காரணமோ?

ஆனாலும் குடும்பத்துடன் ஒன்றாய் இருப்பது , மகிழ்ச்சியாய் கொண்டாடுவது  என தீபாவளியின் தனிச்சிறப்பு மாறவில்லை.டிவி  சேனல்களின் பிடிகளில் சிக்காமல் அந்த நல்ல நாளை காப்பாற்றுவது நம் பொறுப்பு.
அன்றைக்கு ரிலீஸ் ஆகும் படத்தை கூட வேறொரு நாள் பார்த்துக்கொள்ளலாம். குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடும் சந்தோசம் வேறு நாள் கிடைக்காது.

வேலையில் மூழ்கி, பொறுப்புகளில் சிக்கிக்கொண்டு ,எப்போதும் முகத்தில் ஒரு கண்டிப்பை போலியாய் காட்டிகொண்டு , கண்டம் தாண்டி வாழ்ந்து வரும் இந்த சமயத்தில் , எல்லாரும் ஊரில் தீபாவளி கொண்டாடி அதை படம் எடுத்து அனுப்புகிறோம்  என்று சொன்னாலும் ,அது முழு சந்தோசத்தை  கொடுக்காது என்பது நிதர்சனம். 

எப்போதும் தீபாவளி பின்னிரவில் ,அப்பாவை கட்டிக்கொண்டு ஏக்கமாய் கேட்கும் கேள்வி ஞாபகத்துக்கு வருகிறது - 'அடுத்த தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்குப்பா?' .

அதிக நாள் ஆகும் என்று தெரிந்திருந்தாலும் , அவர் அன்பாக அணைத்துக்கொண்டு , 'சீக்கிரமா வந்திரும்ப்பா ' என்று சொல்லும் ஆறுதலுக்கு மயங்கும் அந்த கணம் கவிதை.

ஹ்ம்ம் ..குழந்தையாகவே இருந்திருக்கலாமோ?

Monday, September 5, 2011

மூன்றாம் கடவுள் தினம்

ஆசிரியர்கள் தினமாக செப்டம்பர் ஐந்தை அப்போதுதான் அறிவித்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன. ஒரு கல்லூரியில் அந்த நாளை கொண்டாட ,விழா ஏற்பாடு செய்து ,அங்கே  பணி புரிந்த  விரிவுரையாளர்களை பேச அழைத்தனர். எல்லாரும் ஆசிரியர் தின பெருமையைப் பற்றி விலாவரியாக பேச,
 சந்திர  மோகன்  ஜெயின்  என்னும் ஒருவர் மட்டும் தன் முறை வந்ததும் இப்படி சொன்னார்:

'ஒரு ஆசிரியராக இருந்து   , அதை விட்டு விலகி ஜனாதிபதியாக பொறுப்பேற்றுகொண்ட ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை  ஆசிரியர்கள் தினமாக கொண்டாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.ஒரு வேளை அவர் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு , மீண்டும் ஆசிரியர் பணிக்கு திரும்பினால், அவர் திரும்பிய அந்த நாளை  ஆசிரியர்கள் தினமாக  வெகு சிறப்பாக கொண்டாடலாம்' என்று பொட்டில் அடித்ததுபோல் சொல்லிவிட்டு சென்றார்.

பின்னாளில் அந்த சந்திர  மோகன்  ஜெயின்  , மக்களால் ஓஷோ என்று கொண்டாடபட்டார்.
-----------------------------------

திலகர் காலத்தில் சுதந்திரம் கிடைப்பதற்கான சாத்தியகூறுகள் அதிகம் இருந்தன.அப்போது அவரை அணுகிய நண்பர்கள் , சுதந்திர இந்தியாவில் அவர் வகிக்க விரும்பும் பதவியைப் பற்றி நிறைய ஆலோசனைகள் கூறியபடி இருந்தனர். சிலர் , அவரை ஜனாதிபதியாக வேண்டும் என்றும் , சிலர் பிரதமமந்திரி ஆக வேண்டும் என்றும் சொல்ல , திலகர் கொஞ்சங்கூட  தயங்காமல் சொன்ன பதில்:

'நான் ஏன் பிரதமமந்திரி ஆக வேண்டும்? நான் மீண்டும் என் ஆசிரியர் பணிக்கு செல்வேன்.. நூறு பிரதமர்களை உருவாக்குவேன்..'
-------------------------------------

நீங்கள் ஓஷோவை ஆதரிக்கிறீர்களோ ,அல்ல திலகர் வழியை  பின்பற்றுகிறீர்களோ எதுவும் தவறில்லை. ஆனால் எந்த துறை
வல்லுனரையும் உருவாக்கும் ஆசிரியர் இனத்தை வாழ்த்த ,
அவர்களுக்கு நன்றி செலுத்த வருடத்தில் ஒரு நாள்,அது எந்த நாளாக இருந்தாலும் சரி, ஒதுக்குவது மிக முக்கியம்.

உலகறிந்த பெரியவர்களைத் தவிர, என் வாழ்க்கையில் நான் சந்தித்த  யாரையும் முன்மாதிரியாய் நினைத்து முன்னேற இயலவில்லை.ஆனால் ஒரு சிலர் நாம் நினைவுப்படுத்தாமலேயே , நம் மனதில் அவ்வப்போது வந்து நமக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துவார்கள். அதில் கண்டிப்பாக நமக்கு ஆசிரியராய் இருந்த  ஒருவராவது இருப்பார்.அப்படி இல்லையென்றால் நீங்கள் 
அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று அர்த்தம். நானும் கிட்டத்தட்ட அப்படிதான் , அவரை சந்திக்கும் வரை.




பதினோராவது வகுப்பு தொடங்கியபோது , புதிதாக எங்கள் பள்ளிக்கு வந்து சேர்ந்தார் முத்துகுமாரசாமி - பௌதீக ஆசிரியர் .MKS என்று சுருக்கி கூப்பிட சொன்னார்.

எல்லாரும் ஆசிரியர் பணி என்ன  என்பதில்  மிக சரியான ஒரு தவறான அபிப்ராயம் வைத்திருக்கிறோம்.பாடம் சொல்லிக் கொடுப்பவன்தான்  வாத்தியார் என்று.  அல்ல. வாழக் கற்றுக்கொடுப்பவன்தான் உண்மையான குரு. MKS  இரண்டாம் வகை.

எதற்கும் வளைந்துகொடுக்காத தைரியம். நேராக கண்ணை ஊடுருவி மனதைப்  படிக்கும் பார்வை.  
யாரையும் அடிக்க தேவையில்லை - வெறும் எச்சரிக்கையில் மட்டுமே மாணவனின் தவறை ஒத்துக்கொள்ள வைத்து விடும் கண்ணியம். இதுதான் MKS.

வகுப்பில் யாரையும் கண்டிக்க மாட்டார்.அத்தனை பேர் முன்னிலும் அவமானபடுத்தமாட்டார்.அதிகமாக போனால் அவரின் கோபத்தின்  உச்சக்கட்டம் 'Quit the hall'லில் முடியும். தனியாக அழைத்து தவறை சொல்லி  திருத்துவார்.திருந்த வேண்டும்.இல்லையென்றால் கண்டிப்பாக திருத்துவார்.  

பாடம் நடத்தும்போது புத்தகம் அவர் கையில் என்றுமே இருந்ததில்லை. வெறுங்கையை வீசி வகுப்புக்கு வரும் ஒரே வாத்தியார் அவர்தான். அவர் நடத்துவதை ஒரு முறை கவனித்தால் , கண்டிப்பாக புத்தகத்தை மறுபடியும் மேயத்தேவை இல்லை.

'Be Black or White' என்பதற்கு மிக சிறந்த உதாரணம். எந்த சூழ்நிலையில் எப்படி இருக்க  வேண்டும் என்பது அவருக்கு தெரியும்.மார்க் எடுக்கவில்லை என்றால் வார்த்தையாலேயே  புரட்டி எடுப்பவர் ,  மாணவர்கள் எல்லாரையும் அழைத்துக் கொண்டு 
 சுற்றுலா கூட்டிச்சென்று  கூடப்படிக்கும்   மாணவன் போல் விளையாடுவார்.

புத்தகத்திற்கு அட்டை போடாமல் கந்தலாக வைத்திருக்கும் மாணவனைப் பளார் என்று அறையும் ஆசிரியர் மத்தியில் , அவர் புன்னகையுடனே இப்படி சொன்னார் - 'எவ்வளோ அழகான பையன் நீ. புத்தகத்தையும் அதே மாதிரி வெச்சா நல்லா இருக்கும் இல்ல..?' . அடுத்த நாள் புத்தகம் பளீர்.

மொழிபாடங்களிலும், கணிதத்திலும் நல்ல மதிப்பெண் எடுக்கும் நான் இயற்பியலிலும் , பௌதீகத்திலும் ஒரு சுமார் ரகம்தான்.காரணம் எனக்கு பிடிக்காத பாடத்தில்,  ஆர்வம் இல்லாமல் எதோ படிக்கவேண்டுமே என்று காட்டிய மெத்தனம்.

என் விஷயத்தில் அவர் முடிவெடுக்க சிரமபட்டார். மோசமான மாணவன்  என்று  முடிவெடுக்கவும் முடியவில்லை அதே சமயம் அவர் பாடத்தில் மட்டும் அக்கறை காட்டாமல் இருப்பவனை விடவும்  முடியவில்லை. ஒருநாள் மிக வருந்தி என்னை அழைத்து சொன்னார் - ' நல்லா படிக்கிறவன் நீ. ஆனா பிடிக்காதத,  வலுக்கட்டாயமா படிக்க சோம்பேறித்தனம்.உன் விருப்புவெறுப்பை பாடத்துல காட்டக்கூடாது. பின்னால வருத்தபடுவ.போ' .

அவர் சொன்ன பின்னால , ரிசல்ட் வரும்போது வந்தது. பௌதீகத்தில் மட்டும் ஒரு முப்பது குறைந்து என் இஞ்சினீரிங் கட்-ஆப் மார்க்கில்  ஓரளவு நல்ல அடி. மெரிட் சீட் கிடைக்க விடாமல் தடுத்தது ,அவர் சுட்டிக்காட்டிய என் மெத்தனம்.வருத்தப்பட்டேன்.

வெறும் மனப்பாடம் செய்வது அவருக்கு பிடிக்காது. அந்த விஷயத்தில் மதிப்பெண் என்ன எடுத்தாலும் பாராட்ட மாட்டார். புரிதல்தான் அவர் இலக்கு. டியுசன் எடுக்கும்போது செருப்பு அணிந்து பாடம் நடத்த மாட்டார். அவர் வீடு திருவிழா போல் வண்டிகளால் சூழப்பட்டிருக்கும்.அவர் சோர்வாக இருந்து நான் பார்த்ததில்லை.

 ஒரு கல் , ஆணி, பை, சாக்பீஸ் என எது கையில் கிடைத்தாலும் அதை வைத்து அழகாக ,சொல்லவேண்டிய விஷயத்தை விளக்குவார்.ஒருமுறை , ப்யூஸ் போன ட்யுப்லைட்டை கரண்ட் கம்பத்தில் போகும் வயர்கள் அருகில் பிடித்தால் அது எரியும் என்று அவர் சொல்ல , கிட்டத்தட்ட இருபது பேர் ஏழு , எட்டு ட்யுப்லைட்களை இரவில் அப்படி செய்து பார்த்து ஏதோ நாங்களே அந்த உண்மையை கண்டுபிடித்த மாதிரி சத்தம் போட்டு அக்கம்பக்கம் இருப்பவர்கள் துரத்தும் வரை  சந்தோசத்தை கொண்டாடினோம். 

வசதி குறைந்த மாணவர்களிடம் அவர் எந்த கட்டணமும் வாங்கியதில்லை. அதையும் அவரால் உதவிபெற்ற  மாணவன் ஒருவன் சொல்லித்தான் எனக்கு தெரியும். 

அவரை பொறுத்தவரை நான் அவரிடம் பயின்ற மாணவரில் ஒருவன். என்னை சரியாக நினைவு வைத்திருப்பாரா என்பது சந்தேகமே.இல்லையென்றாலும்  தவறில்லை.நினைவில் வைக்கும் அளவுக்கு நான் அவருக்கு எந்த பெருமையையும் தந்ததில்லை.



பதினோரு வருடம் கடந்தாயிற்று.இன்று வரை எதை செய்தாலும் ஒரு ஒழுங்கும்,அக்கறையும்,சரியாக செய்தால் எவருக்கும் பயப்படத் தேவையில்லை என்ற தைரியமும் கொண்டிருப்பது அவரிடம் கற்ற பாடம்தான்.எதிலும் Practical அணுகுமுறை என்பது அவர் சொல்லிகொடுத்த மிகபெரிய மந்திரம்.

நான் கடைபிடிக்கும் வாழ்க்கைமுறை யாராவது பாரட்டும்படியிருந்தால் அந்த பாராட்டு அவருக்கே சேரும். அவர் வாழும்முறையை பார்த்தே அதை மிகத்தெளிவாக  கற்றுக்கொண்டேன். அவரிடம் இதுவரை நான் சரியாக கற்றுகொள்ளாதது..வேறென்ன? பௌதீகம்தான்.

இப்படி எத்தனையோ ஆசிரியர்கள் , நம்மை வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள்.படிக்கும் காலத்தில் அவர்களை , அவர்களின்  கட்டுபாடுகள் நமக்கு பிடிக்காமல் போனாலும் காலம் தாண்டியும் நாம் அவர்களுக்கு கட்டுப்பட்டுள்ளோம்.

இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்.

Monday, August 8, 2011

நண்பர்கள் என்னும் தொல்லைகள்..

'உன் சேர்க்கை சரியில்ல.. பிரெண்ட் பிரெண்ட்-ன்னு சுத்தறது நிறுத்து ..அப்போதான் உருப்படுவ..' - அப்பா

'நீ நல்ல பையன்தாண்டா.. அவன் சரியில்லையே..சரியான உதவாக்கரை ஆச்சே.. ' - என் அம்மா

'நீ நல்ல பையன்தாண்டா.. அவன் சரியில்லையே..சரியான உதவாக்கரை ஆச்சே.. ' - அவன் அம்மா

'இப்படி படிக்காம காலேஜுல உங்கள மாதிரி குரூப் சேர்ந்து சுத்துனவங்க  எல்லாம் வெளிய எவ்ளோ கஷ்டபடுறாங்க தெரியுமா..?' - வாத்தியார்

இதையெல்லாம் தாண்டி ,காப்பாற்றி வந்த  நட்பு எந்நாளும் நம்மை தலை குனிய வைக்காது.. மாறாக நம்மை பலப்படுத்தும்;துணை நிற்கும்.உயிர் காக்கும்..




பெரும்பாலும் பள்ளிபடிப்பு ஆரம்பிக்கும்போதே , இதுவும் ஆரம்பமாகும்.. இதற்கு எந்த நியதியும் தகுதியும் கிடையாது. காலங்கள் செல்ல செல்ல , பல சண்டைகள்,மனஸ்தாபங்கள் ,
பிரிவுகள், எல்லாம் தாண்டி பலப்பட்டு அந்திம காலம் வரை கூட வரும் - நட்பு..

'நீ இதை கொடு;நான் இதை தருகிறேன்' என்ற சொந்தபந்தங்களுக்கான அடிப்படை பரிவர்த்தனை தேவை ஏதும் இல்லாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும்   நட்பு.

நட்புகளில் பல இன்னல்கள் வரும்.ஆனால் அதன் சிறப்பு , விளைவுகள் சிறிதோ பெரிதோ , நட்பு தயக்கம் ஏதுமின்றி தொடரும்.

-------------------------------------
'பேசாம இருடா .. மாட்டிக்குவோம்..மிஸ் நம்மளயே பாக்கறாங்க..'

'பயப்படாதடா.. சரி சொல்லு .. இன்னைக்கு முதல் பஸ்ல போக வேண்டாம் .. கிரௌன்ட்ல  கொஞ்ச நேரம் விளையாண்டுட்டு ,அப்புறம்..'

'என்னப்பா அங்க ரெண்டு பேருக்கும் எப்போ பாத்தாலும் .. கொஞ்சம் என்கிட்டயும் சொல்லுங்க..'

'தொலஞ்சுது...சொன்னேன் கேட்டியா.. நீயே சொல்லுடா..'

' மிஸ்..அது..இவன் எதோ கிளாஸ் முடிஞ்சதும் விளையாடலாம்னு சொல்லிட்டு இருந்தான் மிஸ் '

'அட பாவி.. கதைய மாத்திட்டியேடா..'

'நீயும் படிக்க மாட்ட.. அடுத்தவனையும் படிக்க விட மாட்ட.. வெளிய போய் நிக்கறியா..'

'இனி உன் கூட சத்தியமா பேச மாட்டேன்டா '

--------------------------------------------------------------

 'என்னடா என்ன  ஆச்சு ? '

' மூணு  பேப்பர் போயிடுச்சுடா..'

'ஆண்டவா..காப்பாத்திட்ட... சூப்பர்டா.. நீ மட்டும் பாஸ் ஆகியிருந்தா நான் அடுத்த தடவை தனியா  அரியர்ஸ் எழுதணும்...'

'இனி உன் கூட சத்தியமா பேச மாட்டேன்டா '

-----------------------------------------------------

'என்ன ஏன்டா திட்டறா..அவ உனக்கு சரியான  பொண்ணே இல்லடா..அதான் வெட்டி விட்டேன்.'

'அந்த ஜூனியர் பொண்ணு விஷயத்துலயும் இதையேதாண்டா சொன்ன'

'என்னடா பண்றது.. அவளும் உனக்கு சரியான பொண்ணு இல்லடா.. அதான் வெட்டி விட்டேன்'

'டேய்..அதை நான் முடிவு பண்ணும்டா..உனக்கு ஏன்டா?.. '

'எனக்கு என்னவா ? யாரு மீதி ரெண்டு வருஷம் தனியா சைட் அடிப்பா? என்னால முடியாதுப்பா..'

'டேய்.இனி உன் கூட சத்தியமா பேச மாட்டேன்டா'
----------------------------------------------------------

'மச்சான் ..மொதல் ரவுண்ட் க்ளியர் பண்ணிட்டேன்டா..
இனி க்ரூப் டிஸ்கசன் மட்டும் ஒழுங்கா பண்ணனும்..'

'பண்ணிக்கோ..எங்கள இப்போவே போ-ன்னு சொல்லிட்டாங்க..உனக்கு சாயந்தரம்  சொல்லுவாங்க'

'டேய்..உனக்கு வாய்ல நல்ல வார்த்தையே வராதாடா.. சரி அரை மணி நேரம் இருக்கு.. அந்த புக்க கொடு '

'அத நான் அப்பவே பிரசாத்கிட்ட கொடுத்து அனுப்பிட்டேன்..யாரு கைலயே வெச்சிருப்பா..சீக்கிரம் வாடா.. பீச்சுக்கு போவலாம்..'

'ஏன்டா உனக்கு இந்த புத்தி..இனி உன் கூட சத்தியமா பேச மாட்டேன்டா' 

---------------------------------------------------------

என்னதான் இம்சையான நண்பனாக இருந்தாலும் , என்ன சண்டை வந்தாலும் அது கண நேரத்தில் காணாமல் போய் விடும்..

நட்பின் சக்திக்கு   முன் , எதிர் வரும் கஷ்டத்திற்கு மட்டுமல்ல ,இடையில் வரும்  கோபத்திற்கும் ஆயுள் இல்லை..

தப்பு செய்திருந்தால், தாய் அடித்தால் கூட சீறும் நம் சுய கவுரவம் , நண்பனின் உரிமையான 'பளார்' முன் உள்ளே பதுங்கி  விடுகிறது..

யோசித்து பாருங்கள்..
கம்யூனிசம் என்பது கண்டிப்பாக நட்பில் மட்டுமே காண முடியும்..எந்த பேதமும் இல்லாமல் நெருங்கிய உறவு தருவது நட்பில் மட்டும்தான்.

ஆணோ பெண்ணோ , நட்பு என்று வரும்போது அங்கே இன பேதங்கள் தளர்ந்து போய் , இங்கிதமும்,செருக்கும் தாண்டிய புனித உறவுக்கு இதயங்கள் ஆட்கொள்ளபடுகிறன..



பள்ளியில் ,ரத்தம் வர சண்டை போட்ட நண்பனுடன் அடுத்த நாளே சிறிது பேசிய  நாட்கள்.. வஞ்சம் என்பது உறவுகளுக்கு நடுவில்தான்.. நட்பில் இல்லை..

அக்கா கல்யாணத்தில் கூட்டமாக வந்து எல்லா வேலையும் செய்த நண்பர்கள்..எல்லாம் முடிந்த பின், கடைசியாக இருப்பதை கௌரவம் பாக்காமல் சாப்பிட்டு செல்லும் அந்த பாசம்..

எல்லா நண்பர்களும் ஒரே வீட்டில் சேர்ந்து இருக்கும்போது , ஒருத்தனுக்கு மட்டும் காரம் ஆகாது என்பதற்காக , எல்லாரும் தங்கள் சுவையை தியாகம் செய்த அந்த கரிசனம்...

நண்பனுக்கு கல்யாணம் என்றால் , எத்தனையோ திட்டு வாங்கியும் , விடுப்பு எடுத்து சென்னையோ , பெங்களூரோ , எங்கிருந்தோ பஸ்ஸில் கூட்டத்தில் கால் கடுக்க பத்து மணி நேரம் நின்று வந்து , வாழ்த்தும் அந்த அன்பு..

அம்மாவோ அப்பாவோ உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் இருக்கும்போது , கேட்காமலேயே வந்து உதவி செய்து தோளில் சாய வைத்து ஆறுதல் படுத்தும் நேசம்...

இதுதான் சார் நட்பு...

குறைவாக சொல்லவில்லை..பெரும்பாலும் தகுதி பார்த்து வருவது காதலும் கல்யாணமும்..இது நிதர்சனம்..

இவன் இப்படி ஒரு நல்ல நிலைக்கு வருவான் என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உயிரை கொடுப்பது , பெற்றோருக்கு அடுத்து நண்பர்கள்தான்..

அதில் இணக்கங்கள் எவ்வளவு இருக்குமோ அதே அளவு பிணக்கங்களும் இருக்கும்..ஆனால் இறுதியில் ஜெயிப்பது நட்புதான்... எல்லா மனகசப்பும் அடுத்த முறை பார்க்கும்போது  சொல்லும் 'எப்படிடா இருக்க?'வில் செத்து போகும்..

பிரிந்த காதலை கூட மறந்து விடுகிறோம்.. ஏதோ ஒரு காரணத்துக்காக பிரிந்த நண்பனை நினைத்தால் அழுகிறோம்..உங்கள் அந்த நட்பு உண்மை என்றால் ,கண்டிப்பாக 'எதற்கு பிரிந்தோம்?' என்ற  காரணம் மறந்திருக்கும்.. நட்பு மட்டும் ஞாபகம் இருக்கும்..

இது வரை நாம் மறந்த நண்பர்களுக்கும் , நம்மை மறந்த நண்பர்களுக்கும்  , 'நண்பர்கள் தின வாழ்த்துக்கள்' சொல்லி நட்பை உயிர்ப்பிப்போம்.




நண்பர்கள் தொல்லைதான் சார்..

ஆனால் அந்த தொல்லை எந்த எல்லை வரை போகிறதோ , அது வரை நம் நட்பின் ஆழம் இருக்கிறது என்பது திண்ணம்..

வாழ்த்துக்கள் சொல்லி நண்பனை மூன்றாம் மனிதனாக்க  வேண்டாம். இன்றைக்கும் எப்போதும் போல அழகாக இம்சைப்படுத்துங்கள்..

நட்பின் வாழ்த்தும் அரவணைப்பும் உங்களுக்கு என்றென்றும் இருக்கும்.

WORSHIP THE FRIENDSHIP.....

Thursday, July 7, 2011

மனமிருந்தால் மார்க்கம்..

நீங்கள் நாத்திகரா ? ஆன்மீகவாதியா  ?  நடுநிலையானவரா ? எதிலும் சரியாக புரிதல் இல்லாமல்  இருக்கும் மிடில் கிளாஸ் மனிதரா?

 உங்கள் சித்தாந்தம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.. அதை அடைய மிக எளிய வழி ஒன்று உண்டு. கடின உழைப்பிற்கு எப்படி மாற்று/குறுக்கு வழி இல்லையோ அதேபோல இதற்கும் எந்த குறுக்கு வழியும் அல்ல..

உங்கள் இலக்கு  சொர்க்கமோ , அல்ல புகழோ , நல்ல நட்பு வட்டாரமோ  எதுவாக வேண்டுமானாலும் சரி..அதை அடைய  நல்ல, மிக இனிமையான வழி ஒன்று உள்ளது . அதற்கு தமிழ் வைத்த பெயர் - உதவி.
தன்னலமல்லாதவர்கள் வைத்த பேர் சேவை.

அதை செய்தால் நீங்கள் மதிக்கப்பெறுகிறீர்கள்; போற்றப்படுகிறீர்கள் ; காலம் தாண்டியும் நினைவில் வைக்கப்படுகிறீர்கள்; சில சமயம் சிலருக்கு கடவுளாக காட்சி அளிக்கிறீர்கள்.




 எந்த வகையில் உதவி செய்தாலும் அந்த உதவியின் பயனுக்கு முடிவுகாலம் - Expiry Date ஒன்று உண்டு.

பண உதவியா ? கடைசி தாள்  தீர்ந்ததும் மீண்டும் தேவைப்படும்.
உணவு கொடுத்து  ஆதரித்த மனிதரின் உதவி மகத்துவம் , அடுத்த பசி வந்ததும் முடிந்து விடுகிறது.

ஆனால் அடுத்தவருக்கு  அறிவைக் கொடுத்து  உதவினால் அந்த உதவிக்கு அழிவில்லை.

'பசித்தவனுக்கு உண்ண மீனைக்  கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடு '  என்ற ஜப்பானிய பழமொழியின் சாரம்சம் இதுதான்.

இதை கடைபிடிப்பதில் இப்போது முன்னுக்கு இருப்பவர்கள் முன்னாள் மாணவர்கள் ...

பள்ளிகட்டணம் பிரச்சனை ஒரு பக்கம் பற்றி எரிந்துக் கொண்டிருக்கும்போது , இன்னொரு பக்கம் சத்தமே இல்லாமல் ஒரு பசுமைப்புரட்சி செய்து வருகிறார்கள் நம் முன்னாள் மாணவர்கள்.
என் சக நண்பர்கள் ஒன்று கூடி அவர்கள் வசதிக்கு ஏற்ப ஒவ்வொரு குழந்தையின் படிப்புக்கு உதவுகிறார்கள். ஒருவரோ ,அல்லது இருவரோ   சேர்ந்து ஒரு குழந்தையை தத்து எடுத்து  அந்த வருடத்திற்கான படிப்புக்கு தேவையான புத்தகங்கள் , சீருடை
பள்ளிக்கட்டணம் மற்றும் வேறு என்ன தேவையோ அதை  கொடுத்து உதவுகிறார்கள்.



இதில் விசேசம் என்னவென்றால் இவர்கள் எந்த ஒரு அமைப்பும் சாராது , ஒன்றாக படித்த மாணவர்கள்,நம்ப தகுந்த நண்பர்கள் வட்டமாக மட்டும் கொண்டு  உதவி செய்கிறார்கள்.

விசாரித்து பார்த்ததில் என் நண்பன் சொன்னது காரணம் மிகுந்ததாக இருந்தது - 'எந்த ஒரு அமைப்பிற்கோ பணம் கட்டி அது குழந்தைகளுக்கு சரியாக போய் சேருகிறதா இல்லையா எனத்தெரியாமல் இருப்பதை விட , நாமே நம் நண்பர்களுடன் சேர்ந்து செய்தால் நம் கண்காணிப்பு அதிகமாகிறது..
தவிர எந்த குழந்தையை தத்து எடுக்கிறோமோ அதை அவ்வப்போது சென்று பார்த்து வர அருகில் இருந்தால்    எளிதாக உள்ளது.
அதனால்தான் கூடியவரை நண்பர்களின் சொந்த ஊர்களில்  குழந்தைகளை தத்து எடுக்க சொல்கிறோம்  '.


உண்மை. அதை விட முக்கியம் நம் உதவி பெறும் குழந்தையோடு ஆதரவாக பேசி அதன் படிப்பு அட்டையை பார்த்தலும், நலம் விசாரிப்பதிலும் இருக்கும் திருப்தி , வெறுமனே 'ஏதோ புண்ணியம் கிடைக்கும்' என்று பணம் மட்டும் கட்டி விட்டு ஒதுங்கினால் கிடைக்காது.

இதை சரியாக விளக்க வேண்டுமானால் ,
கடவுளுக்கு தோட்டத்தில் சென்று பூப்பறித்து ,  அதை மாலையாக கட்டி சென்று சார்த்துவதிலும் , கோவில் முன் பூக்காரியிடம்  உடனே  வாங்கி , அர்ச்சகர் முன் நீட்டி வேண்டுவதிலும் இருக்கும் திருப்தியே சான்று.

உதவி செய்வது என்று முடிவெடுத்து விட்டால் அதை முழுதாக செய்யுங்கள் . அதைத்தான் இந்த முன்னாள் மாணவர்கள் செய்கிறார்கள்.
இங்கு சொல்லியிருப்பது ஒரு குழுவினரைப் பற்றிதான். தமிழகத்தில் எத்தனையோ பேர் இப்படி படிப்பிற்கு உதவி செய்து வருகிறார்கள்.

இவர்கள் உதவி இப்படியிருக்க , இன்னொரு வகையில் உதவுகிறார்கள் வேறு மாணவர்கள்.

உதாரணம் இந்த இணையத்தளம்  - http://www.a2zinterviews.com/

முன்பெல்லாம் படிப்பதற்கோ அல்ல நேர்காணலுக்கோ , நிறைய புத்தகங்களை அடுக்கி வைத்து படிக்க வேண்டும்.. இப்போதோ எல்லாமே இணையத்தில் இருந்தாலும் , எல்லாவற்றையும் சேகரித்து படிப்பது 
பிரம்மப்ப்ராயத்தனமாக   இருக்கும்..

இந்த இடத்தில்தான் மேல் சொன்ன இணையத்தளம் உதவிக்கு வருகிறது.



கணினி,மென்பொருள் , முக்கிய கணினிமொழிகள்  சார்ந்த கேள்வி பதில்கள் அனைத்தும் தேடி எடுத்து அடுக்கி வரிசைப்படுத்தி மாணவர்களுக்கு இன்ஸ்டன்ட் காஃபி  போல் கொடுத்திருக்கிறார்கள்.

அது  மட்டும் அல்லாது  நேர்காணலில் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் , Aptitude Test  எனப்படும் சூட்சும அறிவை திறனாய்வு செய்யும் கேள்வி பதில்கள் , கூடுதலாக Datawarehousing எனப்படும் கணித்துறையில் முக்கிய உள்துறை பற்றிய விளக்கங்களை சுருக்கமாக , எளிதாக புரியுமாறு கொடுத்திருக்கிறார்கள்.

பொது அறிவு கேள்விகளும் ,புதிர்களும்  உண்டு.

எந்த ஒரு பயனும் , எதிர்பார்ப்பும் அல்லாமல் இவர்கள் செய்யும் இந்த உதவி மகத்தானது.
மாணவர்களுக்கு மிக மிக உதவும் இது போன்ற தளங்கள் எத்தனையோ இருக்கின்றன.
ஒவ்வொன்றுக்கு பின்னாலும் சுயநலமில்லாத சில  நல்லவர்களின் உழைப்பு இருக்கிறது.

'நான் படித்தபோது எனக்கு கிடைக்காத உதவி என் தம்பி  தங்கைக்கு கிடைக்கட்டும். அது பொருளாதார ரீதியாய் இருந்தாலும் சரி, கல்வி சம்பந்தப்பட்டதானாலும் சரி
என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும்'  என்ற எண்ணம் மிகுந்தவர்கள்,  மாணவர்களுக்கு கொடுக்கும்  பரிசு அது.

இதில்  கவனிக்க வேண்டிய விஷயம் ,
இவர்கள் அனைவரும் தங்கள் கடின வேலை நேரத்தில் இருந்து   கிடைக்கும் ஒய்வு நேரங்களை தியாகம் செய்து இதை செய்கிறார்கள்..

ஹ்ம்ம்..முன்பெல்லாம் உதவிக்கு யாரும் அவ்வளவாக கிடையாது.. இப்போது எல்லா வகையிலும் உதவி கொட்டி கிடக்கிறது... அதை பயன்படுத்துவதை தீர்மானிக்க மாணவர்கள் முன்வருவார்களா என்பதுதான் கேள்விகுறி..

அடுத்த முறை ஒரு குழந்தையை தத்து எடுத்து  படிப்புக்கு உதவுவதை செய்யலாம்.

அதற்கு அச்சாரமாக  இந்த விவரங்களை பகிர்வதிலிருந்து நம் உதவியை ஆரம்பிப்போம்.

உதவும் மக்களுக்கு நன்றிகளும்.. உதவி தேவைபடுவோர்க்கு பயன்களும் சென்றடையட்டும்..

Friday, June 17, 2011

பயணிகள் கவனத்திற்கு...

கடந்த ஒரு வாரமாக கனத்த மனதுடன்தான் நடமாட முடிகிறது. காஞ்சிபுரம் அருகே நடந்த தனியார் பேருந்து விபத்தில் எனக்கு 
தெரிந்த மூன்று பேரை இழந்திருக்கிறேன்.
அதுவும் கருகிய நிலையில் பிணங்களை அடுக்கி வைத்திருந்த புகைப்படத்தைப் பார்த்தபோது , வலி அதிகமாகிறது.

எல்லாரும் பேருந்து ஓட்டுனரையும் அதன் நிறுவனத்தையும் குறை சொல்கிறார்கள்.ஒரு வகையில் அது உண்மையே.ஆனால் முழுதாக குறை சொல்வதற்கு முன் நாம் எப்படி தனியார் பேருந்துகளை சார்ந்திருக்கும் நிலைமைக்கு வந்தோம் என்பதை திரும்பிப் பார்க்க வேண்டியது கட்டாயமாகிறது.



அது தொண்ணூறின்  தொடக்கம். தமிழகத்தின் எந்த ஊரிலிருந்தும் தலைநகரமான சென்னைக்கு போவதானால் எல்லாரும் அணுகுவது ரயில் வசதியை மட்டுமே.இள வயதுள்ளவர்களும்,கடின பயணத்துக்கு பழக்கப்பட்டவர்களும் மட்டுமே பேருந்தை ,அவ்வளவு நீண்ட பயணத்துக்கு 
பயன்படுத்துவார்கள்.

பெரும்பாலும் ஒரே பேருந்து உபயோகம் 
அப்போது இல்லை. இரண்டு , மூன்று பேருந்துகள் மாறி  மாறி சென்னையை அடைய வேண்டியிருக்கும்.ஆனால் இப்படி பயணிப்பவர்கள் மிக சொற்பமே. மீதி பேர் ரயிலின் சுகமான அலுப்பில்லாத , பயணத்திற்கும் , நிதானமான கட்டணத்துக்கும் பழகி ரயிலையே சார்ந்திருந்தார்கள்..இப்போதும் இருக்கிறார்கள்.

அடுத்த பத்து வருடத்தில் மக்கள் எண்ணிக்கை கூட , சென்னையின் தரமும் வேலைவாய்ப்பும் அதிகரிக்க , பயணிகளின் எண்ணிக்கை மிக கணிசமாக உயரத் தொடங்கியது. அதற்கு ஈடாக எத்தனை 
ரயில்களைத்தான் ,பெட்டிகளைத்தான் அரசும் அதிகரிப்பது ? 

பயணிகளுக்கு வேறு வழி இல்லை. மாறி மாறி செல்லும் பேருந்துகளை முயற்சி செய்து பார்த்து , அந்த பயணத்தின் அலுப்பில் அடுத்த நாட்களை தூக்கம் இழந்த கண்ணோடும் , சோர்வோடும் எதிர்கொண்டு கிரங்கியிருந்தார்கள்.அவர்களின் வேலை பாதிக்கப்பட்டது.

பயணிகள் இருவகை உண்டு :
மனைவி,குடும்பத்தை ஊரில் விட்டு , வாரம் ஒரு நாள் விடுமுறையில் வீடு வரும் திருமணம் ஆனவர்கள்.
மாதம் , இருமாதங்களுக்கு  ஒரு முறை பெற்றோரைக் காண வரும் திருமணம் ஆகாத பயணிகள்.

இதில் அதிகம் பாதிக்கப்பட்டது முதல் வகையே. காரணம் இரண்டாம் வகை பயணிகள் பொறுத்திருந்து ரயிலில் முன்பதிவு செய்து மாதம் ஒரு முறை வருவதால் அது அவர்களுக்கு போதுமானதாய்  இருந்தது. ஆனால் வாரம் ஒரு முறை வீடு செல்லும் கட்டாயம் உள்ளவர்கள் ,எப்படி இதே முறையை பயன்படுத்துவது? அது சாத்தியம் என்றாலும் அப்போதைய நேரடி முன்பதிவு மட்டுமே இருந்த காலத்தில் ,மிக கடினமாய் இருந்தது.


 இங்குதான் தொடங்கியது தனியார் பேருந்து சேவை.
 இந்த பயணிகளை குறி வைத்து ,இவர்கள் தேவை என்ன என்பதை அறிந்து அருமையான திட்டத்துடன் களம் இறங்கின இந்த நிறுவனங்கள்.

'இவர்களுக்கு இருப்பது வார இறுதி நாட்கள் மட்டுமே. ஆக முக்கிய தினங்கள் இரண்டு - வெள்ளி , ஞாயிறு. அதில் கூடியவரை   அலுப்பில்லாமல் இவர்களை அழைத்து  சென்றால்  ,தரமான இந்த சேவையை தொடர்ந்தால் நிரந்தர வாடிக்கையாளர்கள் நிறைய பேர் வருவார்கள். ஆனால் இந்த சொகுசான பயணத்தைக் கொடுக்க , அரசு பேருந்துகள் போல் சாதாரண கட்டணம் கட்டுபடியாகாது. இரண்டு மடங்காக இருந்தால் மட்டுமே சமாளிக்க முடியும். முயற்சிப்போம். .பயணிகளின் வரவேற்பு   எப்படி இருக்கிறது என்று..' என சிந்தித்தபடி தொடங்கியது தனியார் சொகுசு பேருந்து சேவை.



எதிர்பார்த்தபடி வந்து குவிந்தன பயணிகள் கூட்டம். 'எனக்கு தேவை என் குடும்பத்துடன் செலவழிக்க இரண்டு நாள். போக வர அலுப்பில்லாத பயணம்.இதை தரும் இவர்களுக்கு கட்டணம் அதிகம் என்றாலும் தலையாட்ட வேண்டியதுதான். வேறு என்ன செய்ய ? ' என்று வந்த பயணிகள் கூடுதல் சலுகையாய் கிடைத்த மிக வேகமான பயணத்தையும் , இரட்டை ஓட்டுனர்கள் உள்ள பேருந்தையும் பாராட்டி ,அவர்களின் பேருந்துக்கு ஆதரவு அளித்தனர்.

இது வரை இரு சாரார் பக்கமும் தவறு இல்லை. இவர்கள் தேவை பூர்த்தியாகிறது.அவர்களின் வேலைக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. A Well Balanced Equation.

முன்னேற்றத்தின் அடுத்த கட்டமாக
திடீரென்று வந்தது சென்னை மற்றும் அண்டை மாநில தலைநகர் பெங்களுரின் புதிதாய் முளைத்த
எக்கச்சக்க  வேலை வாய்ப்புகள்.கூடவே தகவல் தொழில்நுட்பத்தின் துறை சார்ந்த முன்னேற்றமும் நம் ஊர்
பிள்ளைகளுக்கு அங்கே செல்ல வேண்டிய கட்டாயம் உருவாக்கியது. இப்போது பயணிகள் எண்ணிக்கை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மும்மடங்கு.

ரயிலுக்கு போவதென்றால் அருகிலிருக்கும் பெரிய ஊரின் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து சென்னைக்கு/பெங்களுருக்கு  போக வேண்டும். ஆனால்  தனியார் பேருந்துகளின் கிளைகள் ஒவ்வொரு ஊருக்கும் இருக்கிறதே.இரவு வரை வீட்டில் இருந்து விட்டு மெல்ல செல்லலாமே என்ற
நியாயமான வாதம் ,இந்த பக்கம் காந்தம் போல  இழுக்க எதுவாய் இருந்தது.

பையனோ பெண்ணோ ஊர்க்கு விடுமுறையில் வருகிறேன் என்று சொன்னால் பெற்றோர் கேட்கும் அடுத்த
கேள்வி 'எந்த பஸ்ல வர? இப்போவே ரிட்டனும்  புக் பண்ணிடுறேன்.அப்போதான் இடம் கிடைக்கும்' என்பதுதான். இந்த நிலையில் ரயிலையும் அரசு பேருந்தையும் நம் மக்கள் மறந்தே  போயிருந்தனர் , ஒரு சில நாற்பது ஐம்பது வயது பயணிகளைத் தவிர .

நல்லபிள்ளைகளாக இருந்த தனியார் பேருந்துகள் தடம் மாறியது இந்த சந்தர்ப்பத்தில்தான். அடடா..இப்போது உணவு , உடை போல
பயணிகளுக்கு நம் சேவையும் தேவையான ஒன்றாகி விட்டது
என்று தெரிந்ததும் அவர்கள் பணிவும் உபசரிப்பும் கழுதை தேய்ந்து கட்டெறும்பு கூட அல்ல சிற்றெறும்பு ஆன கதை ஆனது.

கோயம்பேட்டில் இந்த தனியார் பேருந்துகளுக்காகவே தனியாக நிலையம் உருவானது.ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை
ஏறும்போது அதை காரணமாக காட்டி மிக அதிகமாக கட்டணத்தை உயர்த்தியபோதும்
மக்கள் கூட்டம் இம்மியும் குறையவில்லை. 
போதாகுறைக்கு ஆன்லைனில் புக் செய்யும் வசதியும் வந்ததால் இளவயது பயணிகளுக்கு இன்னும் வசதி.தீபாவளி , பொங்கல் போன்ற விடுமுறைகளுக்கு ஒரு மாதம் முன்பே முன்பதிவுக்கு ராத்திரி பனிரெண்டு மணி வரை விழித்து  புக் செய்யும் ஒருவித நாகரீகத்துக்கு மிக நேர்த்தியாக தள்ளப்பட்டது நம் மக்கள் நிலை. கேன்சல் செய்தால் பதினைந்து சதவீத பணம் எடுப்பார்கள் என்று தெரிந்தும் புக் செய்யும் நிலைமை.
நாம் என்ன செய்தாலும் இவர்களுக்கு நம்மை விட்டால் வேறு வழி இல்லை என்று தன்  ஆட்டத்தை தொடங்கியது இந்த சேவை.

  • விடுமுறை நேரங்களில் அநியாய விலைக்கு டிக்கெட் விற்பது 

  •  மிக நேரம் தாழ்த்தி வண்டி எடுப்பது

  •  தங்களுக்கு வருமானத்தில் பங்கு தருகிறார்கள்                 என்பதற்காக ஊருக்கு வெளியே தாண்டி மிக மட்டமான ஹோட்டலில்  இரவு  உணவுக்கு இறக்கி விடுவது

  • ஓட்டுனரும், கூட உதவிக்கு இருக்கும் நபரும் பயணத்தின் போது அநாகரீகமாக பேசுவது;எதிர்த்து கேட்டால் 'போய் புகார் பண்ணிக்கோ' என்று அலட்சியமாக பதில் சொல்வது

  • 'ரெட்பஸ்' என்னும் மூன்றாம் நிறுவனம் மூலம் புக் செய்திருந்தால் ,தங்கள் கிளை லாபம் போகிறது என்று , சம்பந்தப்பட்ட பயணியை மரியாதைக்குறைவாக நடத்துவது

  • நேரம் தாழ்த்தி வண்டி எடுத்ததை ஈடு செய்ய இரவில் மிக வேகமாக வண்டி ஓட்டுவது  

இப்படி இன்னும் நிறைய. யார் இந்த பூனைகளுக்கு மணி கட்டுவது ? அரசுதான் என்று சொன்னால் நீங்கள்  முதுகெலும்பு இல்லாதவர் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.

அரசு செய்ய வேண்டியது குறைவுதான்.
  • இருக்கும் அரசு பேருந்துகளை நல்லபடியாக செம்மைபடுத்தி வசதியான பயணத்துக்கு உத்திரவாதம் தரவேண்டும்.

  • ஒருமுறை போக்குவரத்து அமைச்சர் எந்த துரித பேருந்திலாவது போய் பூச்சிகடிகளுக்கு மத்தியில்,உடைந்த ஜன்னல்   அருகே ,சாய்வு வசதி செயலற்ற சீட்டில் அமர்ந்து அனுபவப்பட்டு பிறகு செய்வதை செய்யட்டும்.

  • எந்தெந்த ஊர்களில் , சராசரியாக எவ்வளவு பேர் பெரிய நகரங்களுக்கு  செல்கிறார்கள்  என்று கணக்கெடுப்பு நடத்தி ,அந்த ஊர்களில் இருந்து தரமான அரசு  பேருந்துகளை  (குறைந்தது வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலாவது  ) இயக்க வேண்டும்.அரசுக்கும் வருமானம் கிடைக்கும்.முக்கியமாக அப்படி இயக்கும் பேருந்துகளை , கர்நாடகாவில் இருப்பது  போல ஆன்லைனில் புக் செய்யும் வசதி செய்ய வேண்டும்.

  • தனியார் பேருந்துகளின் தரம்,ஒழுக்கம், சாலை விதிகள் பேணல் - இவற்றை கவனிக்க ஒரு குழுவோ ஆணையமோ  அமைக்க வேண்டும் . விதிகள் தவறினால் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு லைசன்ஸ் ரத்து செய்ய குழுவுக்கு  அங்கிகாரம் வழங்க வேண்டும்.அவர்களை மக்கள் நேரடியாக அணுகும்படி வசதி செய்ய வேண்டும்.



சரி.. அரசு செய்வதை செய்யட்டும். நம் வகையில் என்ன செய்யலாம்?

தனியார் பேருந்தில் செல்வதும் , அதுவும் எங்கும் போகாமல்  நம் ஊர் கிளையிலிருந்தே ஏறிக்கொள்வதும் வசதிதான். ஆனால் அதற்காக அநியாய கொள்ளைக்கு தெரிந்தே அதரவு அளிக்க கூடாது. அதே சமயம் அதிக பணத்தைப் பற்றி கவலைப்பட தேவை இல்லை. வாங்கும் வசதி உள்ளவர்கள் போகட்டும். ஆனால் அதற்கேற்ப நாகரீகமான,பாதுகாப்பான , வசதியான சேவையை தரவில்லை என்றால் கேள்வி கேட்க வேண்டும்.

  • ஒரு பயணியை தரக்குறைவாக நடத்தினால் மீதி பேர் தூங்குவது போல் நடிக்காமல் தட்டிகேட்க வேண்டும். எப்போதும் கூட பயணிப்பவர்களுடன் சேர்ந்து சென்று அணுகி கூட்டமாக கேளுங்கள்.கிடைக்கும் பதிலில் எப்படி மரியாதை உயர்ந்து வருகிறது  என்று பாருங்கள். ஒரு கை ஓசை உதவிக்கு வராது.

  • மாற்று போக்குவரத்துக்கு எப்போதும் ஆதரவளியுங்கள்.கூடியவரை ரயிலில் செல்ல பாருங்கள். மூன்று மாதம் முன்னமே பதிவு செய்யுங்கள். கான்சல் செய்ய வேண்டியிருந்தால் கவலை இல்லை. அவர்கள் எடுக்கும் பணம் மிக சொற்பமே.அது உங்களுகே தெரியும்.

  • எதாவது தவறு   செய்தாலோ அல்லது உங்களுக்கு மோசமான அனுபவம் நடந்தாலோ மேற்படி நிறுவனத்திற்கு புகார் செய்யுங்கள். பலன் இருக்காது.ஆயினும் செய்வது நம் கடமை.பின் அதையே வண்டி எண் ,பிற விபரங்களுடன்  உங்கள் நண்பர்களுடன் ஃபேஸ்புக்கிலோ ,வேறு சமுக இணையதளத்திலோ பகிருங்கள்.எது எதற்கோ ஸ்டேடஸ் மெசேஜ் போடும் நீங்கள் இதையும் போட்டால் மற்றவர்கள் அறிய வசதியாய் இருக்கும்.


  • முக்கியமாக , சரியான நேரத்தில் பேருந்து வரவில்லை என்றால் உடனடியாக என்ன காரணம் என்று கேளுங்கள். பயண நேரத்தை கணக்கு வைத்துக்கொண்டு ,வண்டி எவ்வளவு தாமதமாக எடுக்கபடுகிறது என்று  நேரத்தை பாருங்கள். காலையில் நீங்கள் எப்போதும் போல் சரியான நேரத்தில் ஊர் சேர்ந்தால் , வண்டி ஆபத்தான வேகத்தில் வந்திருக்கிறது என்று அர்த்தம். இதையும் எல்லாரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். 

  • நினைவிருக்கட்டும்-வண்டி தாமதமாகும் ஒவ்வொரு வினாடியும் , வேகத்தை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தத்தை ஓட்டுனருக்கு உருவாக்குகிறது.

  • முன் எல்லாம் இரண்டு ஓட்டுனர்கள் இருப்பார்கள்.இப்போது ஒரு பேருந்துக்கு ஒருவரே தென்படுகிறார்.விசாரியுங்கள்.முதல் நாளும் ஒய்வு எடுக்கவில்லை என்று அவர் சொன்னால் அதையும் நிறுவனத்திடம் கேளுங்கள்.

  • மிக அதிகமாக அநியாயம் நடப்பதாக தெரிந்தால் மொத்தமாக எல்லோரிடமும் நடந்தவையை எழுதி அதை உறுதிபடுத்த கையெழுத்தும் , முகவரியையும் வாங்குங்கள்.நுகர்வோர் நீதிமன்றம் செல்ல நமக்கு உரிமை உள்ளது.

இதை எல்லாம் செய்தால் இது போன்ற தவறுகள் எப்படி நடக்கும் என்று பார்ப்போம்.

மொத்தத்தில்..பகிருங்கள் சார்.. தகவல்களை பகிர்வதுதான் நம் பலமே. எல்லாருக்கும் ,  நடப்பது உடனுக்குடனே தெரிகிறது என்றால் யாரும் தவறுகளை மேற்கொண்டு செய்ய பயப்படுவார்கள் .முன் போல இந்த ஒருங்கிணைப்புக்கு சங்கமோ வேறு எதுவோ தேவை இல்லை. இணையம் என்ற மிகப் பெரிய ஆயுதம் நம்மிடம்   உள்ளது.அதை கேடயமாகவும் பயன்படுத்தலாம்.கூர்வாளாகாவும் பயன்படுத்தலாம். இனி உங்கள் முடிவு.



ஃபேஷ்புக்கோ , ட்விட்டரோ..  இந்த தகவல்களை உங்கள் நண்பர்களிடம் கொண்டு சேர்ப்பது உங்கள் முதல் பொறுப்பு. இனியாவது ஒவ்வொரு பெற்றோரும் , தங்கள் பிள்ளைகள் பயணிக்கும் இரவு பயமின்றி உறங்கட்டும்.

 விபத்தில் உயிரிழந்த மக்களுக்கு கண்ணீரை விட,அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் வார்த்தைகளை விட , இதில் நாம் கற்ற பாடமும் ,அதில் பெற்ற விழிப்புமே சிறந்த அஞ்சலியாகட்டும் .

Tuesday, April 5, 2011

ஒ தமிழ்த்தாயே - இந்திமாதாவை அறிமுகப்படுத்து ...

சில வருடங்களுக்கு முன்னால் பெங்களூரில் பேருந்தை விட்டு கீழே இறங்கியவுடன் எதிரப்பட்ட ஆட்டோகாரரிடம்   என் முதல் சம்பாஷனை:
'தமிழ் தெரியுமா'

'கொத்தில்லா சார் '

'ஹிந்தி ?'

'போலோ  சாப்'

'இதர் கே.ஆர் புரம் மே, காவேரி வாட்டர் டேன்க் பெஹ்லே ,ஸ்ட்ரைட் சலோ , லெப்ஃட் மே தோடா ஏக் கர் ...'

'உட்காருங்க சார்'

'கித்னே ரூபே ?'

'நூத்தி அம்பது ஆகும் சார்..'

'ஒ..என்னங்க நல்லா தமிழ் பேசறீங்க .. தெரியாதுன்னு சொன்னீங்க ?'

'உள்ள தள்ளி உட்காருங்க சார்.. லக்கேஜ் கீழ விழுந்துட போவுது ..'

'ஏங்க.. சொலுங்க .. ஏன் தமிழ் தெரியாதுன்னு சொன்னீங்க ?'

'வேண்டாம் சார் . விட்டுருங்க'

'எதுனாலும் சொல்லுங்க சார்.. கோவிச்சிக்க மாட்டேன் '

'ஹ்ம்ம் .. இவ்வளவு  கேவலமா ஹிந்தி தெரிஞ்சு வெச்சுகிட்டு அத நான் புரிஞ்சுக்குவேன்னு நீ நம்புறப்போ , என் தமிழ்  எப்படியும் உன்னோட ஹிந்திய விட மட்டமா இருக்க போறதில்லன்னு எனக்கு இப்போதான் நம்பிக்கை வந்துச்சு சார் ' 

'  ஒ.. சரி முன்னாடி பாத்து ஓட்டுங்க..'


இப்படி கேவலப்பட  ஆரம்பிச்சு இன்னும் அது தொடருது ..  இதற்கு ஆதி காரணம் யார் ?  ஏறக்குறைய சராசரி முப்பது வயசுல இருக்குற எந்த தமிழனுக்கும் தமிழ் தவிர வேற மொழியறிவு இல்லாம இருக்குறதுக்கு காரணம் யார்?

'நம்ம அப்பா காலத்துல 'இந்தி எதிர்ப்பு போராட்டம்'னு ஒன்னு பண்ணுனாங்க .. அதுல பத்த வெச்ச வேட்டு இதுன்னு சொல்லறாங்க .. அத சும்மா வேடிக்கை பாத்துட்டு இருந்தவன்தான் இன்னைக்கு வரைக்கும்  பசங்க மேல திணிச்சு அதை சப்போர்ட் பண்றான்.. அத பண்ணுனவங்க பேரப்பிள்ளைகள் எல்லாம் நல்லா ஹிந்தி கத்துகிட்டு   இப்போ மத்திய அமைச்சரவைல இருக்காங்க .. ' அப்படினு ஒரு கோஷ்டி சொல்லிட்டு இருக்கு.. ஆனா அது அந்த தலைமுறைக்கு மட்டும்தான் பொருந்துமே தவிர அதுக்கு அடுத்த தறுதலைமுறைகளான  நமக்கு இல்லை.

அப்போ எங்க இருக்கு இதோட ஆணிவேர்?-னு பாக்கும்போது , எப்போ ஹிந்திய ஆறாவதுல  இருந்து செகண்ட் லாங்குவேஜா தமிழுக்கு ஒரு ஆப்சனா வெச்சாங்களோ அங்கதான் இது தொடங்குது. அப்போ பள்ளிகூடத்துல தமிழும் ஹிந்தியும் நமக்கு ஒரு இம்சைதான் .. ஆனா தமிழ்ல எதோ பார்டர் பாஸ் வாங்கிடுவோம்-னு இருந்த நம்பிக்கை ஹிந்தில இல்லாம போய்டுச்சு..

தப்பு பண்ணிடாங்க தமிழக பாடப்பிரிவு  குழுவினர்.. ஆறாவதுக்கு அப்புறமும் ஹிந்தில பாஸ் ஆனாதான் முழு பாஸ்னு சொல்லியிருந்தா எப்படியோ படிச்சு கொஞ்சமாவது சமாளிக்கிற   அளவுக்கு ஹிந்தி கத்துட்டு இருந்திருப்போம்.  ஹிந்தி எனக்கு புரியலைன்னு நம்ம பசங்க யாராவது புலம்புனா அத ஏத்துக்க முடியாது .. ஏன்னா தமிழ்ல மட்டும் நீ என்ன சுலபமாவா படிச்ச ?

'உரைமுடிவு காண்பா னிளையவ னென்ற
நரைமுடி மக்க லுவப்ப 
நரைமுடித்து சொல்லால் முறைச் செய்தான்
 சோழன் குலவிச்சை கல்லாமல் பாகம் படும் 'னு பல் வலிக்கிற மாதிரி  மனப்பாடம் பண்ணி பாஸ் பண்ணுன நமக்கு ஹிந்தியும் ஒன்னும் பெரிய விசயமா இருந்திருக்க முடியாது.  இருந்திருந்தாலும் படிச்சு தொலைச்சிருந்தா பிரச்சனை இருந்திருக்காது .

ஆக அவனுகளுக்காவது ஹிந்திய அவசியப்பாடமா வைக்கனும்னு புத்தி இருந்திருக்கணும் .. இல்ல நமக்காவது அத படிக்கணும்னு சுயபுத்தி இருந்திருக்கணும்.. ரெண்டுப்பக்கமும் தப்பு பண்ணி ,இப்போ ஹிந்தி பேசறவங்கள கண்டா ஏதோ அவதார் - பேண்டோரா கிரகத்துல இருந்த வந்தமாதிரி ஒதுங்க வேண்டியிருக்கு..

சரி பட்டபடிப்புதான் தமிழர்களை கை விட்டுடுச்சு .. பிடித்தமான படபடிப்பு கை கொடுக்கும்னு பாத்தா அதுவும் கெடயாது.. சத்தியமா 'சோலே'க்கு
அப்புறமா லகான் மட்டும்தான் நம்ம ஊருல தியேட்டர்ல போட்டாங்க.. 
பெங்களூர்ல ஒரு இல்லத்தரசி அசால்ட்டா தமிழ்,தெலுகு,கன்னடம்,ஹிந்தி ,இங்கிலீஷ் பேசுறாங்க.. ஏன்னா அவங்க உபேந்திராவோட 'ஏ' , 'உப்பி தாதா' மட்டும் நோடரதில்ல .. சுப்ரமணியபுரம் , மதராசப்பட்டினமும்   பாக்கறாங்க.. பொம்மரிலுவும் சிம்மாத்ரியும்  'சூடு'றாங்க  ,சீனி கம் , லவ் ஆஜ்கல் -னு 'தேகோ'றாங்க , இன்செப்சன் , சால்ட் எல்லாம் 'See'றாங்க..

ஆனா நம்ம புண்ணியவதிகளும் சரி , ஆபீஸ் முடிஞ்சா நாமளும் சரி , நாதஸ்வரமும்  சூப்பர் சிங்கர் 344 ,ஜாக் ஜாக் ஜாக்பாட் -னு ஒரு குறுகிய வட்டத்துல சுத்த ஆரம்பிப்போம்.த்ரீ இடியட்ஸ்-ஐ கூட நண்பர்கள்னு ரீமேக் பன்னுனாதான் பாப்போம்.   இப்படி இருந்தா ஹிந்தி வந்து என்ன கத்துக்கோ கத்துக்கோனு கெஞ்சுமா..? தமிழ்நாட்ட விட்டு வெளிய வாடான்னு பொறுமையா இருந்து அப்புறம் அது வேலையை ஆரம்பிக்கும்..  

ஆந்தரா பசங்கள மட்டும் பல்ராம் நாயுடுன்னு   கிண்டல் பண்றோமே , அவங்க யாராவது ஹிந்தி தெரியாம இருக்காங்களா ? அதுக்கும் காரணம் இருக்கு ... ஆபீஸ்லயும் சரி வேற எடத்துலயும் சரி - நம்ம சரவணன் , சிவா , காயத்ரி , சுப்ரமணி,பூர்ணிமா  எல்லாம் ஒன்னா சேர்ந்து  சுத்துவோமே தவிர , அட நம்ம கூட சுனில் சிங்கும் ,ஸ்ரீராம்  பெனர்ஜீயும்,  ரேகா த்ரிவேதியும் இருக்காங்களே , அவங்களோட பேசி நாமளும் ஹிந்தி கத்துக்குவோம்னு துளி நெனப்பு கூட வராது..
உனக்கு இருக்குடா ஒரு நாளுன்னு  ஹிந்தி மொறைச்சு பாத்துட்டே இருக்கும்.

இப்போ அடுத்த மாநிலத்துக்கு வந்து அடிபட்டப்பின்னாடி ,யார் ஹிந்தில பேசுனாலும் அது நம்மள பத்தி இருக்குமோனு பயந்து பயந்து  வேற வழியில்லாம ஊருக்கு போகும்போது பழைய புத்தகக்கடைல  'முப்பது நாளில் ஹிந்தி கத்துக்கொள்வது எப்படி?'னு ஏழு கழுத வயசுல வெக்கமே இல்லாம வாங்கி படிக்க ஆரம்பிப்போம்.  அதுக்கு அப்புறம் எந்த அளவுக்கு ஹிந்தி வரும்னு தெரிஞ்சுக்க விருப்பப்பட்டா பதிவோட தொடக்கத்துல இருந்து படிங்க.

இனி புத்தகத்தை நம்புனா ஆகாதுன்னு ஒரு ஹிந்தி பையனை/பொண்ணை புடிச்சு ஹிந்தி கத்துகுடு-ன்னு கேப்போம். அதுவும் நம்ம இங்கிலிஷ்ல பீட்டர் விடுறத பாத்துட்டு ஒரு ஆர்வக்கோளாறுல சொல்லிகொடுக்க ஆரம்பிக்கும்..  அப்புறம் நம்ம வேகத்தை பாத்துட்டு சந்தேகமா ,கொஞ்சம் அட்வான்ஸ்டா போகும்போதுதான் இந்த மந்திக்கு  எதுக்கு இப்போ ஹிந்தி-னு யோசிக்கும்.  இதெல்லாம் ஒரு ஜென்மமானு ஒதுங்கி ஒதுங்கி பாத்துட்டு கடைசில எல்லார் முன்னாடியும் 'உங்களுக்கு சொல்லிகொடுத்து கொடுத்து மேரா ஹிந்தி மர்கயா'னு அவமானப்படுத்தும்.அப்புறம் நாம பாத்தா ஒ நஹி தேகோ தான்..

(பதிவுக்கு சம்பந்தமான ஒரு பிரேக்  - நானாவது தமிழ் அதிகம் தெரிஞ்ச ஒரு மாநிலத்துல இருந்து சமாளிக்கிறேன்.. என் நண்பர் ஒருத்தர்.. பேர் சொல்ல விருப்பமில்லை..'மேரா நாம் கோபிநாத் ஹேய்'னு தன்னை அறிமுக படுத்தகூட தெரியாது..அவர் ஏதோ நம்பிக்கைல புனே போய் மூணு மாசம் ஆகுது.. அவர் படுற பாட நெனைச்சா சிரிப்பும் , கூடிய சீக்கிரம் ஹிந்தி கத்து தொலைச்சுடுவானே-னு நெனச்சா பொறாமையாவும் இருக்கு ) 

இப்படி எல்லாம் கேவலப்படனுமா தமிழர்களே .. உடனே ஹிந்தி கத்துக்கோங்க ..
சமீபத்துல அக்கா பையனோட சேர்ந்து மேட்ச் பாக்கும்போது ' இருபது ரன் எடுத்தா இந்தியா ஜெயிக்கும்'னு சொன்னப்போ 'இருபதுனா  எவ்ளோ மாமா?-னு கேக்கும்போது வருத்தமாத்தான் இருக்கு .. ஆனா வருங்காலத்துல  வெளிய போய் அவமானப்படுறத காட்டிலும்   உள்ளூர்ல தமிழ் தெரியலைன்னு உள்ளுக்குள்ள வேதனைபடுறது பரவாயில்லன்னு தோணுது..

 உள்ளூர்ல தமிழ் தெரியலேன்னா நமக்குதான் அவமானம்.. வெளியூர் போய் ஹிந்தி தெரியலைன்னு முழிச்சா தமிழர்களுக்கே அவமானம்.

பதிவ  படிச்சுட்டு திட்டுற தமிழ்குடிதாங்கிகள் தயைகூர்ந்து தங்கள் கிணறு  தாண்டி வெளியே வந்து மாநில கடலில் மிதந்து ,அனுபவபட்டு பிறகு நன்றாக ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வேண்டுமானாலும் திட்ட வேண்டுகிறேன்..

'தமிழ் வாழ , தமிழர்கள் வாழ ..........ஹிந்தி கத்துகோங்க '    

Wednesday, March 16, 2011

கடவுள் கண்டிப்பானவர் அல்ல ...



அண்மையில் என் ஊர் அருகில் உள்ள கோவிலில் நடந்த ஒரு விபத்தை கேள்விப்பட்டதும் மிக வருத்தத்துடன் இந்த பதிவு . சபரிமலை ஜோதி பார்க்க செல்வோருக்கும் இந்த பதிவின் கேள்விகள் பொருந்தும். 

கடவுள் , கோவில் விஷயத்தில் எல்லாருக்கும் பொதுவாக பயபக்தியோடு கூடிய ஒரு பிடிவாதம் உண்டு. ஆனால் அது அவர்களை மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தையும் பாதிக்கும் நிலை சில சமயம் ஏற்படுகிறது. உண்மையிலேயே உடல்வலிமை இருந்து ,  கடுமையாக விரதம் இருந்து கட்டுப்பாடோடு தங்களால் தங்கள் பக்தியை வெளிப்படுத்த முடிபவர்கள் இதில் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் வயதானவர்கள் , உடல் நலிவுற்றவர்கள் இதை தாங்களும் பின்பற்றி பிறகு பாதிக்கப்பட்டு கடவுளையே திட்டுவது மன்னிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல.

முன்னோர்கள் சில அர்த்தங்களை புரிய வைப்பதற்காக ,நாம் அவற்றை மறக்க கூடாது என்பதற்காக சம்ப்ரதாயங்களாக சில தருணங்களில் சிலவற்றை சொல்லிவிட்டு சென்றனர். ஆனால் அதன் உட்கருத்தை விட்டுவிட்டு அதை வெறும் சடங்குகளாக மட்டுமே பாவித்து செய்யும் அவல நிலை இப்போது ஏற்பட்டு உள்ளது. 




சில உதாரணங்கள் :

பழனி மலை எங்கள் ஊரிலிருந்து அரை மணி நேர பயணமே. மாதாமாதம் எங்கள் பக்கத்து வீட்டு பெண்கள் பௌர்ணமி அன்றோ வேறு எதாவது விஷேச தினத்திலோ அதிகாலை கிளம்பி, பேருந்தில் சிரமப்பட்டு, நெரிக்கும் கூட்டத்தில் பயணப்பட்டு சென்று, வெயிலில் மலை ஏறி, நீண்ட வரிசையில் சிக்கி ....... அப்ப்ப்பப்ப்பா   தரிசனம் பெறும்போது நடுப்பகல்  ஆகி பாதி பேர் மயக்கம் ஆகியிருப்பார்கள். அதிலும் ஒரு தடவை ஒருவருக்கு மிகவும் முடியாமல் போக , ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி வருத்தப்பட்டு சொன்னார் - ' இனி அந்த முருகனுக்கும் எனக்கும் ஆகாது .. எத்தனை தடவை மலை ஏறி வந்துருப்பேன்.. இப்படி பண்ணிட்டானே ?' 

கேள்வி : ஏன் இப்படி ? முருகனுக்கு  எப்போதும் நமக்கு யோசனை சொல்ல நேரம் இல்லாத காரணத்தினால்தான் Common Sense எனப்படும் இயல்பறிவை கொடுத்திருக்கிறார். உங்கள் இயல்பறிவுக்கு வேலை கொடுக்காமல் இப்படி சிரமப்பட்டு வந்தால் அதற்கு அவர் என்ன செய்வார்?.அப்படியானால் எப்போது கோவிலுக்கு போவது ?  இதற்கு ஒரு வழி இருக்கிறது. என அப்பாவும் நானும் , சகோதரனும்  மாலை  ஒரு நான்கு மணிக்கு கிளம்பி நிதானமாக , எந்த ஒரு விஷேச நாளும் இல்லாத நாளில் மெதுவாக் கதை பேசி மலையேறி காத்திருக்கவே வேண்டாத ,அன்று வந்திருக்கும் மிக சிறிய கூட்டத்தில் சென்று இரண்டு மூன்று முறை தரிசித்து பின் தங்க தேரோட்டமும் பார்த்து , ஒரு மணி நேரம் கதை பேசி விட்டு பத்து மணிக்குள் வீட்டுக்கு சென்று விடுவோம்.

 கடவுளை தரிசித்த திருப்தியும் உண்மையான அமைதியை அனுபவித்த பரம சந்தோசத்தையும்  உணர்வோம். இப்போது சொல்லுங்கள் ? எது புத்திசாலித்தனம் ? அதே முருகன்தான் , அதே பழனிதான்.. கிடைத்த வரமும் ஒன்றும் குறைந்ததல்ல ..  யோசியுங்கள் .. 

அடுத்த நிகழ்வு :  'அய்யயோ .. அவ்வளவு  தூரம் போயிட்டு அர்ச்சனை பண்ண முடியாம போய்டுச்சே .. இது என்ன சோதனை ? பவுர்ணமி அன்னைக்கு அர்ச்சனை பண்ணுனா கோடி புண்ணியமே ' என்று சிலர் புலம்புவார்கள். அர்ச்சகர்களால் செய்யும் அர்ச்சனை மட்டுமே ஆண்டவனை சென்றடைகிறது என்று முழுமையாக நம்பும் பரிதாபத்திற்குரிய பக்தர்கள் அவர்கள். 

அர்ச்சகர்கள் உச்சரிப்பது சமஸ்க்ருத மந்திரம்.   சமஸ்க்ரிதம் என்பது தேவலிபி என்று கொண்டாடப்படுவது.அதாவது கடவுளின் பாஷை.நாம் நம் பெயரை எழுதி கொடுத்தால் , அவர் அந்த மொழியில் கடவுளிடம் நமக்கு வேண்டுவார்.
கேள்வி -   கடவுளுக்கு அந்த பாஷை மட்டும்தான் தெரியுமா ? அதையே நாம் நமக்கு தெரிந்த தமிழில் (அது எந்த தமிழாக இருந்தாலும் ) ' ஆண்டவா , இந்த அறிவு கெட்ட ராமசாமிய காப்பாத்துப்பா..'  , ' இன்னா கணேஷா .. நீ மட்டும் ரெம்போ சுளுவா உங்க அப்பா வெச்ச எக்ஸாம்லோ பாஸ் பண்ணி பழம் கெலிச்சுட்ட?  .. அத்தயே நான் பண்ணுனா பிட் அடிக்கரேன்னு வெளிய தொரத்துறாங்க.. இன்னா நியாயமப்பா இது'  என்று எப்படி சொனாலும் அவருக்கு புரியும். 

கோவிலுக்கு போவதே மன திருப்திக்குத்தான் . அங்கு போயும் அர்ச்சனை பண்ண முடியவில்லை , அபிஷேகம் பார்க்க முடியவில்லை என்று புலம்பினால் கடவுளையும் கோவில் கட்டிய உண்மையான காரணத்தையும்  புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம் 

அடுத்த நிகழ்வு : எனக்கு அதிக பணம் கொடுத்து சிறப்பு தரிசனம் செய்வதில் உடன்பாடு இல்லை .ஒன்று பொது தரிசனத்தில் போவேன் . கூட்டமாக இருந்தால் கோபுர தரிசனம் மட்டுமே. கோவில் என்பது சமத்துவமாக இருக்க வேண்டும். அங்கும் பணம் சார்ந்த  இத்தனை பிரிவுகள் இருந்தால் , மறைமுகமாக அங்கு ஒரு ஏற்றத்தாழ்வு வருகிறது.  முன்னூறு ருபாய் டிக்கெட்டில் போகும் பக்தர்கள் , பொது தரிசனத்தில் வருவோர் முன் அர்ச்சகர்களால் பணிவுடன் கவனிக்கபடுவது கண்டிக்க வேண்டிய மிகபெரிய தவறு. 




கோவிலில் மற்றவரை பார்த்து வணங்ககூடாது என்ற சடங்கு முட்டாள்தனம் அல்ல . கோவிலில் வணங்கத்தக்கவன் இறைவன் மட்டுமே என்பதை உணர்த்தவே அது. அங்கும் வி.ஐ.பி தரிசனம் என்று கருவறை வரை சிலரை அனுமதிப்பதும் , பலரை காக்க வைப்பதும் மக்களை அவமானப்படுத்துகிறதோ    இல்லையோ கலியுகத்தில் மௌன விரதம் கடைபிடிக்கும் கடவுளின் பொறுமையை சோதிக்கிறது.

கேள்வி: ஆணவத்தையும் , அகங்காரத்தையும் மறந்து நமக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்று நினைக்கவே கோவிலுக்கு போகிறோம். அங்கும் சிறப்பு தரிசனத்தில் போய் , பொது தரிசன பக்தர்கள் கூட்டம் தனக்கு முன்னால் செல்வதைக்கண்டு ' தேவஸ்தானத்திற்கு மானேஜ் செய்யவே தெரியல .. அவங்கள முன்னால விட்டா நமக்கு என்ன மரியாதை ?'  என்று தன் வரட்டுத்திமிரை காட்டுவோரை பக்தர் என்று கடவுள் ஏற்றுக்கொள்வாரா? 

நிகழ்வு: விரதம் என்பதை கடுமையாக இருத்தல் என்று தவறாக அர்த்தம் செய்து பட்டினி கிடந்து உருகி மயங்கி தன உடல்நிலையை கெடுத்துக்கொண்டு கடைசியில் கடவுளை திட்டும் புண்ணியவான்கள் மிக அதிகம்.

 உதாரணமாக சபரிமலை விரதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் உண்டு . காட்டில் நட , கல் மண்ணில் வெறுங்காலில் நடந்தால் 'Accupressure' முறையால் தசைகளின் நரம்புகள் அழுத்தப்பட்டு உடல் ஆரோக்கியம் அடையும் . ஒரு வேலை மட்டும் உண் - வருடம் முழுக்க உடலில் ஏற்பட்ட  சில கோளாறுகள் தானாகவே சரியாகும். குளிர்ந்த நீரில் நீராடு - உடல் சூடும் தணியும் , தியானம் செய்ய உடல் ஒத்துழைக்கும் என்பதே அவற்றின் நோக்கம்.   

கேள்வி : கால்வலி இருக்கும்போது கண்டிப்பாக வெறுங்காலில் நடக்கவும் , அல்சர் இருக்கும்போதும் ஒரு வேலை மட்டும் உண்ண வேண்டும் என்பதும் , காய்ச்சல் அடிக்கும்போதும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்றும் அந்த விரதங்கள் போதிப்பதில்லை . அதை செய்து விட்டு , கடவுள் வருவார் ,'பக்தா .. உன் பக்தியை மெச்சினேன் . வேண்டும் வரம் கேள் ' என்று கேட்பார் என்று நினைத்து ஏதும் கிடைக்காமல் கடவுளைத் திட்டினால் கடவுள் உங்களை மதிக்க கூட மாட்டார். 

எல்லாவற்றிற்கும் மேலாக வரிசையில் ஒரு ஒழுங்கு இல்லாமல் , கடவுளை இவனுக்கு முன்னால் நான் தரிசிக்கவேண்டும் என்று அடித்து பிடித்து மற்றவரைத் தள்ளிவிட்டு கடவுளை கை எடுத்து கும்பிட்டால் பாவம் தீராது. 



கடவுள் நல்லவர்தான். என்றாவது ஒரு நாள் உண்மையிலேயே பக்குவப்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று ஆசைப்பட்டு காத்துகொண்டிருகிறார். பாவம் அவருக்கு அந்த பக்தரின் தரிசனம் கிடைக்காமலேயே இருக்கிறது. 

என்னை பொறுத்தவரை , இப்படி ஒரு முரட்டுத்தனமான , சுயநலமான , சடங்குளை வெறும் சடங்குகளாக அர்த்தம் புரியாமல் கடைப்பிடிக்கும் பக்தர்களை விட , கடவுள் இல்லை என்று ஒதுங்கி இருக்கும் நாத்திகர்கள் சீக்கிரம் சொர்க்கம் அடைவார்கள். இவர்கள் ? 

அது சரி , பகலிலேயே சுட்டெரிக்கும் வெயிலில் அருந்ததி நட்சத்திரம் பார்க்கும் புத்திசாலிகளுக்கும் ,கோவிலில் குங்குமத்தையும் திருநீறையும் சுவரில் கொட்டுவோருக்கும் கடவுள் மன்னித்து சொர்க்கக் கதவை திறந்தால் அங்கும் முண்டியடித்து நெரிசலில் பலபேரை எமலோகம் அனுப்புவார்கள். 

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..  

Monday, March 14, 2011

புத்தக வாசம்


சில வருடங்களுக்கு முன்னால் மின்னூல் வசதிகள் இருந்திருந்தால் எனக்கு நிறைய பணம் மிச்சம் ஆகியிருக்கும்.வீட்டில் ஒரு அறை விசாலமாக் இருந்திருக்கும். ஒவ்வொரு முறை நான் ஊர் மாற்றும்போதும் என் அம்மாவுக்கு புத்தங்களை பத்திரமாக பேக் செய்யும் பெரிய வேலை குறைந்திருக்கும்.  அதனால் என்ன ?



இப்போதும் மின்னூல் பதிவு வந்தாலும் எனக்கு கனமான அந்த புத்தகங்களை கையில் பிடித்து படிப்பதிலேயே மன நிறைவும் ஆனந்தமும் கிடைக்கிறது.அதிலும் நான் சாண்டில்யன் காதலன். சொல்ல வேண்டுமா ? அவரின் புத்தக விலையும், சுமையும் அதே சமயம் சுவையும் மிக அதிகம். என் வீட்டில் ஒரு அலமாரி முழுக்க அவர்தான் வியாபித்திருக்கிறார். இப்போது அந்த அலமாரியை , அந்த புத்தகங்களை அப்படியே இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விட்டேன்.தெரியாத்தனமாக இந்த முறை ஊருக்கு போனபோது அப்பாவிடம் அதை சொல்லி மடிக்கணினியை திறந்து காண்பிக்க  'அடப்பாவி... என் சம்பளத்தில பாதிய  அதுக்குதானடா செலவு செஞ்ச ...' என்று ஒரு முறை அந்த அலமாரியை திறந்து மேலிருந்து கீழ் பெருமூச்சுடன் அங்கலாய்த்தார். 




ஆனால் எண்ணிப்பாருங்கள்.. அந்த கனமான புத்தகத்தை படிப்பதில் உள்ள சுகமும் , மகிழ்ச்சியும் மின்னூலில் கிடைக்கிறதா ? 

அப்போதெல்லாம் அடிக்கடி  உடுமலையிலோ பொள்ளாச்சியிலோ புத்தக கண்காட்சி வைப்பார்கள்.என் அப்பாவுடன் சென்று குறைந்தது ஆறு மணி நேரம் தேடி , எனக்கு பிடித்ததை , தேவையானதை குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் அள்ளிக்கொண்டு வருவேன். அது ஒரு கலை.

என் முதல் சரித்திர புத்தகம் 'பொன்னியின் செல்வன் ' இல்லை ; ராகிராவின் 'நான் கிருஷ்ணதேவராயன்' .முதல் தத்துவ புத்தகம் 'அர்த்தமுள்ள  இந்து மதம்' இல்லை ; 'விவேக சிந்தாமணி . என் முதல் சமுதாய ஏற்றத்தாழ்வை பற்றிய புத்தகம் ஜெயகாந்தனுடையதல்ல...'ராஜா வந்திருக்கிறார்' உட்பட இருந்த ஒரு  கதைத்தொகுப்பு.. 

என் புத்தக விஷயத்தில் நான் மிக சுயநலவாதி. புத்தகம் வாங்கிய கையோடு ,முன்பக்கத்தில் என் பெயரையும் ,வாங்கிய நாளையும் இடத்தையும் எழுதி ஒரு கையெழுத்தும் இட்டபிறகுதான் எனக்கு அது முழு சொந்தம் என்ற பரிபூரணம் வரும். அதை உடனே எடுத்து பத்திரமாக அடுக்கி வைத்த பின் ,எதோ ஒரு புது புதையலை பூதத்திடம்  பாதுகாப்பாக ஒப்படைத்தது போல ஒரு நிறைவு . யாருக்கும் அதை இரவல் தரமாட்டேன். சில புத்தகங்களை பிறர்  பார்க்க கூட விட மாட்டேன்.  'இனி அது முழுக்க முழுக்க எனக்கு சொந்தம்' என்று மனதிற்குள் ஒரு பிரதிக்ஞை எடுத்துகொள்வேன் . புத்தக விஷயத்தில் நாம் Possessive-ஆக  இருக்க வேண்டும்;அதில் தவறில்லை .  உங்களால் அப்படி இருக்க முடியவில்லை என்றால் , யாருக்காவது புத்தகத்தை கொடுக்கும்போது அது திரும்ப வராது அல்லது ஊனப்பட்டு வரும் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.அதுதான் நடக்கும்.

எந்த புத்தகம் வாங்கினாலும் அதை படிக்கும்போது அதோடு வாழ வேண்டும்; அதோடு மட்டுமே வாழ வேண்டும் . ஒரு புத்தகம் படிக்கும்போது இடைப்பட்ட நேரத்தில் வேறு ஒரு புத்தகம் படித்தால் இரண்டிலுமே நம்மால் பூரணமாக மகிழ்ச்சியை அறிய முடியாது. கல்லூரியோ அலுவகமோ முடித்து பிறகு உங்களுக்கு வசதியான இடத்தில (தனியாக அமைதியாக ) அமர்ந்துகொண்டு , அதை கையில் எடுத்து முகர்ந்துப்பார்த்து படிக்க ஆரம்பிக்கும்போது அடடா .. ஏதோ நம்  மனதிற்கினிய காதலியுடன் கண்ணியமாக உரையாடுவதுபோல் ஒரு ஆனந்தம் பிறக்கும். அது என்ன கண்ணியமாக உரையாடுவது ? அது மிக முக்கியம் .

  • சிலர் புத்தகத்தை படிக்கும்போது அதை மடக்கி படிப்பார்கள். -அயோக்கியர்கள்.
  • சிலர் எதுவரை படித்திருக்கிறோம் என்று ஞாபகப்படுத்த அந்த பக்கத்தை ஒரு முனையில் சிறிதாக மடிப்பார்கள்- ஐந்தறிவு ஜென்மங்கள். 
  • சிலர் மற்றவரிடம் கதை அளந்துகொண்டோ , டிவியோ பாடோ கேட்டுக்கொண்டோ படிப்பார்கள்.-புத்தி கெட்டவர்கள்.
  • சிலர் ஏதோ பெரிய சிறுகுறிப்புத்தொண்டர் போல் குறிப்பெடுக்க வேண்டி , வரிகளுக்கு கீழ் கோடிட்டோ , வரிகள் மேலேயே  கோடிட்டோ தாங்கள் அதை புரிந்துகொண்டதுபோல் ஆதரிப்பது போல் புத்தகத்தை அலங்கோலப்படுத்துவார்கள்  - கடைமடையர்கள்
(பாடபுத்தகங்கள் நிலைமை மிகப்பரிதாபம்.'பிட்'டுக்கு பக்கங்கள் கிழிக்கப்பட்டு, கிழிக்கப்பட்டு வருடக்கடைசியில் அட்டை மட்டுமே எஞ்சியிருக்கும்.  )


புத்தகத்தை நாம் அஃறிணையாகப் பார்க்க கூடாது . அது ஒரு இனிய நல்ல  நண்பன் , அழகிய காதலி, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு குரு (சில புத்தகங்களுக்கு இது பொருந்தாது - உறவுகளை தேர்ந்தெடுப்பதில் இருக்கும் கவனம் புத்தகங்களுக்கும் பொருந்தும் ). அதோடு வாழும்போது அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். நான் ஒரு புத்தகத்தை எவ்வளவு முறை படித்தாலும் அவ்வளவு முறையும் அது புதிதாக நிறைய கற்றுகொடுக்கிறது. 

எத்தனை பிரச்சனைகளை சந்தித்தாலும் ,இரவு படுக்கும் முன் ஒரு புத்தகத்தை எடுத்து படித்தால் மனம் இலவம்பஞ்சாக இலகுவாகி நித்தரை நிம்மதியாய் இருக்கும் . (தூக்கம் வருவதற்காகவே புத்தகம் படிக்கும் சிலர் உண்டு - அவர்கள்  புத்தகத்தை படிப்பதில்லை , கையில் பிடிக்கமட்டுமே செய்கிறார்கள்) 

என்னை பொறுத்தவரை புத்தகம் படிக்க சிறந்த நேரம் மாலைதான். வீட்டில் எல்லாரும் தொலைக்காட்சி பார்க்கும்போது தொல்லையில்லாமல் படிக்க அதுவே சிறந்த நேரம். புத்தகம் படிக்கும் பழக்கம் மட்டும் ஒருவனுக்கு இருந்தால் அவனுக்கு நண்பர்கள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை . காரணம் சில நண்பர்கள் தருவது Quantity டைம் ; புத்தகங்கள் தருவது Quality டைம்.  

இப்படி அருமையான புத்தகத்தை முழதாக அனுபவிக்க சிறந்த வழி , அதை கடையில் வாங்கி படிப்பதுதான். இதே எண்ணம் பலருக்கும் இருப்பதனால்தானோ  என்னவோ ஒவ்வொரு வருடமும் சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனை சக்கைபோடு போடுகிறது.



மின்னூலுக்கு நான் எதிரி அல்ல.அது ஒரு மிக அருமையான வரவேற்கத்தக்க முன்னேற்றம். மக்களுக்கு எளிதாக புத்தகங்களை கிடைக்க செய்து அவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திய ஒரு அற்புதம். மின்னூல்  இல்லையென்றால் ஒய்வு நேரத்தில் பேஸ்புக்கிலும் ஆர்குட்டிலும் நேரத்தை போக்கியிருப்போம்.

ஆனால் அதில் எனக்கு எழுத்துக்கள் மட்டுமே தென்படுகிறது. ஒரு சிநேகம் வருவதில்லை. புத்தகத்திற்கு என இருக்கும் ஒரு வாசம் கிடைப்பதில்லை. பக்கத்தை திருப்பும் போது இருக்கும் சுகம் Next
Page க்ளிக்-கும்போது   கிடைப்பதில்லை.இது என் புத்தகம் என்று ஒரு உரிமை வருவதில்லை;மாறாக இரவல் வாங்கி படிக்கும் குற்ற உணர்வே மேலோங்குகிறது. காலத்திற்கு ஏற்ப மாறவேண்டும் என்று தெரிந்திருந்தும் , சுஜாதா சார் 'இன்னும் சில வருடங்களில் புத்தகங்கள் அனைத்தும் கணினியில் அச்சேறும் காலம்தான் வரும் ' என்று எச்சரித்திருந்தும் , இதில் என்னால் பழமைவாதியாகவே இருக்கமுடிகிறது.

எது எப்படியோ... இனிமேலும் புத்தகங்கள் வாங்குவதை நான் நிறுத்த போவதில்லை . என் புத்தக அலமாரி எனக்கு கொடுக்கும் திருப்தி என் ஈபுக்ஸ் போஃல்டர் கொடுப்பதில்லை. 

 நீங்கள் எப்படி?