Thursday, March 15, 2012

வலியும் வலி சார்ந்த தீவும்...

உலகத்தின் எங்கோ ஒரு ஓரத்தில் எப்போதும் ஏதோ ஒரு கொடூரம் நடந்து கொண்டே இருக்கும். பரிதாபம்தான். வருத்தத்திற்குரியதுதான். ஆனால் அவை எதுவுமே நம்மால் தடுக்க முடியாத ஒன்றாக இருக்குமானால் , கடந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இலங்கை அப்படியில்லை.



கடந்த முப்பது வருடங்களாக இலங்கை விஷயத்தில் இந்தியாவின் பங்கு என்ன என்று யோசித்தால் , முதுகில் குத்தும் நிகழ்வே மாறி மாறி நடந்திருக்கிறதே தவிர
ஆறுதலுக்கு கூட நம் கரங்கள் அங்கே அண்டியதில்லை.  நம்மவர்கள் நலனை மட்டுமல்ல ,உயிரைக் கூட காப்பாற்ற இயலாத சகோதர நாடாகத்தான் இருந்திருக்கிறோம்.

ஒவ்வொரு அடிக்கும் கண்ணில் நம்பிக்கையுடன் கடல் தாண்டி பார்த்த சகோதரர்கள் ,அடி வாங்கி வாங்கி , பொறுமை மீறி , தானே எழுந்து திருப்பி அடிக்கத் தொடங்கியவுடன்  இலங்கை பின்வாங்கியது.தடுமாறியது. 

ராணுவ கட்டுக்கோப்பாய் ஒரு படை , தனக்கு சிம்மசொப்பனமாய் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்காத இலங்கை , கிறங்கி போய் பயத்தின் பிடியில் துவண்ட காலம் இருபத்தி ஐந்து  வருடங்களுக்கு மேல் .

கூப்பிடும் தூரத்தில் தமிழ் உறவு. உலகின் தலைசிறந்த படைபலம் கொண்ட நாடு. படை அனுப்பக் கூட தேவையில்லை. ஒரு உறுமல் கொண்ட அறிக்கை மட்டுமே போதும் - பின்வாங்கி பதுங்கியிருக்கும் சிங்களம். இந்த பக்கமிருந்து ஒரு சின்ன ஆறுதல் குரல் கூட அவர்களை    அணுகவில்லை.

கடைசிவரை கதறிவிட்டு ஒரு சதுர மைல் சுற்றளவில் அடங்கும் வரை போராடி, இறுதியில் மாண்டது வீரம். 2009 -இல் இலங்கையில் வென்றது அராஜகம்.  

புலிகளுக்கு எதிரான போரை காரணம் காட்டி நடந்தேறிய கொலைகளும், அட்டூழியங்களும் மூன்றாண்டுக்குப் பிறகே வெளிவந்திருக்கிறது. நமது ஊடகங்கள்  செய்ய வேண்டிய கடமையை , இங்கிலாந்தின் சேனல் 4  செய்திருக்கிறது. அவர்கள் வெளியிட்ட வீடியோவின் ஒவ்வொரு நொடியும் ரத்தத்தை உறைய வைக்கும் காட்சிகளும், 'யாருக்கு தெரியப் போகிறது?' என்று ராவண வம்சம் போட்ட ஆட்டத்தையும் காண யாருக்கும் இதயத்தில் பலம்  இருக்காது.

அதுவும் கொடுமைப்படுத்தி அழிக்கப்பட்டது நம் தமிழினம் என்றால்   இதை பார்த்த பின்பும் உயிர் மிச்சமிருப்பது விசித்திரமே.
போன உயிர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை நாற்பதாயிரம். போர் மரபை மீறிய அநாகரீகம் நடந்திருக்கிறது. போருக்கு நடுவில் சிக்கிகொண்ட அப்பாவி மக்களின்  உயிரும்  மானமும் சூறையாடப்பட்டிருக்கிறது .இதை முக்கால் மணி நேர காட்சிகளில் கூட பார்க்க தெம்பில்லாத நமக்கு  இயலாமையும்  , குற்றவுணர்வும்   மனதை அரிப்பதை தடுக்க முடியாது.

கடந்த பத்து வருடங்களாக சிங்கள ராணுவ தாக்குதலை தடுத்து நிறுத்த ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை இந்திய அரசு.
போரின் போது அப்பாவி தமிழ்மக்கள் சாரி சாரியாக கொல்லப்படும்போதும் வாய் திறந்து பேச மறுத்தது. 
அகதிகள் நிலைமையை அறியச்சென்ற எம்.பிக்கள் குழுவினாலும் எந்த பயனும் இல்லை.  

இடைப்பட்ட நேரத்தில், தமிழக மீனவர்களையும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சுட்டுத்தள்ளும் போக்கை பழக்கமாய் கொண்டது சிங்களம்.அதற்கும் எதிர்ப்புக்குரல் வெறும் சம்பரதாயமாகவே இங்கிருந்து வெளிப்பட்டது.

இங்கு நிலை இப்படி இருக்க , உலகின் போலிஸ் அமெரிக்காவிற்கு , காலம் தாண்டி மனசாட்சி உறுத்தியிருக்கிறது. விளைவு - ஐ நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம். இதை தடுக்க இலங்கை மிக தீவிர முயற்சி எடுக்கிறது.
தீர்மானத்திற்கு  ஆதரவாக 22 நாடுகள் உடன்பட்டிருக்க இன்னும் மவுனம்  சாதிக்கிறது இந்தியா. 
எந்த ஒரு உறுதிப்பாடான நிலையும் இது வரை அளிக்கப்படவில்லை.

அண்ணன் தம்பி இருவருமே போரிட்டு சாவது  தவறில்லை  - கோழைத்தனமில்லை . அண்ணன் நல்ல பலத்துடன் கம்பீரமாய் உலகில் வாழ்ந்திருக்கும்போதே , தம்பி அடிபட்டு மரணிப்பதை எந்த வகையில் சேர்ப்பது?

'இலங்கையுடனான உறவு வரலாற்றுப் பூர்வமானது ; நட்பு ரீதியானது ' என்று இன்று வரை  சொல்லி வரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவின் அறிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான்.  காஸ்மீர் விவகாரத்தில் , பாகிஸ்தான் உறவைப் பற்றியும் இதையே சொல்லுவாரா என்பதுதான் கேள்வி.

இலங்கையில் இதுவரை இருந்த இந்திய சொந்த பந்தங்களும், சகோதர உறவுகளும் மாண்டபின் , என்ன நட்பு ரீதியான உறவு இனியும் தேவைபடுகிறது என்ற கேள்விக்கு யார் விடை சொல்வது?  

அமெரிக்காவின் இந்த தீர்மானம் வெற்றிபெற்று உலக நாடுகளின் பிடியில் இலங்கை பதுங்கி அடங்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். அதைத் தவிர நம்மால் செய்ய இயல்வது இப்போதைக்கு எதுவும் இல்லை. அந்த காலம் எப்போதோ தாண்டி போய்விட்டது.
இந்திய வரைபடத்தில் இன்னும் இலங்கையை ஒட்டி வைத்திருப்பதற்கான காரணம் இனி அர்த்தமற்றது.

மொழி புரியாத, இனத்தால் ,நிறத்தால் வேறுபட்ட நாடுகளுக்கு புரிந்த வலி, கேட்ட கூக்குரல், தெரிந்த நியாயம் , வெகு அருகில் கரை தாண்டி வசிக்கும் நமக்கு இன்னும் உரைக்காததற்கு  
காரணம்  : அரசியல் பாஷையில் சொன்னால்  'அஹிம்சை'  , வேறு  எந்த பாஷையில் சொன்னாலும்  - 'சுயநலம்'

மற்றபடி, இங்கு குறை ஒருத்தரிடம் மட்டும் அல்ல.ஒரு கட்சியிடம் மட்டும் அல்ல.
இது பொது அவமானம். வரலாற்றுப் பக்கங்களில் இது எப்படி பதியுமோ , அதை தலை குனிந்து ஏற்றுகொள்ள தயாராய் இருப்போம்.

Friday, March 9, 2012

தேசிய விருதுகள்: வாகை சூடிய தமிழ்த்திரை

மெகா பட்ஜெட் ஆடம்பர செலவுகள் இல்லை. படத்தின் அரை வாசி செலவை சம்பளமாக கேட்கும் நட்சத்திர நாயகர்கள் இல்லை. பறந்து அடிக்கும் சண்டைக் காட்சிகள் இல்லை. கவர்ச்சியான கதாநாயகி இல்லை. முக்கியமாக ,சேட்டிலைட் டிவிகளில் நிமிடத்துக்கு ஒரு முறை வரும் விளம்பரம் இல்லை. 

இப்படி எதுவுமே இல்லாமல்  ஐந்து தேசிய விருதுகளை அள்ளியிருக்கிறது தமிழ் திரையுலகம்.

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் : அழகர்சாமியின் குதிரை
சிறந்த தமிழ் திரைப்படம்                         : வாகை சூட வா
சிறந்த துணை நடிகர்                                 : அப்புக்குட்டி (அழகர்சாமியின் குதிரை )
சிறந்த புதுமுக இயக்குனர்                     : தியாகராஜன் குமாரராஜா (ஆரண்ய காண்டம் )
சிறந்த படத்தொகுப்பாளர்                         : பிரவீன் கே .எல் (ஆரண்ய காண்டம் )

சாதிக்க திறமை மட்டுமே போதும் என்பது இன்னொரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது. மேற்கூறிய எல்லா படங்களுமே   வசூலில் அடி வாங்கிய படங்களே.
திரையிட சரியான அரங்குகளும் நாட்களும் கிடைக்காமல்  , கமர்சியல் படங்களின் வரவுகளுக்கு இடையே இருந்த மிக குறுகிய காலகட்டத்தில் திரையரங்குகளை சந்தித்தவை.ஆனால் அரங்குகளை நிரப்பவில்லை.  காரணம் - படிக்க பதிவின் முதல் பத்தி.

இப்போதைய காலகட்டத்தில் பலகாரம் சுவையாய் தரமாய் இருப்பதை விட அதை  பார்ப்பதற்கு அழகாக wrap செய்து  மக்களை வாங்க வைக்கும் உத்தியே வெற்றி பெறுகிறது.ஆனால் வெற்றி என்பது வேறு. அங்கிகாரம் என்பது வேறு. இரண்டாவதற்கு , கடின உழைப்பையும்,திறமையையும் தவிர எந்த மேற்பூச்சு வேலையும் தேவை இல்லை. ஆதாரம் -  இந்த ஐந்து விருதுகள்.
திரையுலகின் பல விதிகளை உடைத்திருக்கின்றன மேற்கூறிய படங்கள்.

ஆரண்ய காண்டம் :

கதையும் அதன் களமும் முடிவான உடனே , தயாரிப்பாளருக்கு புரிந்திருக்கும் - கல்லாவை நிரப்ப தேவைப்படும் தாய்க்குலங்கள் ஆதரவு இந்த படத்திற்கு சைபர் என்று. உபயம் - படத்தில் தவிர்க்க முடியாத வசனங்கள்.ஆனாலும் முட்டி மோதி படத்தை வெளியிட்ட சரணுக்கு வாழ்த்துக்கள்.

மீதி வர வேண்டிய சொற்ப  கூட்டத்தையும் சாதாரண தமிழ் ரசிகனுக்கு புரியாத தரமான போஸ்டரின் ஆங்கில தாக்கத்தால் இழந்தது இந்த படம்.


படம் வெளிவந்து ஓடி முடித்த நான்கைந்து நாட்கள் தாண்டியே இது ஒரு தமிழ் படம் என்று பெரும்பானவர்களுக்கு  புரிந்தது.
  ஆனாலும் இயக்குனரும் , தொகுப்பாளரும் படத்தின் நாயகர்களாய் மிளிர்ந்தது சத்தியம்.
படத்தின் வேகத்தில் பிரவீனின் உழைப்பு நன்றாக தெரிந்தது. 
ஆரண்ய காண்டம் , கேங்ஸ்டர் படங்களின்  புது கோணத்தை , வேறு பாணியில் சொல்லும் விதத்தை அறிமுகப்படுத்தியது.

வசனங்களின் கூர்மையையும் , திருப்பங்களையும் நம்பிய இந்த படம்  தமிழ் திரை சரித்திரத்தில் ஒரு மைல்கல்.

அழகர்சாமியின் குதிரை:

வெண்ணிலா கபடிகுழு சுசீந்திரனின் இன்னொரு காவியம். ஒரு கதையை திரைப்படம் ஆக்கும்போது அந்த மாற்றத்திற்கு தேவையான அனைத்தையும் படத்தில் உபயோகித்த விதத்திற்கு பரிசு கிடைத்திருக்கிறது.
அப்புக்குட்டி , அழகர்சாமி பாத்திரத்தின் கனகச்சிதமான நல்ல தேர்வு. இளையராஜா இசை , காட்சிகளில் தெறித்த  உணர்வுகளுக்கு  மேலும் அழுத்தம் கொடுத்திருக்கிறது.


பொழுதுபோக்குக்கு தேவையான அனைத்து நல்ல அம்சமும் படத்தில் உண்டு.ஆனால் அவை யாவும் யதார்த்த   கோட்டுக்குள் மட்டுமே நின்று சாதித்திருக்கிறதே தவிர , காதை அடைக்கும்  குத்து பாட்டும் , கண்ணை உறுத்தும் சண்டை காட்சிகளும் அல்ல. கதை ,குதிரையை சுற்றிய நூலை நழுவவிடாமல் மற்ற துணை கதைகளை இணைத்து சென்ற விதம் அருமை.


ஒரு நடிகனுக்கு , நாயகனுக்கு தேவையான எந்த அடையாளமும் அப்புகுட்டிக்கு இல்லை. அதுவே இந்த வெற்றிக்கும் காரணம். அப்புகுட்டியின் இந்த வளர்ச்சி  கண்டிப்பாக திரையுலகில் நுழைய நினைக்கும் எந்த சாமானியனுக்கும் ஒரு உத்வேகத்தை கொடுக்கும்.

சுசீந்திரன் ,தமிழுக்கு இன்னொரு பாரதிராஜாவாக வர தகுதியான இயக்குனர். அவசரப்பட்டு 'ராஜபாட்டையில்' பயணிக்காமல் நிதானமாய் சென்றால் வளர்ச்சி தொடரும்.

வாகை சூட வா:

வசூலில் கடும் இழப்பு , நாயகன் விமல்  , வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுக்க வைத்தது. நல்ல படங்களுக்கு மட்டுமே உண்டான சாப நிலை இது.

பீரியட் படங்கள் வரிசையில் நல்ல கருத்தையும் முன்வைத்து வெளியான படம். வெயில் தகிக்கும்  சூழலில் , கலகலப்பான கிராமிய பின்னணியுடன்  அழகான காதலையும் சேர்த்து கொடுத்த படம். கிப்ரானின் இசை புது மாதிரியாய் கிறங்கடிக்க வைத்தது.


விமலின் அப்பாவித்தனமான நடிப்பும் , இனியாவின்  வாயாடித்தனம் கலந்த துடிப்பும் , ஏனைய நடிகர்களின் ஆரவாரமில்லாத பங்களிப்பும் , படத்தின்  தரத்தை உயர்த்தியது.   சிறந்த படங்களில் இந்த படத்துக்கு முதலிடம் கிடைத்தது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.வெகு பொருத்தமான தேர்வு.

-------------------------------------

இந்த படங்கள்  வெளியாகி , மக்களின் மவுத்டாக் மூலம் ' நல்ல படம் , பார்க்கலாம்' என்று கூட்டம் தயாரவதற்குள், திரையரங்குகளில் இருந்து காணாமல் போக நேர்ந்தது.  இது போன்ற நல்ல முயற்சிகளை 'ஆவண படம்' அல்லது  'அவார்டுக்கு மட்டும் தகுந்த படம் ' என்று ஒதுக்குகிற  விபத்தும் எப்போதும் நேர்கிறது.

ஆனால் இந்த மூன்று படங்களும் , ஆவணப்படம் போல  வெறும் செய்தியை மட்டும் சொல்லாமல் அதை சுவாரஸ்யமாகவும் . நகைச்சுவையுடனும்  சொல்லி பார்ப்பவரை சிரிக்க வைத்திருந்தாலும் ,தயாரிப்பாளர்களை அழ வைத்தவை என்பது உண்மை.

ஒரு பெரிய நடிகனின் பட பட்ஜெட்டில் ,இது போன்ற பத்து படங்கள் செய்து விடலாம் என்பது நிதர்சனம்.

ஒரு பக்கம்  , நல்ல படங்களை  கொடுக்க தயாரிப்பாளர்கள் இருக்க வேண்டும். அப்படி மிக கடினப்பட்டு அவர்கள் கொடுக்கும் படத்தை வரவேற்று  அதை காப்பாற்றும் ரசிகர்கள் இருக்க வேண்டும்.  இரண்டும் இல்லை என்றால் நல்ல கதை சொல்லி இயக்குனர்கள் காணாமல் போய் , ஹீரோயிசத்தில் கதையை பலி கொடுக்கும் இயக்குனர்கள் மட்டுமே எஞ்சியிருப்பார்கள்.

தொடரட்டும் இந்த அங்கீகாரங்கள்.
 

Thursday, March 1, 2012

பாப்கார்ன் பாக்கெட் - 20120301

//டிஸ்கி : வேலை  மாற்றம். புது ஊர் , புது இடம் , புது மக்கள் , வந்த இடத்துல  'நான் நல்லவன்'ன்னு மறுபடியும்  எல்லாரையும் ஏமாத்த வேண்டிய கட்டாயம் - இதெல்லாம் சேர்ந்து மூணு மாசம் பதிவு பக்கம் தலைவைக்க விடாம பண்ணிடுச்சு. என் நல்ல நேரம் , உங்க கெட்ட நேரம்  - மறுபடியும் வந்துட்டேன்.  //
-------------------------------------------------------
சுஜாதா மறைந்து சரியாக நான்கு வருடங்கள் ஓடி விட்டன. இன்னும் எனக்கு அவர் இழப்பு உறைக்கவில்லை. ஒரு படைப்பாளிக்கு இதை விட பெரிய வெற்றி எதுவும் கிடையாது.  இப்போதும் சக்கைபோடு போட்டு விறபனையில் முன்னணியில் இருக்கிறது  அவர் படைப்புகள்.  ஆதாரம் - இந்த வருட புத்தக கண்காட்சி.


பொழுதுபோக்கு படைப்புகளில் மட்டும் சிக்கியிருந்த வாசக வட்டத்தை , சிந்திக்க வைக்கும் படைப்புகளின் ரசிகர்களாக மாற்றிய பெருமை சுஜாதாவுக்கு மட்டுமே உண்டு.
விஷயங்களை அறிவிக்கும் புத்தகமாக இருந்தால் , அது மொந்தை மொந்தையாக , பெரிய பெரிய பாராவாக , படிக்க ஆரம்பித்ததும் தூக்கம் வரவைக்கும் வஸ்துவாகவே இருக்கும் என்று நினைத்திருந்தவர்களுக்கு , ஒரு படம் பார்ப்பதை விட , சுவாரஸ்யமாக விஷயங்களை தர முடியும் என்று உணர்த்தியவர்.

எந்த துறையிலும் வல்லவர்கள் எவ்வளவோ பேர் வரலாம்;போகலாம். ஒரு சிலரே அந்த துறையின் வண்ணத்தையும் , வடிவத்தையும் மாற்றி செல்வார்கள். எழுத்துக்கும் ,சினிமாவுக்கும்  சுஜாதா அத்தகையவர்.

ஒரு வேளை, மறு ஜென்மம் உண்மை என்றால் , எங்கு இருக்கிறதோ  படு சூட்டிகையான , துறுதுறுப்பான ,மெல்லிய நக்கல் தெறிக்க பேசும் ,புதியவருக்கு அதிகப்ரசங்கியாய் தெரியும் எங்கள் சுஜாதா குழந்தை?
----------------------------------------------------

கேப்டன் பொங்கி எழுந்துட்டார். இனி தினம் தினம் தமிழ் மக்களுக்கு தலைவலி.திமுகவுக்கு சரவெடி.

சட்டசபை நாகரீகம்-ன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசவேண்டாம். அதெல்லாம் அப்போவே எல்லாரும் ஒழுங்கா கடைபிடிச்சிருந்தா அதிமுக  இன்னைக்கு வேற தலைமைல இருந்திருக்கும். துரைமுருகனுக்கு நன்றி.

படிச்சவங்க . கொஞ்சம் பண்பானவங்க அரசியலுக்கு சரியாய் வராதுன்னு சொல்றது சரிதான்னு தேமுதிக எம்.எல்.ஏ  அருண்பாண்டியன பாக்கும்போது நல்லா தெரியுது..

கட்சித்தலைவர் , தனக்கு முன்னாடி எதிர்க்கட்சிய  பாத்து ,  உச்ச குரல்ல பேசிட்டு இருக்கும்போது , மத்தவங்க மாதிரி கை தட்டாம ,     கூட சேர்ந்து கத்தாம ,கைய கட்டி இருந்திட்டு , அப்புறமா  வேற  வழியில்லாம ,கூட சேர்ந்து எழுந்து நின்னு , என்ன செய்றதுன்னு தெரியாம ஒரு அப்பாவி  சிரிப்போட முழிச்சிட்டு இருந்தத பார்க்கும்போது .. ஐயோ பாவம் ..உங்க ஃபீலிங் எங்களுக்கு புரியுது சார்..


இது தேமுதிகவுக்கு பொன்னான காலம்.ஒரே அணியில ரெண்டு பெரிய தலைகளும் இருந்தா ஒருத்தர் வளர முடியாது. காங்கிரஸ்ல இருந்து  பெரியாரும் , பெரியார்கிட்ட இருந்து  அண்ணாவும்  , கலைஞர்கிட்ட  இருந்து எம்ஜீஆரும்  பிரிந்த பின்னாடிதான் மக்களுக்கு அவங்க மேல கவனமும் , சிதறாத அடையாளமும் வேகமா கெடைக்க ஆரம்பிச்சுது.  எல்லாரும் எதிர்பார்த்தபடிதான் நடக்குது..அதுதான் மக்களுக்கு நல்லது..

2016 , முன்னாடி சொன்னமாதிரியே அம்மா-கேப்டன் நேருக்கு நேர்தான்.  
-------------------------------------------------

 வீரப்பன் சுடபட்டபின் வெள்ளதுரைக்கு கிடைத்த புகழுக்கு பிறகு , என்கவுண்டர் செய்வது ஒரு ஹீரோயிசமாக உருப்பெற்று வருகிறது. போன வருடம் கோவை , இந்த வருடம் சென்னையில் ஐவர் கொலை என நீண்டுகொண்டே போகிறது என்கவுண்டர் லிஸ்ட்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் அட்டகாசம் குறையும் என்பதற்காக , எல்லாரும் இந்த செயல்களை ஆதரிக்க வேண்டும் என்பது தேவை அல்ல.
வங்கிக்  கொள்ளையில் ஈடுபட்டிருந்ததாக சொல்லப்படும் ஐவரும் , எந்த வகையில் குற்றவாளிகள் என்று ஊர்ஜிதபடுத்தப்பட்டனர்  என்பது இது வரை விளங்கவில்லை.

இங்கு காவல்துறை தவறு செய்ததா இல்லையா என்பதைவிட அதிக கவனம் கொள்ள வேண்டியது , இந்த செயலுக்கு மக்களின் உணர்ச்சிப்பெருக்கான ஆதரவுதான்.   எந்த ஒரு அடிப்படை தகவல்களும் இல்லாமல் அவர்கள் குற்றவாளிகள் என்று முடிவு செய்து , கொலையை வரவேற்பது முட்டாள்தனம். 

அதே நேரத்தில் , காவல்துறை பக்கம் உயிர்சேதம் நடந்திருந்தால் என்ன சொல்வீர்கள் என்று கேட்டால் , ஏற்றுக்கொள்கிறேன் - என்னிடம் பதில் இல்லை. உண்மையை ,விசாரணையும் , மனித உரிமை அமைப்புகளும் பார்த்துக்கொள்ளட்டும்.  மக்களின் எண்ணபோக்குதான் இங்கு பிரதானமே தவிர , விவாதம் அல்ல.


இதே எண்ணம் வளர்ந்தால் , நாளை குற்றம் செய்தவனை சவுக்கடி கொடுத்து நடுத்தெருவில் சாகடிக்கும் மனிதர்களையும் வரவேற்கும் மூர்க்கத்தனம் வந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. ஈராக்கும் ,சவுதியும் இந்தியாவுக்குள் வர வேண்டாமே..
-------------------------------------------------------------

'தோனி' மேனியா மெல்ல சரிகிறது. இது எப்போதும் நடப்பதுதான். முன்பு கங்குலி. இப்போது தோனி. 'Captain of the Ship'  விமர்சனத்திற்கு எப்போதும் தயாராக இருக்க  வேண்டிய கட்டாயம் உண்டு.இவர் மேல் இன்னும் நம்பிக்கை இருக்கிறது. பார்ப்போம்.

இங்கிலாந்துக்கு பிறகு , ஆஸ்திரேலியாவிடமும் மரண அடி வாங்கிக் கொண்டிருக்கும்  இந்திய கிரிக்கெட் அணிக்கு , நின்று ஆட கூடிய ஒரு பேட்ஸ்மேன்  கண்டிப்பாக தேவை.
சேவாக் 219  எடுத்த சிறந்த ஆட்டக்காரர்தான் என்றாலும் ,  ஆட்டத்தின் நிலைமையை கவனிக்காமல், பொறுப்பிலாமல் விக்கட்டை  கொடுக்கும்  பழக்கத்தை விடும் வரை இந்திய அணியை 'Consistant Team' என்று சொல்ல முடியாது.

அவர் மட்டுமே , ஆட்டம் தொடங்கியவுடன் , பார்முக்கு வந்து அடிக்கும்  தன்மை படைத்தவர். சச்சினோ நேரம் எடுத்து பின் நின்று ஆடுவார். ஆனால் துரத்ரிஷ்டம் , சமீப காலங்களில், அவர்  ஆட்டத்தை தன் கையில் கொண்டு வரும் முன்பே வெளியேறி விடுகிறார்.  ஆக மிக முக்கிய பொறுப்பு சேவாக் கையில். உணர்ந்தால் இந்திய ஜெயிக்குமா என்னமோ , கவுரவமாக  தோற்கும். திருந்துவாரா?


தன்னை சாம்பியன் என்று நிரூபிக்க வேண்டிய நிலையில் , இந்த வருடம் இந்திய அணிக்கு ஐபிஎல் தேவையா? எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் ஒன்றும் செய்ய முடியாது ..Money Money Money..

கிரிக்கெட் நிலைமை இப்படி இருக்க , ஹாக்கியில் , இந்தியாவின் கவுரவம் காப்பாற்றப்பட்டு வருகிறது. வழக்கம் போல ,அவ்வளவாக கவனிக்கபடாமல் அலட்சியபடுத்தப்பட்டும் வருகிறது.  ஓரவஞ்சனை எப்போது ஒழியுமோ?
--------------------------------------------------------

எல்லாரும் வெள்ளித்திரையில் வெற்றிபெற , முட்டி மோதி  புதுமை செய்து கொண்டிருக்க , கால சக்கரத்தை பின்னால் ஓட்டி ஐந்து ஆஸ்கார்களை அள்ளியிருக்கிறது 'The Artist' .

பேசும் படங்கள் புதிதாய் வரத்தொடங்கிய தருணத்தில் நடக்கும் கதையாக , அதன் பின்புலத்தை உணர்ந்து தெளிவாக கையாளபட்டிருக்கிறது தி ஆர்டிஸ்ட்.ஒரு முன்னணி நடிகனுக்கும் , முன்னேறி வந்துகொண்டிருக்கும் ஒரு நடிகைக்கும் இடையே ஏற்படும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை. வசனங்கள் எங்கும் இல்லை - இறுதி காட்சியை தவிர.

முழுக்க கருப்பு வெள்ளை திரைப்படம்.சிறந்த நடிகர்,இயக்குனர்,திரைப்படம் உட்பட ஐந்து விருதுகள் இந்த படத்திற்கு மட்டுமே.


படம் முழுக்க ஓடும்  மெல்லிய நகைச்சுவையும் , வசனம் இல்லாததால் , உணர்ச்சிகளை வெளிக்காட்ட நடிகர்களின் கண்களும் ,முக பாவனைகளும் கொடுக்கும் இனிய அனுபவத்தையும் , காட்சிகளை  அதிக மடங்கு அழகாக்க , சிறந்த ஆர்ப்பாட்டம் இல்லாத இசையும் , நம்மை கட்டிபோட்டு விடுகிறது.
இந்த படம் விருதுகளை வென்றது ஆச்சர்யம் இல்லை.வாழ்த்துக்கள்.
--------------------------------------------------------

 சுசீலா கானமழை. விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை. சௌகார் ஜானகியின் நடிப்பு.  மூன்றும் சேர்த்து மயக்க வைக்கும் மந்திரம் இந்த பாட்டுக்கு  உண்டு. 
காட்சியில் எல்லாரும் புன்னகைத்துக் கொண்டே இருப்பதும் ,  ஜானகி தன் வாழ்க்கையை நினைத்து கலங்குவதும், அதை வெளிக்காட்டாது பாடுவதும் அற்புதம் என்றால் அதை விட அற்புதம் கண்ணை மூடி இந்த பாடலை கேட்டால் தானாக வரும் கண்ணீர். இசையின் வரைமுறை இல்லாத சக்திக்கு இந்த பாட்டு ஓர் உதாரணம்.
 

காலம் தாண்டி நிற்கும் இனிய படைப்பு.
---------------------------------------------