Thursday, March 1, 2012

பாப்கார்ன் பாக்கெட் - 20120301

//டிஸ்கி : வேலை  மாற்றம். புது ஊர் , புது இடம் , புது மக்கள் , வந்த இடத்துல  'நான் நல்லவன்'ன்னு மறுபடியும்  எல்லாரையும் ஏமாத்த வேண்டிய கட்டாயம் - இதெல்லாம் சேர்ந்து மூணு மாசம் பதிவு பக்கம் தலைவைக்க விடாம பண்ணிடுச்சு. என் நல்ல நேரம் , உங்க கெட்ட நேரம்  - மறுபடியும் வந்துட்டேன்.  //
-------------------------------------------------------
சுஜாதா மறைந்து சரியாக நான்கு வருடங்கள் ஓடி விட்டன. இன்னும் எனக்கு அவர் இழப்பு உறைக்கவில்லை. ஒரு படைப்பாளிக்கு இதை விட பெரிய வெற்றி எதுவும் கிடையாது.  இப்போதும் சக்கைபோடு போட்டு விறபனையில் முன்னணியில் இருக்கிறது  அவர் படைப்புகள்.  ஆதாரம் - இந்த வருட புத்தக கண்காட்சி.


பொழுதுபோக்கு படைப்புகளில் மட்டும் சிக்கியிருந்த வாசக வட்டத்தை , சிந்திக்க வைக்கும் படைப்புகளின் ரசிகர்களாக மாற்றிய பெருமை சுஜாதாவுக்கு மட்டுமே உண்டு.
விஷயங்களை அறிவிக்கும் புத்தகமாக இருந்தால் , அது மொந்தை மொந்தையாக , பெரிய பெரிய பாராவாக , படிக்க ஆரம்பித்ததும் தூக்கம் வரவைக்கும் வஸ்துவாகவே இருக்கும் என்று நினைத்திருந்தவர்களுக்கு , ஒரு படம் பார்ப்பதை விட , சுவாரஸ்யமாக விஷயங்களை தர முடியும் என்று உணர்த்தியவர்.

எந்த துறையிலும் வல்லவர்கள் எவ்வளவோ பேர் வரலாம்;போகலாம். ஒரு சிலரே அந்த துறையின் வண்ணத்தையும் , வடிவத்தையும் மாற்றி செல்வார்கள். எழுத்துக்கும் ,சினிமாவுக்கும்  சுஜாதா அத்தகையவர்.

ஒரு வேளை, மறு ஜென்மம் உண்மை என்றால் , எங்கு இருக்கிறதோ  படு சூட்டிகையான , துறுதுறுப்பான ,மெல்லிய நக்கல் தெறிக்க பேசும் ,புதியவருக்கு அதிகப்ரசங்கியாய் தெரியும் எங்கள் சுஜாதா குழந்தை?
----------------------------------------------------

கேப்டன் பொங்கி எழுந்துட்டார். இனி தினம் தினம் தமிழ் மக்களுக்கு தலைவலி.திமுகவுக்கு சரவெடி.

சட்டசபை நாகரீகம்-ன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசவேண்டாம். அதெல்லாம் அப்போவே எல்லாரும் ஒழுங்கா கடைபிடிச்சிருந்தா அதிமுக  இன்னைக்கு வேற தலைமைல இருந்திருக்கும். துரைமுருகனுக்கு நன்றி.

படிச்சவங்க . கொஞ்சம் பண்பானவங்க அரசியலுக்கு சரியாய் வராதுன்னு சொல்றது சரிதான்னு தேமுதிக எம்.எல்.ஏ  அருண்பாண்டியன பாக்கும்போது நல்லா தெரியுது..

கட்சித்தலைவர் , தனக்கு முன்னாடி எதிர்க்கட்சிய  பாத்து ,  உச்ச குரல்ல பேசிட்டு இருக்கும்போது , மத்தவங்க மாதிரி கை தட்டாம ,     கூட சேர்ந்து கத்தாம ,கைய கட்டி இருந்திட்டு , அப்புறமா  வேற  வழியில்லாம ,கூட சேர்ந்து எழுந்து நின்னு , என்ன செய்றதுன்னு தெரியாம ஒரு அப்பாவி  சிரிப்போட முழிச்சிட்டு இருந்தத பார்க்கும்போது .. ஐயோ பாவம் ..உங்க ஃபீலிங் எங்களுக்கு புரியுது சார்..


இது தேமுதிகவுக்கு பொன்னான காலம்.ஒரே அணியில ரெண்டு பெரிய தலைகளும் இருந்தா ஒருத்தர் வளர முடியாது. காங்கிரஸ்ல இருந்து  பெரியாரும் , பெரியார்கிட்ட இருந்து  அண்ணாவும்  , கலைஞர்கிட்ட  இருந்து எம்ஜீஆரும்  பிரிந்த பின்னாடிதான் மக்களுக்கு அவங்க மேல கவனமும் , சிதறாத அடையாளமும் வேகமா கெடைக்க ஆரம்பிச்சுது.  எல்லாரும் எதிர்பார்த்தபடிதான் நடக்குது..அதுதான் மக்களுக்கு நல்லது..

2016 , முன்னாடி சொன்னமாதிரியே அம்மா-கேப்டன் நேருக்கு நேர்தான்.  
-------------------------------------------------

 வீரப்பன் சுடபட்டபின் வெள்ளதுரைக்கு கிடைத்த புகழுக்கு பிறகு , என்கவுண்டர் செய்வது ஒரு ஹீரோயிசமாக உருப்பெற்று வருகிறது. போன வருடம் கோவை , இந்த வருடம் சென்னையில் ஐவர் கொலை என நீண்டுகொண்டே போகிறது என்கவுண்டர் லிஸ்ட்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் அட்டகாசம் குறையும் என்பதற்காக , எல்லாரும் இந்த செயல்களை ஆதரிக்க வேண்டும் என்பது தேவை அல்ல.
வங்கிக்  கொள்ளையில் ஈடுபட்டிருந்ததாக சொல்லப்படும் ஐவரும் , எந்த வகையில் குற்றவாளிகள் என்று ஊர்ஜிதபடுத்தப்பட்டனர்  என்பது இது வரை விளங்கவில்லை.

இங்கு காவல்துறை தவறு செய்ததா இல்லையா என்பதைவிட அதிக கவனம் கொள்ள வேண்டியது , இந்த செயலுக்கு மக்களின் உணர்ச்சிப்பெருக்கான ஆதரவுதான்.   எந்த ஒரு அடிப்படை தகவல்களும் இல்லாமல் அவர்கள் குற்றவாளிகள் என்று முடிவு செய்து , கொலையை வரவேற்பது முட்டாள்தனம். 

அதே நேரத்தில் , காவல்துறை பக்கம் உயிர்சேதம் நடந்திருந்தால் என்ன சொல்வீர்கள் என்று கேட்டால் , ஏற்றுக்கொள்கிறேன் - என்னிடம் பதில் இல்லை. உண்மையை ,விசாரணையும் , மனித உரிமை அமைப்புகளும் பார்த்துக்கொள்ளட்டும்.  மக்களின் எண்ணபோக்குதான் இங்கு பிரதானமே தவிர , விவாதம் அல்ல.


இதே எண்ணம் வளர்ந்தால் , நாளை குற்றம் செய்தவனை சவுக்கடி கொடுத்து நடுத்தெருவில் சாகடிக்கும் மனிதர்களையும் வரவேற்கும் மூர்க்கத்தனம் வந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. ஈராக்கும் ,சவுதியும் இந்தியாவுக்குள் வர வேண்டாமே..
-------------------------------------------------------------

'தோனி' மேனியா மெல்ல சரிகிறது. இது எப்போதும் நடப்பதுதான். முன்பு கங்குலி. இப்போது தோனி. 'Captain of the Ship'  விமர்சனத்திற்கு எப்போதும் தயாராக இருக்க  வேண்டிய கட்டாயம் உண்டு.இவர் மேல் இன்னும் நம்பிக்கை இருக்கிறது. பார்ப்போம்.

இங்கிலாந்துக்கு பிறகு , ஆஸ்திரேலியாவிடமும் மரண அடி வாங்கிக் கொண்டிருக்கும்  இந்திய கிரிக்கெட் அணிக்கு , நின்று ஆட கூடிய ஒரு பேட்ஸ்மேன்  கண்டிப்பாக தேவை.
சேவாக் 219  எடுத்த சிறந்த ஆட்டக்காரர்தான் என்றாலும் ,  ஆட்டத்தின் நிலைமையை கவனிக்காமல், பொறுப்பிலாமல் விக்கட்டை  கொடுக்கும்  பழக்கத்தை விடும் வரை இந்திய அணியை 'Consistant Team' என்று சொல்ல முடியாது.

அவர் மட்டுமே , ஆட்டம் தொடங்கியவுடன் , பார்முக்கு வந்து அடிக்கும்  தன்மை படைத்தவர். சச்சினோ நேரம் எடுத்து பின் நின்று ஆடுவார். ஆனால் துரத்ரிஷ்டம் , சமீப காலங்களில், அவர்  ஆட்டத்தை தன் கையில் கொண்டு வரும் முன்பே வெளியேறி விடுகிறார்.  ஆக மிக முக்கிய பொறுப்பு சேவாக் கையில். உணர்ந்தால் இந்திய ஜெயிக்குமா என்னமோ , கவுரவமாக  தோற்கும். திருந்துவாரா?


தன்னை சாம்பியன் என்று நிரூபிக்க வேண்டிய நிலையில் , இந்த வருடம் இந்திய அணிக்கு ஐபிஎல் தேவையா? எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் ஒன்றும் செய்ய முடியாது ..Money Money Money..

கிரிக்கெட் நிலைமை இப்படி இருக்க , ஹாக்கியில் , இந்தியாவின் கவுரவம் காப்பாற்றப்பட்டு வருகிறது. வழக்கம் போல ,அவ்வளவாக கவனிக்கபடாமல் அலட்சியபடுத்தப்பட்டும் வருகிறது.  ஓரவஞ்சனை எப்போது ஒழியுமோ?
--------------------------------------------------------

எல்லாரும் வெள்ளித்திரையில் வெற்றிபெற , முட்டி மோதி  புதுமை செய்து கொண்டிருக்க , கால சக்கரத்தை பின்னால் ஓட்டி ஐந்து ஆஸ்கார்களை அள்ளியிருக்கிறது 'The Artist' .

பேசும் படங்கள் புதிதாய் வரத்தொடங்கிய தருணத்தில் நடக்கும் கதையாக , அதன் பின்புலத்தை உணர்ந்து தெளிவாக கையாளபட்டிருக்கிறது தி ஆர்டிஸ்ட்.ஒரு முன்னணி நடிகனுக்கும் , முன்னேறி வந்துகொண்டிருக்கும் ஒரு நடிகைக்கும் இடையே ஏற்படும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை. வசனங்கள் எங்கும் இல்லை - இறுதி காட்சியை தவிர.

முழுக்க கருப்பு வெள்ளை திரைப்படம்.சிறந்த நடிகர்,இயக்குனர்,திரைப்படம் உட்பட ஐந்து விருதுகள் இந்த படத்திற்கு மட்டுமே.


படம் முழுக்க ஓடும்  மெல்லிய நகைச்சுவையும் , வசனம் இல்லாததால் , உணர்ச்சிகளை வெளிக்காட்ட நடிகர்களின் கண்களும் ,முக பாவனைகளும் கொடுக்கும் இனிய அனுபவத்தையும் , காட்சிகளை  அதிக மடங்கு அழகாக்க , சிறந்த ஆர்ப்பாட்டம் இல்லாத இசையும் , நம்மை கட்டிபோட்டு விடுகிறது.
இந்த படம் விருதுகளை வென்றது ஆச்சர்யம் இல்லை.வாழ்த்துக்கள்.
--------------------------------------------------------

 சுசீலா கானமழை. விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை. சௌகார் ஜானகியின் நடிப்பு.  மூன்றும் சேர்த்து மயக்க வைக்கும் மந்திரம் இந்த பாட்டுக்கு  உண்டு. 
காட்சியில் எல்லாரும் புன்னகைத்துக் கொண்டே இருப்பதும் ,  ஜானகி தன் வாழ்க்கையை நினைத்து கலங்குவதும், அதை வெளிக்காட்டாது பாடுவதும் அற்புதம் என்றால் அதை விட அற்புதம் கண்ணை மூடி இந்த பாடலை கேட்டால் தானாக வரும் கண்ணீர். இசையின் வரைமுறை இல்லாத சக்திக்கு இந்த பாட்டு ஓர் உதாரணம்.
 

காலம் தாண்டி நிற்கும் இனிய படைப்பு.
---------------------------------------------

3 comments:

தடம் மாறிய யாத்திரீகன் said...

ஆர்டிஸ்ட் படத்தை பற்றி நிறைய பேர் சொல்லி இருப்பதால் இந்த வாரத்தில் எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று இருக்கிறேன்.

மாலை பொழுதின் மயக்கத்திலே என்றும் என் விருப்பத்திற்குரிய பாடல்.
பகிர்வுக்கு நன்றி

இராஜராஜேஸ்வரி said...

காலம் தாண்டி நிற்கும் இனிய படைப்பு.

ரச்னையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

N.H. Narasimma Prasad said...

இந்த வார பாப்கார்ன் மேட்டர்கள் அருமை அசோக். நானும் ரெண்டு மாசமா பதிவு எழுத முடியவில்லை. இந்தியாவிற்கு போயிருந்தேன். பகிர்வுக்கு நன்றி.

Post a Comment