Monday, July 18, 2011

தெய்வத்திருமகள்

அழகான மாலையில் , பூங்காவில் நிழல்குடையில்   அமர்ந்து இயற்கையை ரசிக்கும் போது , மெல்லிதாக ஒரு மழை வந்தால்  எப்படியிருக்கும்? மண்வாசமும் ,  குளிர் காற்றும் , ஆர்ப்பட்டமில்லாத மழைத்துளிகள் முகத்தில் மோதினால் தோன்றும் உணர்வு எப்படியிருக்கும்?  பக்கத்தில் உங்கள் தாயோ தந்தையோ , அவர்கள் தோள் சாய்ந்து இயற்கையை அந்த நேரத்தில் ரசித்தால் மனம் எப்படி லேசாக இருக்கும் ?

தெய்வத்திருமகள் பாருங்கள்...


கிளாசிக் படங்கள் என்றால் அது கேரளாவில் இருந்து மட்டுமே என்ற இந்திய திரைப்பட நியதி தற்போது உடைபட்டு வருகிறது. மிஸ்கின்,வசந்தபாலன்,ராதா மோகன் , பாலா ,சற்குணம்,சசி குமார் ,சமுத்திரகனி   போன்றவர்கள்  பெருகிக்கொண்டு வருவது தமிழுக்கு மிகப்பெரிய பலம்.
 
அந்த வரிசையில் கவனிக்கத்தக்கவராக மிளிர்கிறார் விஜய். மதராசப்பட்டிணம் என்ற அருமையான , மெல்லிய காதலும் ,நிதானமான கதையும் கொடுத்து வியக்க வைத்தவரின் அடுத்த படைப்பு தெய்வத்திருமகள்.
 
முதலில் , ஒரு  ஆறு வயது அழகிய ,நடிக்கத்தெரிந்த கதாநாயகியை அறிமுகப்படுத்தியதற்கு  ஒரு பெரிய சல்யுட். 
 
 
 
குழந்தை சாரா சிரிக்கிறாள் - சிலிர்க்கிறோம்; பேசுகிறாள் - கிறங்குகிறோம் ;கவலைப்படுகிறாள் - பதறுகிறோம்; தந்தையுடன் மௌன பாஷை பேசுகிறாள் - உருகுகிறோம்.இதை சாத்தியப்படுத்துவதன் மூலமே அறுபது சதவீத வெற்றி பெற்று விட்டார் இயக்குனர். படத்தில் ஜி.வி.பிரகாஷின் இசைக்கு போட்டி இவள் குரல்தான் .
 
எமி ஜாக்சன்,சாரா என்று நல்ல நடிகைகள் கண்டுபிடிப்பில் பேர் வாங்கும் அடுத்த பாரதிராஜா இதோ இங்கே.



கண்ணை உறுத்தாத நடிப்பு. பாத்திரத்துக்கு தேவையான  பாவனைகள்.  சந்தோசம். அனுஷ்கா இனி இந்த படத்தை தன் அடையாள அட்டையாக தாராளமாக பயன்படுத்தலாம்.

மைனா போன்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் அறிமுகம் ஆகி இதில் குறைந்த  காட்சிகளில் தோன்றுவதை பொருட்படுத்தாமல் நடித்த 
அமலாவுக்கு விஜய் நன்றி சொல்லியிருப்பார். இப்போது விஜய்க்கு அமலா நன்றி சொல்ல வேண்டும். இரு நடிகைகளும் சாராவுக்காக முதலிடத்தை படத்தில் விட்டு கொடுத்தது பாராட்டப்பட வேண்டியது.

நாசரை தவிர வக்கீல் பாஷ்யம் கேரக்டருக்கு யாரை தேடுவது?  எத்தனை படங்களில் வக்கீலாக நடித்திருந்தாலும் ஒவ்வொன்றிலும் மாறுதல் கடைபிடிக்கும் சிறந்த நடிகரை கையில் வைத்துக் கொண்டு விஜய் யாரை தேடுவார்?  கனப்பொருத்தம்.

இன்னும் ஒரு இரண்டு வருடம் இதை தொடர்ந்தாலே போதும்.. சந்தானம் முதலிடத்தில் இருப்பார். விவேக் வைத்திருப்பது போல எந்த டெம்ப்ளேட்டும் இல்லாதிருப்பதே இவரின் பலம்.  யதார்த்த நகைச்சுவைக்கு தற்போதைய நாயகன் சந்தானம்தான். தனி ட்ராக் எதுவும் இவருக்கு தேவை இல்லை. வாழ்த்துக்கள்.
 
ஏற்கனவே பலமுறை சொன்னதுதான். கமலுக்கு அடுத்து கதைக்குள் தன்னை ஒளித்துவைத்து பாத்திரமாக மட்டுமே தெரிவது விக்ரம் மட்டுமே.
ஆறு வருட அலைகழிப்புக்கு பிறகு விக்ரம், ரசிகர்களுக்கு  மீண்டும் தன்னை திருப்பிக் கொடுத்து விட்டார்.  

வசனங்கள் குறைவு..இருக்கும் வசனமும் எந்த தெளிவையும் சொல்லாது.. மனதில் இருக்கும் பதிலை ,வெறும் திணறலில் மட்டுமே ரசிகர்களுக்கு புரிய வைக்க வேண்டிய கட்டாயம்  விக்ரமுக்கு. அதை செய்ய கொஞ்சம் நாடகத்தனம் கொடுத்திருந்தாலும் , பாத்திரம் வலுவிழந்திருக்கும்.
அந்த கவலை இயக்குனருக்கு நேராமல் இருக்கும் நம்பிக்கையை விக்ரம்  முன்னமே கொடுத்திருப்பார். அதை காப்பாற்றியிருக்கிறார்.  



சொல்ல வந்ததை சொல்லாமலேயே புரிய வைக்கும் இவருக்கு ,சாதனை செய்ய இறைவன் நல்ல இயக்குனர்களை கொடுக்கட்டும்.
சரி.. மீன்குட்டியின் நீச்சலை பாராட்ட தேவையே இல்லை.
இயக்குனரை மட்டுமே பார்ப்போம்.
 
'குழந்தைக்கு பேரு வெக்காத..பெரிய பிரச்சனை ஆகிடும்..அப்புறம் எல்லாரும் பேர சொல்லியே கூப்பிடுவாங்க..' -
 
மனநிலை பாதிக்கப்பட்டவரின் ஆலோசனையாக இந்த டயலாக் வரும்போது மெல்லிய நகைச்சுவையினூடே அவர்களின் அப்பாவித்தனத்தை இதை விட  அழகாக இது வரை எவரும் சொன்னதில்லை..
-------------------------------

'நீ மட்டும் அப்பாகிட்ட இருக்கலாம்.நான் இருக்க கூடாதா? ' -
சாராவின் கேள்விக்கு அமலா மட்டும் அல்ல யாருமே பதில் சொல்ல முடியாது..

------------------------------

கோர்ட் காட்சியில் கொஞ்சம் தவறினாலும் , நாடகம் பார்க்கும் எண்ணம் ரசிகர்களுக்கு வந்து விடும். அல்லது எப்போதோ வந்த விதி படமும் , அவ்வப்போது வரும் சீரியல் கோர்ட் காட்சிகளும் மனதில் வந்து தொலைக்கும். அதை வரவிட அனுமதிக்காத திறமை  விஜய்க்கு இருக்கிறது.

அனுஷ்கா - ஒய்.ஜி இணக்கத்தை காட்டும் கவிதை காட்சிகள் , பல தந்தை-பெண் உறவில்  நடக்கும் ஈகோ நிகழ்வு.   

எல்லாவற்றிற்கும் மேலாக இறுதி காட்சியில் வரும் அந்த அப்பா மகள் மௌன உரையாடல்... ஹ்ம்ம்.. மெலோ ட்ராமா இல்லாமல் அழவைக்கும் மென்மையின் சக்திக்கு உதாரணம்.

எத்தனை காலம்தான் திரிசூலம் டெலிபோன் காட்சியை பார்த்து 'இதோ ..உணர்ச்சி குவியலின் சிகரம்'  என்று வேறு வழியில்லாமல் பாராட்டிக்கொண்டிருப்பது?
இங்கே அமைதியாக ,வசனம் எதுவும் இல்லாமல் ஸ்பரிசங்களின் ஸ்வரங்களாக பார்ப்பவரை 
ஆட்கொள்கிறது காட்சி..

இங்கேயே தமிழ் படங்களின் தரம் உயர்ந்திருப்பதை உணர முடிகிறது..

உங்களுக்கு விலாசம் தமிழ் திரையுலகில் தங்கத்தால் எழுதப்பட்டுவிட்டது விஜய். அதை எந்த நடிகரின் இமேஜுக்காகவும் தூசுப்பட வைக்காமல் உங்கள் வழியில் செல்லுங்கள்.



யாராவது இனி தமிழ் படத்தின் தரம் என்ன என்று நிர்ணயிக்க தொடங்கினால் , இந்த படத்தை பார்க்கட்டும். நாங்கள் பிளாஸ்டிக் புன்னகையும் , கிளிசரின் கண்ணீரையும் , தாலி செண்டிமென்ட்டையும்  தாண்டி பல காலம் ஆகி விட்டது  என புரிந்து கொள்ளட்டும். 

தெய்வத்திருமகள் - லக்ஷ்மி விக்ரகம்.

3 comments:

Anonymous said...

I Am Sam Super...

ravi said...

தென்றலாய் வருடி, கண்களில் சில கண்ணீர் துளிகள்.............. சில நேரம் மெய்மறந்த தருணம்.....

rajamelaiyur said...

படம் மிகவும் அருமை .. எனக்கு பிடித்துள்ளது

Post a Comment