Thursday, March 31, 2011

கேப்'டான்' விஜயகாந்த் : தேர்தல் டிட்-பிட்ஸ்


கட்சியை வழிநடத்தும் தலைவர்களைப்பற்றிய அலசல் வரிசையில் இப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த்.



பெயர் : விஜயராஜ்

பிறப்பிடம் : மதுரை , தமிழ் நாடு

படிப்பு : பத்தாம் வகுப்பு , சென் மேரிஸ் , மதுரை

சொந்த அரிசிக்கடை . பின் நடிப்பு ஆசை . சென்னை விஜயம். இப்ராஹீம் ராவுத்தர் துணை. எல்லாரும் எப்படி நடிகர் ஆனார்களோ அப்படியே கஷ்டப்பட்டு நடிப்புலக பிரவேசம். 


நடிப்பு முகவரி கொடுக்க ,சண்டைக்காட்சிகள் கை கொடுக்க , அனல்பறக்கும் வசனங்கள் தாய்குலங்களையும்  இளைஞர்களையும் பின்னால் பக்கபலமாக சேர்க்க... ஓஹோவென உயர்ந்து வளர்ந்தது விஜயகாந்த் இமேஜ்.

ஆனால் ரமணா தவிர  கடந்த பத்து வருடங்களாக காமெடி கைவிட , செண்டிமெண்ட் காலைவார ,வெறும் சண்டையும் சூப்பர் ஹீரோ இமேஜும் ஓவர்டோஸ் ஆகி இவர் படங்களை பெட்டிக்கு திருப்பி அனுப்ப சரியான நேரத்தில் நடிப்பை தூக்கி எறிந்து அரசியலுக்கு குதித்த புத்திசாலி இவர்.  

தெரிந்த மொழி : தமிழ் .. கண் சிவக்க பேசும் தமிழ்..செந்தமிழ் அல்லாமல் பாமரனையும் நரம்பு முறுக்க நாடி துடிக்க வைக்கும் தமிழ் .. உணர்ச்சி ததும்பும் தமிழ் ..

பேச்சு திறன் :கடந்த ஐந்து வருடங்களாக படபடவென கேள்விகளையும் சூடு பறக்கும் அறிக்கைகளையும் வெளிவிட்டு தனக்கும் பேச்சுத்திறன் இருக்கிறது என்று ஓரளவுக்கு நம்ப வைத்திருக்கிறார்.இந்த தேர்தல் பிரசாரத்திலும் , இனி வரும் காலத்திலும்தான் இவரின் இந்த திறன் பற்றி எடைபோட முடியும். பார்ப்போம். 

அரசியல் பிரவேசம் :
 எம்.ஜி.ஆரின் , என்.டி.ஆரின் வாழ்க்கை கிராஃப்பை நன்றாக ஊன்றி கவனித்து , சினிமா டூ அரசியல் ஸ்டார்டிங் ட்ரபுள் ஏதுமின்றி தேமுதிகவை கம்பீரமாக ஆரம்பித்தார் .
2005யில் இவர் கட்சி ஆரம்பித்தபோது மற்றவர் விமர்சித்தது போல் வெறும் கைதட்டலையும் எம்.ஜி.ஆரின் காரையும் மட்டுமே நம்பாமல் தன பின்னணி பலத்தை தெரிந்து வந்தார் என்பதுதான் உண்மை. 

நம்புங்கள் ...போன தடவை கலைஞரை முதல்வர் ஆக்கியது ஒரு ரூபாய் அரிசியும் கலர் டிவியும் அல்ல ... கேப்டனின் பிரவேசம்தான்.  அதிமுக வாக்குவங்கியை பல இடத்திலும் , திமுக வாக்குவங்கியை சில இடத்திலும் பிரித்து கணிசமாக இவர் கட்சி வாங்கி தன் கன்னி தேர்தலில் தனக்கான மரியாதையை தக்க வைத்தது.

விருத்தாசலம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரே ஆளாக தமிழக சட்டபேரவையில் கம்பீரமாக நுழைந்தார் புரட்சிகலைஞர். ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக விருத்தாச்சலத்துக்கு என்ன செய்தார் என்பது கேள்விக்குறியே ? கேட்டால் ஆயிரம் காரணம் - ஆளும் கட்சி மீது குறை என்று இருக்கும். போன முறை போல் இல்லாமல், இந்த முறை இந்த கட்சியின் பிரமுகர்கள் அந்தந்த பகுதி மக்களுக்கு நன்றாக பரிச்சயம் ஆகும்படி இவர் எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. 

இனிமேல்தான் அரசியலில் இவர் ஜெயித்தால் ஆளுமை பொறுப்பை ஏற்றால் என்ன சாதனை செய்வார் என்பதை கணிக்க முடியும். ஆக இப்போது அந்த பட்டியல் காலியாகவே இருக்கிறது. இவரின் சில நல்ல விஷயங்கள் கீழே :

  • 2006ல் இந்திய அரசின் சிறந்த குடிமகன் விருதை பெற்றவர்.   

  • மற்றவரைப்போல் போக்கு காட்டாமல் 'வருவேன் என்று சொன்னால் வருவேன் '   என்று உத்திரவாதம் கொடுத்தபடி உடனே வந்து அரசியலுக்கு தேவையான தைரியம் தனக்கு உண்டு என்று நிரூபித்தவர் இவர். 

  • 'கட்சி ஆரம்பிக்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது ?' என்று இவரைப் பார்த்து கேள்வி கேட்போர் இவர் கடந்த இருபது வருடங்களாக உதவிய மக்களின் நன்றிபெருக்கை காண தவறியவர்கள். 

  • சரத்குமாரை போல் தன்னை சார்ந்த மக்களுக்கு எதுவுமே செய்யாமல் எந்த குரலும் எழுப்பாமல் , பின்னால் அவர்களை உபயோகப்படுத்தி கொண்டவர் அல்ல இவர். எத்தனையோ மாணவர்களின் படிப்புக்கும் , எத்தனையோ இளைஞர்களுக்கு வாழ்க்கையையும் இவர் அமைத்து கொடுத்ததை ஊர் அறியும்.  

  • தன் பலமும் தன் கட்சி பலமும் எப்படி என்று தெரிந்து கொள்ள தனித்து போட்டி போட்டு தனக்குரிய அரசியல் சாதுர்யத்தை வெளிபடுத்தினார்.

  • 'ஊழல் மலிந்த இரு கட்சிகளின் ஆட்சியை ஒழிக்க எனக்கு வாக்களியுங்கள்'  என்ற இவரின் வேண்டுகோள் சென்ற முறை நல்ல பயனை தந்தது. 

  • பண்ருட்டி ராமச்சந்திரனின் ஆலோசனை இவரின் பெரிய பக்கபலம். 

  • ஈழத்தில் பிரபாகரன் ஜெயிக்கும் வரை பிறந்த நாள் கொண்டாட போவதில்லை என்று அறிவித்தவர். 


உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியை விட, பாமகவை விட இப்போது  இவருக்குதான் சப்போர்ட் இருக்கிறது.ஆனால் ஐந்து வருடம் கட்டி காப்பாற்றிய தன் பல பலங்களை இந்த இரண்டு மாதத்தில் இழந்து விட்டார்.

தன் கட்சிக்கு என்று எந்த ஒரு கொள்கையும் தேமுதிகவுக்கு இல்லை . (விட்டுத்தொலைக்கலாம்.. எந்த கட்சிக்குதான் இருக்கிறது?) 

இவ்வளவு நாளாக கூட்டணி இல்லாமல் தனி ஆட்சி உறுதிமொழி கொடுத்தவர் ஒன்று அவ்வாறே இருந்திருக்க வேண்டும். அல்லது இந்த முறை வெகு நாட்கள் முன்னாலேயே காங்கிரஸ் , இன்ன பிற கட்சியை அழைத்து மூன்றாம் அணியை ஆரம்பித்திருந்தால் அமோகமான வரவேற்பு இருந்திருக்கும். அதை விடுத்து அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகி சறுக்கி விட்டார். காலம் போன கடைசியிலும் போன வாரம் அதற்கு ஒரு வாய்ப்பு வந்தது. அதையும் பயன்படுத்தவில்லை.



'மாற்று ஆட்சிக்கு வழிவகுங்கள் ' என்று சொல்லித்தான் அரசியலுக்கு வந்தார்.இதற்குதான் பல ஓட்டுக்கள்  சென்ற முறை விழுந்தன. இப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தது இந்த ஓட்டுகளுக்கு வேட்டு.

ஒரு கேள்வி : இரு கட்சிகளின்  ஊழல் ஆட்சியை ஒழிக்க எனக்கு வாக்களியுங்கள் என்று சொல்லி வந்தவர் இப்போது அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் ஊழலுக்கு துணை போனது போலத்தானே? 


ஆனால் ஒரு வேலை இப்படியும் இருக்கலாம். கீழ்வருமாறு இவர் யோசித்திருந்தால் இவர் முடிவு சரிதான். 

தனியாக நின்று மொத்தமாக தோல்வியுறுவதை விட இப்படி நாற்பது தொகுதிகளில் நின்றால் எப்படியும் ஆளும்கட்சி எதிர்ப்பலைகளினால் குறைந்தது முப்பதாவது கிடைக்கும்.திமுக படுதோல்வி அடைந்தால் அந்த கட்சி உடைந்து விடும் கூறு அழகாக கண் முன் தெரிகிறது. 

பின் இந்த அம்மையார் எப்போதும் போல (தனி பெரும்பான்மையில் வந்தால் ) உடனே கூட்டணியில் இருந்து விலக்கி விடுவார். அதுதான் நமக்கும் வேண்டும்.

திமுக :குடும்ப சண்டையில் அழகிரி - ஸ்டாலின் - மாறன் என்று அடித்துக் கொண்டிருப்பார்கள். காங்கிரஸ் உட்கட்சி பூசல் - எந்த தலைவரும் இல்லை. .வைகோவின் மதிமுக மரணத்தருவாயில். பாமக எல்லாம் அம்மையாருக்கு ஒரு பொருட்டே அல்ல. 

பிறகென்ன ?  நாம்தான் பிரதான எதிர்க்கட்சி. ஐந்து வருடம் பொறுத்திருந்தால் அடுத்த முறை தேமுதிக - அதிமுக தான். வேறு யாரும் இல்லை. 

2016  சரியான நீயா ? நானா ? போட்டியாக இருக்கும். இப்போது இருப்பது போல் நீயா ? நானா ? அவனா ? இவனா? என்பதெல்லாம் இருக்காது. தமிழ் மக்களுக்கே உரிய குணமான ஆட்சி மாற்ற எண்ணம் நம்மை முதல்வர் ஆக்கி விடும்.

ஆக , இப்படி இவர் காய் நகர்த்துவது இந்த முறை பலனை எதிர்பார்த்து அல்ல .இப்போது கிடைக்க போகும் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் , திமுகவை பின் தள்ளி இரண்டாம் இடத்தை தக்க வைத்துக்கொள்வதிலும் , பின் வரும் பெரிய பலனையும் எதிர்பார்த்துதான். 

வெளிப்படையாக சொன்னால் , ரஜினிகாந்த் செய்திருக்க வேண்டிய விஷயத்தை விஜயகாந்த் துணிந்து செய்து இன்று வரை அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.



குடித்து விட்டு பிரச்சாரத்தில் பேசுவதும் , தன வேட்பாளரையே மக்கள் முன் அடிப்பதும் என இவர் செய்யும் அட்டுழியங்கள் இவரின் புகழ் ஏணியின் உயரத்தை உடைகின்றன. வடிவேலுவின் பேச்சுகளுக்கு எதிர் பேச்சு பேசாத சாமர்த்தியத்தை , இந்த விசயத்தில் ஏன் கடைபிடிக்கவில்லை என்று அவர் கட்சி தொண்டர்களே புலம்புவது வெளிப்படை. 
 ஜெயலலிதாவின் சில அகங்கார குணம் இவருக்கும் உண்டு என்பது தொண்டர்களின் எண்ணம். அதை விடுத்து , இவர் எதற்காக அரசியலுக்கு வருவதாக சொன்னாரோ , அதை செய்வார் என்ற நம்பிக்கையை வரும் ஐந்து வருடங்களில் ஏற்படுத்தினால் அடுத்த முறை இவருக்கு தாராளமாக வாய்ப்பளிக்கலாம். 

இந்த முறை ? முடிவு உங்கள் கையில்.  

9 comments:

Unknown said...

:-)).....

Anonymous said...

sariya sonninga thalaiva
Nan nenaithukondirunthen neenga sollitinga

Anonymous said...

enda unaku ootu podavum sila loosunga irukaanuga pola irukku...

vijayakanth kudichuttu pesunaanu nee nerula poyi paathiyaaa...

அன்பரசு said...

Stalin will not allow DMK to split. He has good governing capability, than Vijayakant. Karuna should leave the responsibility to Stalin and leave away. I do not support any film actor joining politics, they all spoilt us.

Anonymous said...

ரஜினி மாதிரி இல்லாமல் சொன்னது போல அரசியலுக்கு
வந்து விட்டார் என்று சொல்லி இருக்கிறீர்கள். ரஜினியை போல
அபரிதமான செல்வாக்கு அவருக்குமில்லை,எவருக்குமில்லை,எனவே
பயப்பட தேவையில்லை. அவர் வெற்றிகரமான நடிகரில்லை. அவர்
படங்களில் ஒரு இருபத்தைந்து படங்கள் கூட ஹிட்டில்லை. வந்தா
மலை, போனா மயிறு என்று தான் அரசியலுக்கு வந்திருக்கிர்றார்.சர்க்கரை
இல்லாத காட்டில் இலுப்பை பூ போல பத்திரிகையாளர்களும் அவல்
கிடைத்தது என்று கொம்பு சீவ பார்க்கிறார்கள். அவ்வளவு தான். ஜெயலலிதாவிற்கும்
வேறு வழி இல்லை, விஜயகாந்துக்கும் வேறு வழி இல்லை. raam

Raju said...

good, neutral comment.

ஸனு செல்லம் said...

சரியாக சொன்னீர்கள்... நல்ல பதிவு!!!

ராஜ் said...

பாஸ்,
நீங்க தீர்க்க தரசி.....

//தனியாக நின்று மொத்தமாக தோல்வியுறுவதை விட இப்படி நாற்பது தொகுதிகளில் நின்றால் எப்படியும் ஆளும்கட்சி எதிர்ப்பலைகளினால் குறைந்தது முப்பதாவது கிடைக்கும்.திமுக படுதோல்வி அடைந்தால் அந்த கட்சி உடைந்து விடும் கூறு அழகாக கண் முன் தெரிகிறது.

பின் இந்த அம்மையார் எப்போதும் போல (தனி பெரும்பான்மையில் வந்தால் ) உடனே கூட்டணியில் இருந்து விலக்கி விடுவார். அதுதான் நமக்கும் வேண்டும்.

திமுக :குடும்ப சண்டையில் அழகிரி - ஸ்டாலின் - மாறன் என்று அடித்துக் கொண்டிருப்பார்கள். காங்கிரஸ் உட்கட்சி பூசல் - எந்த தலைவரும் இல்லை. .வைகோவின் மதிமுக மரணத்தருவாயில். பாமக எல்லாம் அம்மையாருக்கு ஒரு பொருட்டே அல்ல. ////

Abimanyu said...

// Raj said...

பாஸ்,
நீங்க தீர்க்க தரசி.....//


தீர்க்கம் எல்லாம் இல்லை நண்பா.. இதெல்லாம் ஊரறிந்த விஷயம். இருப்பினும் நன்றி..

Post a Comment