Thursday, March 17, 2016

உடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்


எல்லா ஊரிலும் நல்லதும் கெட்டதும் எல்லா காலங்களிலும்  உண்டு.

சாதியைக் காரணமாக்கி நடக்கும் அக்கிரமங்கள் புதிதல்ல..
காதலை எதிர்த்து , காதலரை அழிக்கும் கோபத்தின் கொடூரமும் புதிதல்ல..
பகை முற்றி பழி  தீர்ப்பதும் புத்தம் புதியதல்ல ..
நடுத்தெருக்களில் , சுற்றியிருக்கும் மக்கள் நடுங்க , கொலைகள் நடப்பதும் கண்டிப்பாக புதியதல்ல..

ஆனால் இந்த கொடுமைகளின்  நிழல் கூட உடுமலை ஊர் எல்லையை நெருங்கியதில்லை.
இன்றோ எங்கள் இதயத்தின் மையப்புள்ளியில் , கோரத்தின் நிஜம் , அதன் கூரிய நகத்தினால் கொத்திக் கிழித்திருக்கிறது .

அமைதியான ஊர்; மக்களும் சரி ,  ஊரில் அடிக்கும் வெயிலுக்கும் மழைக்கும் சரி : ஒரே குணம் - நிதானம்.

சேர நாட்டு வாசல் அருகில் என்பதால் , தெருவுக்கு ஒருவராவது கேரளத்து  பூர்விகம் ; கடவுளின் சொந்த நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு , உடுமலையில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.  சொந்தத்தில் கல்யாணம் செய்த பெண்ணுக்கு புகுந்த வீடு முன்னமே  பழக்கப்பட்டது போல  , சேட்டன்களுக்கும் சேச்சிகளுக்கும் எங்கள் ஊர் சொந்த ஊரானது.



சுந்தரத் தெலுங்கும்  , கொங்குத்தமிழும் சரிசமமாய் புரளும். மனதில் எந்த பாரம் இருந்தாலும் , பக்கத்துக்கு வீட்டு குடும்பத்தோடு பேசும் பேச்சு மயிலறகு.

அடுத்த வீட்டில் என்றைக்கும் சாரோ மேடமோ எங்களுக்கு இருந்ததில்லை. நடுத்தர வயதிருந்தால் அக்கா மாமா ; அதற்கும் மேலிருந்தால் அப்பா அம்மா.

எல்லாருடைய நிலங்களையும் மனங்களையும் குளிர வைத்து ஊர் சுற்றி ஓடும் வாய்க்கால்  நீருக்கும்  , எங்கள் ஊருக்கும்  - சாதி மதம்  என்பது சத்தியமாய்,  ஒதுக்கி ஓரமாய் புறந்தள்ளும் குப்பைதான்.

கடந்த நூறு வருடங்களை சற்று புரட்டி பார்த்தால் , உடுமலை  அமைதியின் அரவணைப்பில் திளைத்து வளர்ந்த குழந்தை என்பது தெரியும். அதனால்தான் அறிவுதிருக்கோவிலும் , அதன் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது.

வருடந்தோறும் ஊர் குட்டையில் நடக்கும் மாரியம்மன் திருவிழாவில் , மதமோ சாதியோ நிறமோ , இப்படி எந்த ரேகையும் தென்படாமல் , பாசமான உள்ளூர்வாசிகளின் உற்சாகத்தை பார்க்கலாம்.



தலைசிறந்த பள்ளிகளை கொண்ட ஊரில் , எங்கள் உச்சகட்ட பிரிவினையே - 'நல்லா படிக்கிற பிள்ளை  ; சுமாரா படிக்கிற பிள்ளை ' ; இந்த இரண்டே ரகம்தான். பக்கத்துக்கு கிராமத்து குழந்தைகள் , ஊருக்குள் பள்ளித்தோழனின்  வீட்டில் தங்கியிருந்து படிப்பதும் , குடும்பத்தில் இன்னொரு பிள்ளையாய் இருப்பதும் வெகு சாதாரண நிகழ்வு.

அருகிலிருக்கும் திருப்பூருக்கும் , கோவைக்கும் , பொள்ளாச்சிக்கும் பீடித்து வரும் சுற்றுசூழல் மாசுக்கு இன்னும் பலியாகாமல் பசுமையின் ஆரோக்கியத்தை காத்து கம்பீரமாய் நிற்கிறது , ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் உடுமலைப்பேட்டை.

இப்படி எல்லா புகழும் இருக்கும் ஊர் பெயர்தான் இப்போது முகநூலிலும் , வாட்ஸப்பிலும் , எல்லார் வாய்க்கும் கிடைத்த அவலாக பரிதாபப்பட்டு மாட்டியிருக்கிறது.

ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் பகைக்கு , ஒரு உயிர் மட்டும் அல்ல ; ஒரு ஊரின் பெயரும் பலியாகியிருக்கிறது.
'வேறு எங்கோ போய் கொலை செய்வதுதானே?' என்று உணர்ச்சி மேலிட கேட்கும் அளவுக்கு நாங்கள் சுயநலக்காரர்கள் அல்ல . எந்த ஊரிலும் இது போல தவறு நிகழக்கூடாது.எங்கும் அது மன்னிக்கமுடியாத குற்றமே.

ஆனால் , இது எங்கள் ஊர் . எல்லா சாதியினரும் எந்த பேதமும் இல்லாமல் வாழும்  ஊர்.எங்கள் ஊர் பெயரில் , சாதிச்சாயமோ , கலவரக்கீற்றோ உள்ளே வர நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

ஊடகங்கள் என்ற பெயரில் ஊர் பெயரைக்  கெடுக்க ஓராயிரம் வண்டிகள் வந்தாலும் , உண்மை என்பது மிகத் தெளிவு ; உடுமலை களங்கமற்றது.

நடந்தது கௌரவக் கொலையோ பகையின் மிச்சமோ; அதன் முடிவின் களம் எங்கள் ஊராய் அமைந்ததற்கு , நாங்கள் படுவது நரக வேதனை.  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மட்டுமல்ல , ஊருக்கும் இப்போது தேவை அனுதாபம்.



ஊர் மொத்தமும் ஒன்றாய் கைக்கோர்த்து , உரக்க முழக்கமிடுகிறோம் - சாதிகளுக்கோ , பிரிவினைக்கோ ஊருக்குள் இடமில்லை. அதை வளர்ப்பவருக்கும் இங்கே வேலையில்லை.

நினைவிருக்கட்டும் - இந்த ஒரு கொடிய நிகழ்வால்  , தன்  தவறு ஏதுமின்றி ,  ஒரு ஊர் களங்கமில்லாத தன் சரித்திரத்தில்  , கருப்பு புள்ளியை ஒரு  பக்கத்தில் தெளிக்க நேர்ந்துள்ளது. நாளை  உங்கள் ஊருக்கும் இதே நடக்கலாம்.

சாதியின் பசிக்கு இன்னும் எத்தனை காலம் , எத்தனை  ஊர்களும் நகரங்களும் தங்கள் முகவரியின் புனிதத்தைக்  காவு கொடுப்பது?

இப்படியா நம் மண்ணின் பெருமை உலகத்திற்கு அறியப்படுவது ?


-
அசோக் மூர்த்தி

4 comments:

vishali said...

After loooooong time, writing ur blog.... :) :)

Anonymous said...

Good one bro. It was a real pain to see our town being in flash news for the wrong reason. Sadly for a long time to come udumalpet will be tied along with the other two places (dharmapuri and salem) for TN honour killing incidents. And no media will talk about the feelings of people like us. We have to speak for ourselves. Let us keep spreading our views.

N.H. Narasimma Prasad said...

Well Come Back Bro. என்னடா 'யாருமே இல்லாத கடையில யாருக்கோ டீ ஆத்துறமாதிரி' நான் மட்டும் ப்ளாக் எழுதுற ஒரு பீலிங் இருந்தது. நல்ல வேளை, கம்பெனிக்கு நீங்க எழுத ஆரம்பிச்சிட்டீங்க. உங்கள மாதிரி ஆளுங்க எழுதுறத நிறுத்திட்டா, என்ன மாதிரி ஆளுங்களுக்கு திரும்ப எழுதவே தோணாது. Any way, நல்ல பதிவோட செகண்ட் இன்னிங்க்ஸை ஆரம்பித்திருக்கிறீர்கள். தொடர என் வாழ்த்துக்கள்.

Aditi Gupta said...

They are very useful article. Thanks for sharing very informative post.
India based users always trying to get real instagram followers and other social media services Buy instagram followers India

Post a Comment