Tuesday, April 10, 2012

பாப்கார்ன் பாக்கெட் - 20120410

'மூணு' படத்தின் என் விமர்சனத்தைப் பார்த்து எனக்கு தெரிந்த ஒருவர்     
'உங்களுக்கு என்ன அந்த படத்து மேல அவ்ளோ கோபம்? அப்படியே   இருந்தாலும் அதை சொல்ல உங்களுக்கு என்ன  உரிமை இருக்கு? ரொம்ப ஓவரா போறீங்க' என்று  தாளித்தார். 'பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து பார்த்த எனக்கு இல்லாத உரிமை யாருக்கு இருக்கு?'ன்னு மட்டும் சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

'இவ்ளோ பேசறீங்களே..என் விமர்சனத்தை விமர்சனம் செய்ய உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?ன்னு அவர் பாய்ண்டை திருப்பி அவரையே எதிர் கேள்வி கேட்க   கடைசி வரைக்கும் நான்  யோசிக்கவே இல்லை.பழகின தோஷம்.  

இவங்க எல்லாம்  தான் என்ன நினைக்கிறோமோ அதையே பார்க்கணும், அதை ஆமோதிக்கிற கருத்தை மட்டுமே மத்தவங்க எழுதணும்  பேசணும்ன்னு நினைக்கிறாங்களே தவிர அடுத்த  கோணத்துல ,மத்தவங்க ரசனைக்கும் மதிப்பு கொடுக்கணும்னு யோசனை கூட செய்யறது இல்ல.
 
படத்தை நல்லாயிருக்குன்னு சொல்றவங்ககிட்ட நாம எதிர்வாதம் செய்ய கூடாது.
.'படம் நல்லாயிருக்கு'ன்னு நீயும் சொல்லித்தான் ஆகணும்ன்னு சொல்றவங்கள மதிக்கவே  கூடாது.

இது எல்லாத்துக்கும் பொருந்தும்.

'சுய கருத்துரிமையை விட்டுகொடுத்துதான் நட்பை காப்பாத்திக்கணும்னா அந்த நட்பே தேவை இல்ல'ங்கறது என் கருத்து.
-----------------------------------------------------------------------

அடுத்த ஜனாதிபதி யாரென்று இன்னும் மூன்று மாதத்தில் தெரிந்து விடும். தற்போதைய ரப்பர் ஸ்டாம்ப் பிரதீபா பாட்டில் ,இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை தவிர வேறு எந்த ஒரு சிறு துரும்பையும் கிள்ளி போடவில்லை. எதிர்பார்த்ததுதான்.அதனால் ஏமாறவில்லை.

வாழ்த்துக்கள் பிரதீபா. வரலாறு மிக முக்கியம் என்பதை தெரிந்து அதில் உங்கள் பேரையும் இடம்பெற செய்து விட்டீர்கள்.நீங்கள் ஜனாதிபதியாய் வரவேண்டும் என்று இந்தியாவில் முதன்முதலில் ஆதரவு கூட்டம் போட்ட கலைஞருக்கு ஒரு நன்றியை  அறிவித்து விட்டு விடைபெறுங்கள்.

காங்கிரஸ் சார்பில் மக்களவை சபாநாயகர் மீராகுமார், துணை ஜனாதிபதி ஹமித்அன்சாரி, பிரபல தொழில் நுட்ப நிபுணர் சாம்பிட்ரோடா, நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி, கரண்சிங் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. போன முறை போல இந்த முறையும் கலாம் இந்த போட்டியில் கலந்துகொள்ளாமல் இருந்து விடுவாரோ என்ற வருத்தம் கலந்த எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது.


 மீண்டும் அழைக்கும்படி அவர் அப்படி என்ன செய்து விட்டார் என்று கேட்பவர்கள் , அவரின் முன்னும் பின்னும் இருந்தவர்கள் யாரும் செய்யாத ஒன்றை செய்தவர் என்பதை அறியாதவர்கள். நாட்டுக்கு தன் இளமை காலம் தொட்டு சேவை செய்து அதன் புகழை தாங்கி நிற்கும் தூணாக இருந்த பின்தான் ஜனாதிபதி தேர்தலில் நின்றார்.ஐந்து வருடங்கள் எத்தனையோ மாணவர்களுக்கு தன் பேச்சின் , ஆலோசனையின்  சேவையை வழங்கினார்.

இது எல்லாம் அவர் ஜனாதிபதியாய் இருந்து செய்யவேண்டும் என்பது இல்லை என்பதையும் விளம்பரம் ஏதும் இல்லாமல் அடுத்த ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து செய்து நிருபித்தார். இவரைத் தவிர பொருத்தமானவர் வேறு யார் ?

பாஜக இவரை ஆதரிப்பதாக  செய்திகள் வருகிறது. உண்மையாய் இருந்தால் மிக்க நல்லது. வாருங்கள் கலாம்.
----------------------------------------------------------

மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்ததுபோன்று தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்திருக்கிறார். கூடவே , இந்த உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,383.49 கோடி செலவு ஏற்படும் என்றும் ஒரு ஓரத்தில் கோடிட்டு காட்டியுள்ளார்.சந்தோஷம்.

மின் பற்றாகுறை பிரச்சனை  பூதாகாரமாய் இருக்கும் சமயத்தில் இந்த அறிவிப்பு ஒன்றும் பெரிய அனுகூலத்தை அரசுக்கு கொடுக்காது.  இருந்தாலும் ஆசிரியர்கள் உட்பட சத்துணவு ஊழியர்கள்,வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள் என பலருக்கும் இந்த உயர்வு கொஞ்சம் நிம்மதி அளிக்கும்.

இதை நம்பி நடுத்தர மக்கள்  யாரும் குடும்ப பட்ஜெட்டில் உடனே எந்த திட்டத்தையும் செலவு வகையில் வைத்து விட
முடியாது.  காரணம் பால் , மின் கட்டணம் , மூன்று முறை பெட்ரோல் விலை உயர்வு என்று எல்லாம் சேர்ந்து இதை நேர்படுத்தி விடும்.

எது இங்கிருந்து கொடுக்கப்பட்டதோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
There exists an equation.
---------------------------------------------------

'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' எரிச்சலூட்டுகிறது.  கேள்விகள் தரம் பற்றி அதிகம் விமர்சனம் கேட்டாகி விட்டது.



எனக்கு பெரிய உறுத்தல் சூர்யாவின்  தடுமாறும்  செந்தமிழ் உச்சரிப்பும்,அந்த  மெனக்கெடலுக்காக அவர் படும் பாடும்தான்.  என்னதான் அவர் சிரித்தாலும், பதட்டத்தை மறைக்க முற்பட்டாலும் ஒருவித இறுக்கம் அவரை மீறி தெரிகிறது.

அதை விட போட்டியில் கலந்து கொள்பவர்களின் சுய புராணத்தை விஜய் டிவி அளிக்கும் விதம் மிக கொடுமை. பொழுதுபோக்கு நிகழ்ச்சியை , அதில் கலந்து கொள்பவர்கள் சோகத்தை
( வருத்தத்திற்குரியதுதான் ) வைத்து , நிகழ்ச்சியின் தரத்தை   கெடுக்கிறார்கள்.

பல வருடங்கள் முன்னால் வந்த கோடிஸ்வரன் நிகழ்ச்சி இதை விட நூறு மடங்கு நன்றாக இருந்தது. சரத்குமார் சூர்யாவை  விட நல்ல முறையில் செய்திருப்பார்.
நகைச்சுவையோடு ஒரு எதார்த்தம் அவரிடம் இருந்தது.
-----------------------------------------------------------

சச்சினின் பின்வாங்கல் பெரிய ஷாக். சென்னையை விட மும்பைக்கு இந்த முறை ஆதரவு அளிக்கலாம் என்ற என் எண்ணத்தில் பெரிய தடுமாற்றம். ஹர்பஜனுக்கு எல்லாம் சென்னையை விட்டுகொடுக்க முடியாது.

ஆனால் சென்னைக்கு  கோப்பை இல்லை என்ற கட்டம் உருவானால் என் ஓட்டு  தாதாவுக்கே.  கங்குலி தலைமையில் புனே அணி கொல்கத்தாவை பந்தாட வேண்டும் என்பதே கொல்கத்தா மக்களின் எதிர்பார்ப்பும் கூட. இவர்களுக்கு கோப்பையை விட கங்குலிக்கு போன வருடம் ஷாருக் அளித்த அதிர்ச்சி வைத்தியத்துக்கு மருந்து கொடுப்பதே முக்கிய குறிக்கோள். கானுக்கு இது தேவைதான்.


சென்னை டீம் வழக்கம் போல கலக்கலாகத்தான் இருக்கிறது. தோனி தவிர ரைனா , முரளி விஜய் , பிராவோ கூடவே அஷ்வின் என நல்ல பலமான பட்டாளம். சறுக்கலான காலகட்டத்தில் ஸ்ரீகாந்த் அனிருதா போன வருடம் நன்றாக உதவினார். தோனி எப்போதும் செய்யும் தப்பான ,   முக்கியமான தருணத்தில் ஜோஹிந்தருக்கு ஓவர் கொடுக்காமல் இருந்தால் பல வெற்றிகளை சென்னை பார்க்கலாம்.

இந்த முறை என் சாய்ஸ் சென்னை மற்றும் புனே. Let see who deserve.
----------------------------------------------------

உன்னி மேனன்  குரலில் ரஹ்மானின் அற்புதம்.வைரமுத்து வார்த்தை கையாடல் இந்த பாடலில் உச்சகட்டத்தை எட்டியிருக்கும்.
அதிர்ஷ்டவசமாக ஒளிப்பதிவும், பாடலின்  லொக்கேஷனும்  ,கண்களை உறுத்தாமல் பாடலை முழுதாக ரசிக்க வைக்கிறது. இந்த படம் வணிகரீதியாக தோல்வி அடைந்தாலும் , தமிழுக்கு புதிய முயற்சி. பாடல்கள் அனைத்தும் மிக அருமை.

சுரேஷ் மேனன் இயக்கத்தில் 'புதிய முகம்'  படத்தில் வந்த பாடல். தெலுங்கில் இதே பாடலை எஸ்பிபி பாடியிருந்தாலும் , உன்னி மேனனின் குரல் அதிகம் மயங்க  வைக்கிறது.



'கள்வர்க்கு இரவழகு;காதலர்க்கு நிலவழகு '  -
ஆகச்சிறந்த கற்பனை ஊற்று.
-----------------------------------------

5 comments:

கோவை நேரம் said...

பாப்கார்ன் அருமை,,,

Unknown said...

உண்மைதான் நண்பா.நான் ஒரே ஒரு முறைதான் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி பார்த்தேன்....

ஒரே எரிச்சல் உண்டாயிற்று.சூர்யாவால் தமிழ் வார்த்தைகள் பேச முடியவில்லை

இராஜராஜேஸ்வரி said...

வாழ்த்துக்கள் பிரதீபா. வரலாறு மிக முக்கியம் என்பதை தெரிந்து அதில் உங்கள் பேரையும் இடம்பெற செய்து விட்டீர்கள்.

N.H. Narasimma Prasad said...

இந்த வார பாப்கார்ன் செய்திகள் மிகவும் அருமை அசோக். பகிர்வுக்கு நன்றி.

சுபத்ரா said...

:-)

Post a Comment